under review

கயிற்றரவு

From Tamil Wiki

கயிற்றரவு : பிரம்மவாதத்தை முன்வைக்கும்பொருட்டு பயன்படுத்தப்படும் உவமை.இந்த பிரபஞ்சம் மாயை, பிரம்மமே உண்மை, மாயையின்போது இல்லாத பிரபஞ்சம் உண்மையென்றே தெரிகிறது என்று விளக்க யோகாசார பௌத்தர்களாலும் வேதாந்திகளாலும் இது பயன்படுத்தப்படுகிறது. அத்வைத மரபின் முதன்மை உவமைச்சான்றுகளில் ஒன்றாக இது உள்ளது,

உவமை

ஆங்கிலத்தில் தத்துவ விவாதங்களுக்கு பயன்படுத்தப்படும் உவமை கருத்துருவகம் (Allegory) எனப்படுகிறது. இந்திய நியாயவியல் அதை உபமானப் பிரமாணம் (உவமைச்சான்று) என்று குறிப்பிடுகிறது. ஓர் அருவமான கருத்தை தர்க்கபூர்வமாக அவையொன்றில் நிரூபிக்கவேண்டும் என்றால் அந்த அவை ஏற்றுக்கொள்ளும் ஓர் உவமையைச் சொல்லி அந்த உவமையை நிரூபித்தாலே போதும் என்பது இதன் வழிமுறை

தோற்றம்

கயிற்றை பாம்பென அரையிருட்டில் மயங்குதல் போல என்னும் உருவகம் தொடக்ககால வேதாந்த நூல்களிலும், பௌத்த நூல்களிலும் உள்ளது.

உபநிடதங்கள்

கயிற்றரவு என்னும் உருவகம் பிற்கால உபநிடதங்களில் உள்ளது. இந்த உபநிடதங்கள் பொ.மு. 100 முதல் பொ.யு. 200 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது

நிர்வாண உபநிடதம் 'அறியப்படும் இவ்வுலகம் நிலையற்றது, கற்பிதம் செய்யப்பட்டு உருவாவது. கனவில் கண்ட உலகம் போல. முகில்களில் யானை போல. பல்வேறு பொருட்களின் தொகையாகிய அன்னம் ஏராளமான மாயத்தோற்றங்களாலானது. கயிற்றில் பாம்பு தெரிவதுபோல' (28)

தேஜோபிந்து உபநிடதம் 'கயிற்றை பாம்பென ஒருவன் மயங்கலாம் எனில் அன்றாட உண்மையும் மாயத்தோற்றமாகலாம். சுடரிடும் நெருப்பு தங்க அம்பினால் அணைக்கப்படலாகும் எனில் இவ்வுலகும் அவ்வாறு அவிக்கப்படலாம்' (77) என்று கூறுகிறது.

பௌத்தம்

கயிற்றரவு என்னும் உருவகம் தொடக்ககால பௌத்த நூல்களில் உள்ளது.

யோகாசார பௌத்த ஆசிரியரான் அசங்கர் (பொ.யு. 310-290) தன் மகாயான சம்கிரகம் என்னும் நூலில் இருண்ட அறையில் நுழைபவன் கயிற்றை பாம்பென எண்ணி மயங்குவது போல என்னும் உவமையை கையாள்கிறார்

ஆரியதேவரின் (பொ.மு. 200) சித்தவிசுத்தி பிரகரணம் என்னும் நூலில் 68-ம் சூத்திரத்தில் பாம்பும் கயிறும் என்னும் உவமை காணக்கிடைக்கிறது. பொமு 150 ஐ சேர்ந்ததாக சொல்லப்படும் அபிதம்ம மகாவிஃபாஸா என்னும் நூலில் இந்த உவமை உள்ளது.

