under review

இராம. சுப்பையா

From Tamil Wiki
இராம. சுப்பையா

இராம. சுப்பையா, (ஜனவரி 2 , 1933 - நவம்பர் 25, 1969) மலாயா பல்கலைக்கழக இந்தியதுறை தலைவராக பொறுப்பு வகித்தவர். கல்வியாளராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றியதோடு பல்வேறு சமூகச்செயல்பாடுகளிலும், மலேசிய தமிழ் இலக்கியம் சார்ந்த ஆய்வுப்பணிகளிலும் முக்கியப் பங்காற்றியவர்.

பிறப்பு, கல்வி

இராம. சுப்பையா, ஜனவரி 2, 1933-ல் வெகுபட்டி, புதுக்கோட்டையில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் திரு இராமநாதன் செட்டியார், தாயார் திருமதி மீனாட்சி அம்மாள். உடன்பிறந்தவர் கல்யாணி. 1959-ல் சரோஜா என்பவரை திருமணம் புரிந்தார். இவருக்கு இளவேனில் எனும் மகள் உள்ளார்.

இராம. சுப்பையா, தன் இளமைக் கல்வியை பேராக் மாகாணத்தைச் சேர்ந்த கோலகங்சார் சிற்றூரில் பெற்றார். இடைநிலைக் கல்வியை கோலகங்சார் கிளிஃபோர்ட் (Clifford) பள்ளியில் கற்றார். 1957-ம் ஆண்டு மலாயாப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை கலைப்பிரிவு மாணவராகச் சேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், கலை, வரலாறு ஆகியவற்றைப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் பயின்றார்.

இவருக்குத் தமிழ் கற்பித்தவர் பேராசிரியர் முத்து இராசா கண்ணு. ஆங்கிலம் பயிற்றுவித்தவர் மோரிஸ் பேக்கர் (மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர்) இராம. சுப்பையா தமிழ் பயின்ற மாணவர்களுள் முதல்வராக முதல் வகுப்பில் தேறி, 1960-ம் ஆண்டு பி.ஏ. பட்டம் பெற்றார். மறு ஆண்டில் தமிழ்மொழியை மட்டுமே பாடமாகக் கொண்டு பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர் 1963-ல் கீழ்ப் பேராக் மாகாணத்தில் வழங்கும் தமிழ்ப் பேச்சு வழக்குகளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார். 1910-ல் Jules Bloch என்பவரின் ஆய்விற்குப் பின் அதே துறையில் இராம. சுப்பையா மேற்கொண்ட இவ்வாய்வானது சமூக கட்டமைப்பில் அடிநிலையில் வாழும் மக்களின் பேச்சுவழக்குகளை ஆராய்ந்துள்ளதன்வழி இந்தியாவிலும் மலேசியாவிலும் தமிழில் இத்துறைசார் முதலாய்வு எனும் அடையாளம் பெற்றது.

1965-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவாகிய London School of Oriental & African Studies எனும் ஆய்வியல் துறையில் தமிழ்மொழி சொற்றொடர் அமைப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டமைக்காக முனைவர் பட்டம் பெற்றார்.

இராம. சுப்பையா கல்லூரி நாட்களில் பொருளாதார சிக்கல்களில் பெரும் துன்பங்களை எதிர்கொண்டார். தொடக்கக் காலத்தில் அவருக்கு ‘தமிழ் எங்கள் உயிர்' என்கிற நிதியுதவி கிடைத்தது. நண்பர்களின் துணையும் உதவியும் அவரது தொடக்ககால கல்வி தடைபடாமல் இருக்க பேருதவியாக இருந்துள்ளது. சிறந்த மாணவராக திகழ்ந்த அவருக்கு, தமிழ் எங்கள் உயிர் நிதி, Asia Foundation, Lee Foundation, Inter-University Council for Higher Education, University of Research Council உள்ளிட்ட அமைப்புகள் கல்வி உபகார நிதி வழங்கின.

