under review

கூவன் மைந்தன்

From Tamil Wiki

கூவன் மைந்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கூவன் மைந்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'கூவல் குரால் ஆன்' என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.

இலக்கிய வாழ்க்கை

கூவன் மைந்தன் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 224-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனின் பிரிவால் வாடும் தலைவியை எண்ணி துயருறும் தோழியை கண்ட தலைவி தன் கையறுநிலையை கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

தலைவனை பிரிவால் தனக்கு ஏற்பட்டுள்ள துன்ப நோயை அறிந்து தானும் துன்பப்படும் தோழியை தேற்ற இயலாத தன் கையறுநிலையை தலைவி கூறுகிறாள்.

  • யா மரங்களும் பல கிளை வழிகளும் நீண்ட கடினமிக்க பாதையில் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்துத் துன்பப்படுகிறேன்.
  • உவமை: நள்ளிரவில் கிணற்றில் விழுந்து அல்லல்படும் மாந்தளிர் நிறப்பசுவை கண்டு ஏதும் செய்ய இயலாது தவிக்கும் ஊமையைப் போல என் துயர் கண்டு வருந்தும் தோழியின் நிலையைப் பார்த்து நிற்கிறேன்.

பாடல் நடை

குறுந்தொகை - 224

பாலைத் திணை துறை: தன் துயர் கண்டு விளைந்த தோழியின் துயர் கண்டு ஆற்றாது தலைவி உரைத்தது.

கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2024, 10:11:57 IST