நாகார்ஜுனர் அவருடைய மூலமாத்யமிக காரிகை என்னும் புகழ்பெற்ற நூலில் 'பாம்பை தவறாக புரிந்துகொள்வதுபோல' என்னும் வரியை பயன்படுத்துகிறார். அது இந்த உவமையைக் குறிக்கிறது

நாகார்ஜுனரின் நூல்களுக்கு விளக்கம் எழுதிய மாத்யமிக மரபைச் சேர்ந்த சந்திரகீர்த்தி (பொ.யு .600- 650) யின் நூலில் இந்த உவமை காணப்படுகிறது. ஆர்யதேவரின் சதுஷ்சதகா எனப்படும் மாத்யமிக நூலுக்கான விளக்கவுரையில் இந்த உவமையைச் சந்திரகீர்த்தி பயன்படுத்துகிறார்.

ஆர்யதேவரின் சதுஷ்சதகாவின் 178-ம் சூத்திரம் இது

அறிதல் அன்றி விழைவுக்கும் அதன் வளர்ச்சிக்கும்
இருப்பென்று ஏதுமில்லை
அறிவுடையோர் அறிக
பொருண்மை என்பது அறிதல்.

இந்த வரிகளுக்கு சந்திரகீர்த்தி "அறிதல் நிகழும்போது மட்டுமே இருத்தல்கொண்டவையும் அறிதல் நிகழாதபோது இருத்தல் இல்லாமல் ஆகின்றவையுமான அனைத்தும் தங்கள் இயல்பால் இருத்தல் கொள்ளவில்லை, கயிறுச்சுருள் பாம்பாக தெரிவதுபோல" என விளக்கம் அளிக்கிறார்ர

திபெத்திய பௌத்த ஞானி ஜெ சோங்காப்பா (Je Tsongkhapa .1357–1419) இந்த உவமையை பயன்படுத்தியிருக்கிறார்.பிற்கால பௌத்த உரையாசிரியர்கள் நாகார்ஜுனரின் பார்வையை விளக்க இந்த உவமையைப் பயன்படுத்தியுள்ளனர்.

சங்கரர்

கயிற்றரவு உவமையை சங்கரர் பயன்படுத்தியதாக சங்கர மரபினர் சொல்வது வழக்கம். பிற்கால அத்வைதிகளின் உரைகளில் இந்த உவமை இடம்பெறுகிறது. சங்கரரின் நூல்களில் நேரடியாக இந்த உவமை இல்லை.

பயன்பாடு

தத்துவ விவாதங்களில் உபமானப் பிரமாணமாக ஒரே உவமையை பயன்படுத்துவது இந்திய நியாயவியல் காட்டும் மரபு. இல்லாத ஒன்றை அறிபவன் மனமயக்கத்தால் அதை மெய்யாகவே இருப்பதாக உணரமுடியும் என்று காட்டுவதற்கு 'கயிற்றரவு' என்னும் உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இருண்ட அறையில் கயிற்றைக் காண்பவன் அதை பாம்பென்றே அறிகிறான். அப்போது அது பாம்பாகவே இருக்கிறது. ஒளி வந்து அச்சம் விலகும்போது கயிறு தெரிகிறது, அப்போது பாம்பு இல்லாமலாகிவிடுகிறது. மாயையால் உருவாகும் யதார்த்தம் மாயை கலையும்போது மறைந்துவிடுகிறது.பொருள்வயமான உண்மை என ஏதும் இல்லாமலேயே வெறும் அறிதல் மட்டுமே ஒரு முழு யதார்த்தத்தையும் உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணம் இது.

சமானமான உவமைகள்

கயிற்றரவுடன் இணையாகச் சொல்லப்படும் உவமைகள்:கடற்கரை மணலில் கிடக்கும் சிப்பி வெள்ளி என தெரிவது. கனவில் கண்ட யதார்த்தம் விழித்ததும் மறைந்து விடுவது.

இலக்கியத்தில்

  • ஆங்கிலத்தில் ராஜாராவ் Serpent and Rope என்னும் நாவலை எழுதியிருக்கிறார். அது 'கயிறும் பாம்பும்' என தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது
  • புதுமைப்பித்தன் கயிற்றரவு என்னும் புகழ்பெற்ற சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார்[1]
  • ஜெயமோகன் கயிற்றரவு என்னும் கதையை எழுதியுள்ளார்[2]

உசாத்துணை

Rope-snake example in Upanishads

அடிக்குறிப்புகள்


✅Finalised Page