உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1968-ல், சென்னை தரமணியில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்க் கல்வியில் ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல், தமிழ் ஆய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நோக்கங்கள்
கீழ்க்காணும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
- தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல்.
- தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல்.
- தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல்.
- தமிழின் பெருமையை அயலவருக்கு எடுத்துரைத்தல்.
- உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல்.
- தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழ் கற்பித்தல்.
திட்டப் பணிகள்
தலைவர், துணைத்தலைவர், இயக்குநர், செயலாளர் போன்றோரைக் கொண்ட ஆளுகைக்குழு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை வழி நடத்துகிறது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியியல் புலம், சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலம், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலம், அயல்நாட்டுத்தமிழர் புலம் எனப் பல்வேறு துறைகள் மூலம் தமிழ் ஆராய்ச்சியை முன்னெடுத்து வருகிறது.
ஆய்வு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சுவடியியல், பதிப்பியல், கல்வெட்டியல், ஊடகவியல், தொல்லியல் துறை சார்ந்த ஓராண்டு பட்டயப் படிப்புகளை நடத்திவருகிறது. முதுகலைப் படிப்புகளையும் நடத்துகிறது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் எம்.பில் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
நூல் வெளியீடு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், நாட்டுடைமை ஆக்கப்பட்ட அறிஞர்களின் நூல்களையும், அரிய நூல்கள் பலவற்றையும் மின்னூலாக்கம் செய்து, அனைவரும் வாசித்துப் பயன்படுத்தும்படித் தனது இணையத்தில் பதிவேற்றியுள்ளது.
இதழ்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழாய்வு வளர்ச்சிக்காக தமிழியல் என்ற காலாண்டு ஆய்விதழை நடத்தி வருகிறது.
அறக்கட்டளைகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், தமிழாய்வு மேம்பாட்டிற்காகவும் பல்வேறு அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1989 தொடங்கி 2014 வரை 49 அறக்கட்டளைகளினூடாக 272 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றுள் பல நூல்களாக வெளிவந்தன.
நிகழ்வுகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு கூட்டங்களையும், பன்னாட்டுக் கருத்தரங்குகளையும், பயிலரங்குகளையும், சொற்பொழிவுகளையும், நினைவேந்தல் நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகிறது.
தொடர்பு நிறுவனங்கள்
- தமிழ் வளர்ச்சித் துறை
- தமிழ்ப் பல்கலைக் கழகம்
- தமிழ் இணையக் கல்விக்கழகம்
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம்
- உலகத் தமிழ்ச் சங்கம்-மதுரை
- போன்றவை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள்.
உசாத்துணை
✅Finalised Page