under review

கந்தரனுபூதி

From Tamil Wiki

கந்தரனுபூதி(கந்தர் அனுபூதி) அருணகிரிநாதரால் தமிழ்க் கடவுள் முருகனைப் போற்றி, 15-ம் நூற்றாண்டில் பாடப்பட்டது.

ஆசிரியர்

கந்தரனுபூதியின் ஆசிரியர் அருணகிரிநாதர். இவர், 1370-ல் திருவண்ணாமலையில் கைக்கோள செங்குந்தர் மரபில் பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. அருணகிரிநாதர் இயற்றிய நூல்கள்:

  • கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
  • கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
  • கந்தரனுபூதி (52 பாடல்கள்)
  • திருப்புகழ் (1307 பாடல்கள்)
  • திருவகுப்பு (25 பாடல்கள்)
  • சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
  • மயில் விருத்தம் (11 பாடல்கள்)
  • வேல் விருத்தம் (11 பாடல்கள்)
  • திருவெழுகூற்றிருக்கை

பதிப்பு

மாவட்ட நீதிபதியாக இருந்த வ.த. சுப்ரமணிய பிள்ளை சிதம்பரத்தில் ஒரு விவாதத்தில் அருணகிரிநாதரின் பாடல்களைக் கேட்டு அதன்மேல் ஆர்வம் கொண்டார். அவை அப்போது வெவ்வேறு ஓலைச்சுவடிகளிலாக சிதறி பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்தன. தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்த வ.த. சுப்ரமணிய பிள்ளை, அருணகிரிநாதர் பாடல்களை இரண்டு தொகுதிகளாக 1871-ம் ஆண்டு வெளியிட்டார். 1894-ம் ஆண்டு முதலாவது பதிப்பும், 1901-ம் ஆண்டு இரண்டாவது பதிப்பும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

பெயர்க்காரணம்

அனுபூதி என்பது அனுபவச் செல்வம். அனு -உடன். பூதி - ஆதல். அனுபூதி என்பது உடனாதல். கந்தரனுபூதி என்பது கந்தனுடன் ஒன்றாதல் எனப் பொருள்படும்.

'அனு- அனுபவம். 'பூதி- புத்தி அல்லது அறிவு.அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

நூல் அமைப்பு

கந்தரனுபூதி நான்கு அளவடிகள் கொண்டு, ஆசிரியச் சீர்களினால் இயற்றப்பட்டு நிலைமண்டில ஆசிரியப்பாக்களால் அமைந்தது. பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை பெற்றன.

கந்தரனுபூதியில் காப்பு பாடலைச் சேர்த்து மொத்தம் 52 பாடல்கள் உள்ளன. இவற்றோடு மேலும் சில பாடல்களைச் சேர்த்து 105 பாடல்கள் கொண்ட பதிப்புகளும் உள்ளன. முருகன் தனக்குக் குருவாய் வரவேண்டும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" - (51)

தஞ்சை சரஸ்வதி மகால் ஏட்டின் இறுதிப்பாடல்

ஒருகால் அடியேன் மனம் உன்னை நினைத்து
உருகாது உருகும்படி தந்தருள்வாய்
பெருகு ஆழியிலும் துயிலும் பெருமாள்
மருகா முருகா மயில் வாகனனே". –
            பாடல் 51, தஞ்சை சரஸ்வதிமஹால் ஏடு.

கந்தரனு பூதிதன்னைக் கற்(று)உரைப்போர் தங்களிடம்
வந்தவினை அத்தனையும் மாயுமே – செந்தண்
திருத்தணியில் வாழ்முருகா சேயோர் அடியார்
கருத்தணியில் வாழ்ந்திருப்பர் காண்"

என்னும் வெண்பாவோடு இந்த நூலை முடிப்பாரும் உண்டு.

'பேசா அனுபூதி பிறந்ததுவே' (பாடல் 43) என்னும் பாடலோடு நூல் முடிகிறது என்றும்,' சும்மா இரு சொல்லற' என்னும் வேண்டுகோளுடன் (பாடல் 12) நூல் முடிகிறது என்றும் கருதுவர் உள்ளனர்.

சிறப்புகள்

கந்தரனுபூதி பாடல்கள் ஒவ்வொன்றும் 'முருகன்' என்னும் சொல்லுக்கு விளக்கம் தருவனவாகவும் அவனுடைய திருவிளையாடல்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன. வள்ளிப்பிராட்டியாரைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கந்தரனுபூதியில் முருகனின் திருவுரு, ஊர்தி, படை, கொடி முதலானவை கூறப்படுகின்றன. ஈதல் வலியுறுத்தப்படுகிறது. அக நிகழ்ச்சிகளாகிய யாகம் மற்றும் நாதவிந்துக்களின் சேர்க்கையைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. பாசத் தளையில் கலங்கிய நிலை, மனம் அமைதி பெற்றுத் தவத்தில் ஒன்றிய நிலை, முருகன் திருவருள் பெற்ற ஞானநிலை, உபதேச நிலை என்னும் நான்கு பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன. திருமந்திரத்துக்கு ஒப்பானதாக கந்தரனுபூதியைக் கொள்பவர் உண்டு.

பாடல் நடை

பொருளாவது எது?

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.

சும்மா இரு சொல்லற

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

வீழ்வாய் என என்னை விதித்தனையே

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

உசாத்துணை


✅Finalised Page