கருவூர்ச் சேரமான் சாத்தன்
To read the article in English: Karuvoor Cheramaan Sathan.
கருவூர்ச் சேரமான் சாத்தன் சங்க காலப் புலவர். இவர் எழுதிய ஒரு பாடல் குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
சேர அரச மரபைச் சேர்ந்தவர். கருவூரை மையமாகக் கொண்டு அரசாட்சி செய்த மன்னர். சிறுதெய்வமாகிய சாத்தனை வழிபாடு செய்து வந்ததால் கருவூர்ச் சேரமான் சாத்தன் என்றழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
குறுந்தொகையில் நெய்தல் திணையில் இவர் எழுதிய பாடல் ஒன்று காணப்படுகிறது. ’தலைவன் சிறைப்புறத்தே இருப்ப, இரவுக் குறியின்கண் உண்டாகும் ஏதத்துக்கு அஞ்சுதலையும், தலைவனது வருகையின் இன்றியமையாமையையும் தோழி தலைவிக்குக் கூறி, வரைந்து கோடலே தக்கதெனப் புலப்படுத்தியது’ என்ற துறையில் வரும்.
பாடல் நடை
- குறுந்தொகை
'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்;
'வருவிரோ? என வினவலும் வினவாம்;
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின்
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு
நடு நாள் என்னார், வந்து,
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3
- தமிழ் இணையக் கல்விக்கழகம்-தோழி கூற்று
✅Finalised Page