குடும்பம், தனிவாழ்க்கை

இராம. சுப்பையா

பள்ளி வாழ்க்கை முடிவுற்றதும் கோலகங்சாரிலேயே ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர் 1957-ல் அப்பணியில் இருந்து விலகி, மலாயாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியை மேற்கொண்டார். முதுகலை ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலங்களில் அப்பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளராகவும் இருந்தார். 1965-ல் லண்டனில் முனைவர் கல்வியை முடித்து, அதே ஆண்டில் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் முழுநேர விரிவுரையாளராக பணியமர்ந்தார். 1965 தொடங்கி 1969 வரை விரிவுரையாளராகவும் ஜூலை 18, 1969 - நவம்பர் 25, 1969 வரை துறைத் தலைவராகவும் பணியாற்றினார். முத்து இராச கண்ணனார், தனிநாயகம் அடிகளார் ஆகியோருக்குப் பிறகு இந்திய ஆய்வியல் துறையின் தலைவராக பணியேற்றார்.

மொழி, இலக்கியப் பங்களிப்புகள்

புனைவுகள்

தமிழுடன் ஆங்கில மொழியிலும் புலமை பெற்றிருந்த முனைவர் இராம. சுப்பையா நேரடியாக ஆங்கிலத்தில் படைப்புகளை வெளியிட்டுள்ளார். கல்லூரி நாட்களில் அவர் எழுதிய ஆங்கில கவிதைகள் ஆங்கிலப் பிரிவின் வெளியீடுகளிலும் மாணவர் சங்க இதழ்களிலும் இடம் பெற்றன.

மொழிபெயர்ப்பு

ஆங்கில கவிதை உலகில் அவருக்கிருந்தப் பயிற்சி, பின்னாளில் பல தமிழ் கவிதைகளையும் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பெரிதும் உதவியுள்ளது. பாரதியாரின் குயில் பாட்டு, மலேசியக் கவிஞர் ஐ. உலகநாதனின் கவிதைகள், குறுந்தொகை பாடல்கள், வேறு பல சமயப் பாடல்களும் இவரின் மொழிபெயர்ப்பு வாயிலாக ஆங்கில உலகிற்கு அறிமுகமாகியுள்ளன. இதேபோல, இந்திய ஆய்வியல் துறை மாணவர்களின் இதழாகிய தமிழ் ஒளி, ஆங்கிலப் பகுதியின் வெளியீடாகிய தெங்காரா, சிங்கப்பூர் பல்கலைக்கழக ஆங்கிலப் பகுதியின் வெளியீடாகிய Poetry-Singaporeவிலும் இவருடைய மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன. மலேசியக் கவிஞர் ஐ. உலகநாதனின் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன் சந்தனக் கிண்ணம் எனும் ஐ. உலகநாதனின் கவிதைத் தொகுப்பையும் தன் மாணவர்களுக்குப் பாடநூலாக ஆக்கினார். 'காதல் மொழிகள்' எனும் பெயரில் ஆங்கில மொழிபெயர்ப்பில் குறுந்தொகை பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றும் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளிவராமல் அவரது மறைவால் தடைபட்டு நின்றுவிட்டன.

உரைநடையிலும் இவருடைய மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன. மலாயா சமூகவியல் ஆய்வு கழகத்தின் ‘இன்டிசாரி’ எனும் இதழை தமிழில் ‘வித்து’ எனும் பெயரில் முழுக்க மொழிபெயர்த்துள்ளார்.

மலாக்கா மன்னர்கள் வரலாறு
ம்.jpg

இராம. சுப்பையா, 1968-ல் ‘செஜாரா மலாயு’ எனும் வரலாற்று நூலை ‘மலாக்கா மன்னர்கள் வரலாறு’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளார். இந்நூல் அவர் மலேசிய இலக்கியத்திற்குச் செய்த கொடையாகக் கருதப்படுகிறது.

