கணாதர்
கணாதர் (பொமு 2 முதல் 10 நூற்றாண்டு வரை) இந்து தத்துவ மரபான வைசேஷிகத்தின் முதன்மை ஆசிரியர்.
பெயர்
இப்பெயருடைய பல முனிவர்கள் வேதகாலம் முதல் உள்ளனர். கணாதன் என்ற பெயர் கணங்களை உண்பவன் என்னும் பொருள் கொண்டது. கணங்களின் தலைவன் என்றும் பொருளுண்டு. இப்பெயரைக்கொண்டு பல ஊகங்களும் செய்யப்படுகின்றன. கணாதர் ஓர் அறிஞர்குழுவின் தலைவராக இருந்தவர் என்று ஊகிக்கலாம்.
பிறப்பு
இவர் காசியப கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம், ஏனென்றால் சில நூல்களில் இவர் காசியபர் என குறிப்பிடப்படுகிறார். கணாதர் குஜராத்தில் துவாரகையில் பிறந்தார் என ஒரு தொன்மநம்பிக்கை உள்ளது
காலம்
இவருடைய காலம் என்ன என்று கணிக்க எந்த வகையான ஆதாரங்களும் இல்லை. பொமு 2 முதல் பொமு 10 நூற்றாண்டு வரை இவருடைய காலத்தை வெவ்வேறு அறிஞர்கள் ஊகிக்கிறார்கள். வைசேஷிக சூத்ரங்களை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்த நந்தலால் சின்கா கணாதரின் காலம் பொமு ஆறாம் நூற்றாண்டுக்கு பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையேயாக இருக்கலாமென ஊகிக்கிறார். பல ஊகங்களில் பொதுவாக ஏற்கப்படுவது இதுவே.
பங்களிப்பு
இந்து மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று வைசேஷிகம். அதன் மூலநூலாகக் கருதப்படுவது வைசேஷிக சூத்ரம் அதை இயற்றியவர் கணாதர். இவர் தனக்கு முன்பிருந்த வெவ்வேறு ஆசிரியர்களின் தரப்புகளை ஒன்றாக்கி வைசேஷிகத் தத்துவ மரபை நிறுவினார். வைசேஷிகம் என்ற பெயரே இவருடைய நூலில் இருந்து வந்திருக்கலாம்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 06:37:59 IST