under review

கீதா ராமஸ்வாமி

From Tamil Wiki
கீதா ராமஸ்வாமி

கீதா ராமஸ்வாமி (Gita Ramaswamy) (பிறப்பு: 1953) எழுத்தாளர், பதிப்பாளர், சமூக ஆர்வலர். ஆங்கிலம், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சுயசரிதை, சமூக ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். தெலங்கானா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதில் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்களின் நில உரிமைகளை மீட்டெடுப்பதில் தீவிரமாகச் செயல்பட்டார். எளிய மக்களின் வரலாற்றை, எழுத்துக்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருகிறார்.

பிறப்பு, கல்வி

கீதா ராமசாமி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஷோலாப்பூரில் கிழக்கேமடம் ஹரிஹர ராமஸ்வாமி, லஷ்மி இணையரின் ஐந்து மகள்களில் நான்காவது மகளாக 1953-ல் பிறந்தார். பாம்பேயிலுள்ள கான்வெண்ட் ஆஃப் ஜீஸஸ் மற்றும் மேரி பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். ஒன்பதாவது படிக்கும்போது அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. பதினான்கு வயது வரை சென்னை சாந்தோம் ரோஸ்மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயின்றார். தான் பிறந்த பிராமணக் குடும்பத்தின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து, தனது பதினைந்தாம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கீதா ராமசாமி இடதுசாரி செயல்பாட்டாளரும் தன் தோழருமான சிறில் ரெட்டியை மணந்தார்.

அரசியல் வாழ்க்கை

கல்லூரி நாட்களில் மாணவர் போராட்டங்களில் பங்கேற்றார். இடதுசாரிச் சிந்தனைகளை நோக்கி ஈர்க்கப்பட்டு தன் நண்பர்களுடன் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக அடித்தட்டு நிலைகளில் செயல்பட்டார். தெலங்கானாவின் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியில் இருந்தார். நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு எதிரான தீவிரமான அரசியல் களங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். 1975 நெருக்கடி நிலை காலகட்டத்தின்போது தன் கணவர் சிறில் ரெட்டியுடன் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றார். அப்போது டெல்லியின் காசியாபாத் பகுதியில் ஆங்கிலம் கற்பித்துக்கொண்டிருந்தார். பின்னர் இடதுசாரிப் போராட்டங்களில் மனவிலக்கம் ஏற்பட்டதாலும் அது தன் பாதை இல்லை என உணர்ந்ததாலும் அரசியல் போராட்டங்களை நிறுத்திக் கொண்டு பதிப்பகப்பணிகளில் ஈடுபட்டார்.

அமைப்புச் செயல்பாடுகள்

சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் களச்செயல்பாடுகளில் ஈடுபடும் பொருட்டு 'வியவசாய கூலி சங்கம்' (Vyavasaya Coolie Sangham, Agricultural Labourers Association) என்ற அமைப்பை நிறுவினார். இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் செயல்படும், அடிமட்ட அளவிலான விவசாயி மற்றும் பண்ணைத் தொழிலாளர் சங்கம். நில உரிமைகள், குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP), சிறந்த ஊதியம் மற்றும் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்தது.

போராட்டங்கள்
  • 1984-களில் தெலங்கானா மாநிலத்தின் இப்ராஹிம்பட்டினம் பகுதியில், விவசாயக் கூலிகளை ஒருங்கிணைத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தார். பண்ணையடிமை முறைக்கு எதிராகவும், குறைந்தபட்சக் கூலி கோரியும் இவர் நடத்திய போராட்டங்கள் வெற்றி பெற்றன.
  • தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட, பல நூறு ஏக்கர் நிலங்களை மீட்டு மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கச் செய்தார். இதற்காக ஆதிக்கச் சக்திகளின் கடுமையான அச்சுறுத்தல்களையும், வன்முறைகளையும் எதிர்கொண்டார்.
  • நிலம் தொடர்பான கள ஆய்வு செய்து, நிலமற்றவர்கள், வழக்கறிஞர்கள், நல்ல அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து மாதிரித் திட்டங்களை உருவாக்கினார். சட்டம், நீதிமன்றங்கள் வாயிலாக, விளிம்புநிலை மக்களின் உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ந்து போராடினார். தலித் மக்களின் நிலங்களை மீட்டெடுக்கும் இவருடைய இந்தப் பணிகள் அப்பகுதி மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின. எந்தவொரு அரசியல் கட்சியின் பின்புலமும் இன்றி, சுயாதீனமாகச் செயல்பட்டது இவரது களப்பணியின் முக்கிய அம்சம்.