ஆய்வுகள்

ஆய்வுக் கட்டுரைகளில் அதிகமும் கவனம் செலுத்திய முனைவர் இராம. சுப்பையா, 60,70-களில் ஆங்கில மொழியில் மதிப்பு வாய்ந்த இந்தோ-இரானியன் ஜர்னல் எனும் ஆய்விதழில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பு குறித்து தொல்காப்பியர் கூறுவன பற்றி எழுதிய கட்டுரை ஆய்வுலகில் அதிக கவனம் பெற்றது. ஊடே, மலாய் மொழி பயிற்றுவிக்கும் முறையிலும் இவரது பங்களிப்பு கவனம் பெற்றது. அஸ்மா ஹாஜி ஓமார் எனும் மலாய் விரிவுரையாளருடன் இணைந்து இவர் எழுதிய ‘மலாய் மொழி இலக்கணத்திற்கு ஓர் அறிமுகம்’ எனும் நூல் அத்துறையில் முன்னோடியாக இருந்ததுடன் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடநூலாகவும் வைக்கப்பட்டது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலங்களில் முனைவர் பட்டத்திற்காகவும் முதுகலை பட்டத்திற்காகவும் ஆய்வு மேற்கொண்ட மாணவர்களுக்கு மேற்பார்வையாளராகவும் இருந்துள்ளார்.

இராம. சுப்பையா, தமிழ்மொழியினை தமிழரல்லாதார்க்குக் கற்பிக்கும் முறையில் அறிவியல் நெறியினை மேற்கொண்டு An introduction to written Tamil (எழுத்துத் தமிழுக்கு ஓர் அறிமுகம்) எனும் நூலை எழுதினார். இந்நூல் இந்திய ஆய்வியல் துறையில் இளங்கலை கல்விக்கான பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டது. கூடுதலாக, இந்திய ஆய்வியல் துறையை விரிவுபடுத்த பேராசிரியர் எஸ். அரசரத்தினம் உள்ளிட்டவர்கள் முயன்ற காலங்களில் முனைவர் இராம. சுப்பையாவின் கருத்துகளும் ஆலோசனைகளும் முக்கியமானதாக இருந்துள்ளன. குறிப்பாக, தமிழரல்லாதார்க்குத் தமிழ்க் கற்பிக்க அறிவியல் நெறியோடு அவர் கொண்டுவந்த திட்டம் பின்னாளில் இந்திய ஆய்வியல் துறையில் தமிழரல்லாத மாணவர்கள் தமிழ்ப் பயில வித்திட்டதுடன் துறையின் விரிவாக்கத்தையும் சாத்தியப்படுத்தியது.

மலேசியாவில் தமிழ்க் கல்வியின் நிலையில் இவரது கவனம் குறிப்பிடத்தக்கது. 1969-ன் தொடக்கத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் நடத்திய தமிழ்க் கல்வி கருத்தரங்கில் மலேசியாவில் தமிழ்க் கல்வியின் தற்கால நிலையையும் வருங்காலத்திற்கான வழிமுறைகளையும் விளக்கி விரிவான ஆய்வுக் கட்டுரை படைத்துள்ளார்.

இலக்கியச் செயல்பாடு

தமிழ் இலக்கிய வட்டம்

இராம. சுப்பையா, 1968-ம் ஆண்டு தொடங்கி சனிக்கிழமைதோறும் பல்கலைக்கழகத்திலேயே மலேசியச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி விவாதிப்பதற்காக பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய வட்டம் ஒன்றை உருவாக்கினார். அவரது மறைவுக்குப் பின்னரும் இந்த குழு சில ஆண்டுகள் தொடர்ந்து இயங்கியது.

