under review

ஐசக் தம்பையா

From Tamil Wiki
ஐசக் தம்பையா

ஐசக் தம்பையா (ஆகஸ்ட் 19, 1869-1941) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இறையியலாளர், கல்வியாளர், வழக்கறிஞர்.

பிறப்பு, கல்வி

ஐசக் தம்பையா இலங்கை யாழ்ப்பாணம் மானிப்பாயில் ஆறுமுகம் தம்பிப்பிள்ளைக்கு ஆகஸ்ட் 19, 1869-ல் பிறந்தார். தந்தை ஆசிரியர், மானிப்பாய் செம்பா உடையாரின் பேரன். ஐசக் தம்பையா ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் அர்ச். யோவான் கல்லூரியில் பயின்றார். பின்னர் கொழும்பு அர்ச். தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1912-ல் இங்கிலாந்துக்குச் சென்று, ’கிரேய்ஸ் இன்’ (Gray's Inn) சட்டக் கலாசாலையில் 'பரிஸ்டர்'(Barrister) பட்டம் பெற்றார். இலங்கையிலிருந்து முதன்முதலாக கிரேய்ஸ் இன் கல்லூரியில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர் ஐசக் தம்பையா. கிறிஸ்துவ சமய சாஸ்திரத்தில் இவருக்குக் ’கலாநிதி’ (Doctor) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஐசக் தம்பையா தெல்லிப்பழையைச் சேர்ந்த ஜே. டபிள்யூ. பார் குமாரகுலசிங்க முதலியார் என்பவரின் இளைய மகளான மங்களநாயகத்தைத் திருமணம் செய்தார். மங்களநாயகம் நொறுங்குண்ட இதயம்(1914), 'அரியமலர்' (1926) ஆகிய இரண்டு புதின நூல்களை எழுதினார். இவரது தந்தை குமாரகுலசிங்க முதலியார் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

பணி

ஐசக் தம்பையா 1899 முதல் 1901 வரை யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1908-ம் ஆண்டில் கொழும்பு திரும்பி உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1913-ல் மலேயாவுக்குச் சென்று பினாங்கு மாநிலத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

ஆன்மிகம்

ஐசக் தம்பையா மலாயாவில் இருந்த போது இறையியலில் பட்டம் பெற்று திருச்சபையில் குருவாகப் பணியாற்றினார். 1924-ல் கிறிஸ்தவ சமய உதவி குருவாக நியமனம் பெற்றார். அடுத்த இரண்டாண்டுகளில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு சுண்டிக்குளி பரி. யோவான் திருச்சபையில் 1938 வரை பணியாற்றினார். 1940-களின் ஆரம்பத்தில் கொழும்பு சான் செபஸ்டியன், புனித திரித்துவத் திருச்சபையில் பணியாற்றினார். கொழும்பு இறையியல் பாடசாலையில் துணை அதிபராகவும் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

ஐசக் தம்பையா ஜூன் 9, 1934-ல் யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆரம்பிக்கும் நோக்கோடு நிறுவப்பட்ட குழுவின் துணைத் தலைவராக இருந்தார்.

இதழியல்

தோமையார் கல்லூரி இதழின் ஆசிரியராக இருந்தார். ஐசக் தம்பையா 1893-ல் "சிலோன் றிவியூ" (Ceylon Review) என்ற பெயருடன் ஆங்கில இதழைத் தொடங்கினார். 1895-ல் ’பீரியட்’ (Period) என்னும் பெயருடன் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். சில மாதங்களில் அது நின்றது. 1904-ம் ஆண்டில் 'The Christian Review' என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

ஐசக் தம்பையா கல்லூரி காலத்தில் 'Garland of Ceylon verses', 'By the Bridge' ஆகிய இரண்டு கவிதை நூல்களை எழுதி வெளியிட்டார். இலங்கை ஆளுமைகள் பலரின் வரலாறுகளை எழுதினார். தாயுமானவரின் பாடல்களை ’Psalms of a Saiva Saint' என்ற நூலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். திருமந்திரம், தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் இலக்கியங்களிலும் சைவ சித்தாந்த சாஸ்திரத்திலும் புலமை பெற்றவர். சட்டவியல் நூல்கள் பல எழுதினார்.

மறைவு

ஐசக் தம்பையா 1941-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • Psalms of a Saiva Saint (1925)
  • A Garland of Ceylon Verse 1837-1897
  • A Tamil Mystic
  • Forgleams of God
  • Erangelism in Ceylon
  • The Salt of the Earth
  • In the Days of Sambasiva
  • Golden Verse Collection of Ceylon
  • Digests of the Law of Contract and Commentary on the Ceylon Penal Code (1897)
  • Gleams of God: A Comparative Study of Hinduism, Buddhism, and Christianity (1925)

உசாத்துணை


✅Finalised Page