பதிப்பியல்

கீதா ராமஸ்வாமி 'ஹைதராபாத் புக் டிரஸ்ட்' என்ற லாப நோக்கற்ற பதிப்பகத்தை நிறுவினார். தீவிர சமூகவியல் சார்ந்த தெலுங்கு இலக்கிய நூல்களை பதிப்பித்தார். அலெக்ஸ் ஹேலி முதல் மகாஸ்வேதாதேவி வரை பல முக்கிய எழுத்தாளர்களின் நூல்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதன் மூலம் உலக அளவிலான இலக்கியங்கள், வரலாற்று நூல்களைத் தெலுங்கு மொழியில் மலிவு விலையில் கிடைக்க வழி செய்தார். அம்பேத்கர் எழுத்துகளை தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவருடைய இந்த முன்னெடுப்பு ஒடுக்கப்பட்ட மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் அரசியல் தேடலையும் பரவலாக்கியது. இவரின் பதிப்புப் பணிகள், தெலுங்கு அறிவுலகில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தின.

எழுத்து

கீதா ராமஸ்வாமி ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எழுத்துப் பணிகளிலும் தீவிரமாகக் கவனம் செலுத்தினார். சுயசரிதை, சமூக ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல நூல்களை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய 'Land, Guns, Caste, Woman' என்ற ஆங்கிலச் சுயசரிதை நூல் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்நூலில் இந்திய இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள், தலித் மக்களின் நிலப்போராட்டங்கள் தொடர்பான பல வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சாதிய, ஆணாதிக்க முரண்பாடுகளைத் தனது சொந்த அனுபவங்களின் வழியே விரிவாக விவரித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் மலம் அள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை குறித்து இவர் எழுதிய கள ஆய்வு நூல், அரசு அளவில் சில கொள்கை மாற்றங்களுக்கு வித்திட்டது.

தேவுலாபள்ளி கிருஷ்ணமூர்த்தியின் சுயசரிதையான 'ஊரு, வாடா, படுகு' என்ற நூலை ஆங்கிலத்தில் 'Life in Anantharam' (2016) என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். பெண்ணுரிமைப் போராளியான பி. அனுராதாவின் 'Prison Notes of a Woman Activist' என்ற நூலைத் தொகுத்தார். தெலுங்கில் கௌரி லங்கேஷின் எழுத்துக்களின் தொகுப்பையும் வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • Jeena Hai To Marna Seekho: The Life and Times of George Reddy (2016)
  • The Oxford India Anthology of Telugu Dalit Writing
  • Taking Charge of Our Bodies: A Health Handbook for Women (with Veena Shatrugna)
  • On their own: a socio-legal investigation of inter-country adoption in India
  • India Stinking: Manual Scavengers in Andhra Pradesh (2005)
  • The child and the law
  • Women and law
  • The Lambadas: a community besieged: a study on the relinquishment of Lambada girl babies in South Telangana
  • Land, Guns, Caste, Woman: The Memoir of a Lapsed Revolutionary
தெலுங்கில்
  • Nenu Communistuni (C.K. நாராயணரெட்டியின் சுயசரிதை)
  • Maakoddii candaalam
மொழியாக்கம் (தெலுங்கிலிருந்து)
  • Life in Anantharam (தேவுலாபள்ளி கிருஷ்ணமூர்த்தியின் சுயசரிதை)
  • Here I Am and Other Stories (P. சத்யவதி)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jun-2026, 08:00:47 IST