தமிழ் மலேசியானா நூல்
ம்ம்.jpg

மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் அச்சுத்துறைக்கும் இவர் முயற்சிகளில் சிகரமாக திகழ்வது தமிழ் மலேசியானா எனும் நூற்தொகையாகும். இவ்வேட்டில் தானும் தனது நண்பர்களும் திரட்டிய மலேசிய அச்சுப் பிரதிகளின் பட்டியல் ஒன்றை உருவாக்கியுள்ளார். மலேசியாவில் தமிழ் அச்சுப் பிரதிகள் குறித்த ஒரே முக்கிய ஆவணமாக இது விளங்குகிறது. மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் அச்சுப் பிரதி வரலாறு போன்ற ஆய்வுகளுக்கு இந்நூல் இதுகாறும் இன்றியமையாததாக விளங்குகிறது. 1969-ம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழக நூலகம் ‘தமிழ் மலேசியானா’ எனும் பெயரில் இந்நூலைப் பதிப்பித்தது.

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்புகள், நாவல்கள் போன்றவற்றை வெளியிடுவதற்கான திட்டத்தை வகுத்து, அதற்குரிய பொருளுதவியை நாட்டுக்கோட்டை செட்டியார்களிடமிருந்து பெறுவதற்கு ஏற்பாடுகளை முனைவர் ராம சுப்பையா மேற்கொண்டிருந்தார். இத்திட்டத்தில் முதல் வெளியீடாக எழுத்தாளர் ரெ. கார்த்திகேசுவின் சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முனைவர் ராம. சுப்பையாவின் அகால மரணத்திற்குப் பின்னர் அம்முயற்சிகளில் தடையேற்பட்டது.

முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

1966-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழாராய்ச்சி கழகத்தின் முதல் ஆராய்ச்சி மாநாட்டில் பல முக்கிய பணிகளை மேற்கொண்டவர்களில் முனைவர் இராம. சுப்பையாவும் அடங்குவார். இம்மாநாட்டில் கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவராகவும், நிகழ்ச்சி நிரல் குழுவின் உறுப்பினராகவும், கருத்தரங்கின் மொழிபெயர்ப்புப் பகுதியின் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். பின்னர், மாநாட்டு ஆய்வடங்கள் தயாரிப்புக் குழுவிலும் இடம்பெற்று பங்கு வகித்துள்ளார். இம்மாநாட்டில் இவரது மூன்று ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றன.

ஆய்வுக்கட்டுரை தலைப்புகள்:

  • தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கு (Romanize Tamil) ஒரு புதிய குறியீட்டு முறை;
  • தமிழ் பேசும் மக்களிடையே வழங்கும் மலாய்ச் சொற்கள்;
  • பெஸ்கியின் பரமார்த்த குருவின் கதையில் காணப்படும் சில சொற்றொடர் வகைகளும் அவற்றின் அமைப்பு முறைகளும்.

சமூகப் பணி

தமிழ் பேரவை

இராம. சுப்பையா, பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்திலேயே பல்வேறு துறைகளில் இவரது நாட்டம் பரவியிருந்தது. மாணவர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இந்தியப் பண்பாட்டு கழகம் எனும் பெயரில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு சங்கத்தைத் தமிழ் மொழிக்குத் தொண்டு புரியும் ‘தமிழ்ப் பேரவை’யாக மாற்றியமைத்தார். அந்த அவையின் தலைவராகவும் செயலாளராகவும் பதவிவகித்து ‘தமிழ் ஒளி’ என்னும் ஆண்டு மலரையும் தோற்றிவித்தார். இலக்கிய வெளியீடாக கொண்டுவரப்பட்ட இம்மலரின் முதன்மை ஆசிரியாராக இருந்துள்ளார். பின்னர் ‘தமிழ்ப் பேரவை’ யின் புரவலராகவும் தமிழ் ஒளியின் ஆலோசகராகவும் இறுதிவரை நீடித்துள்ளார்.

இந்திய மாணவர் கல்விப் பொருளுதவி நிதி

பல்கலைக் கழகத்திற்கு அப்பால் சமுதாயத்தின் வேறு துறைகளுக்கும் அவர் ஆர்வம் காட்டினார். 1966-ம் ஆண்டு துவங்கிய பி.பி.என் மாணவர் விடுதியின் நிர்வாக குழு தலைவராக அவ்விடுதி தொடங்கிய நாளிலிருந்து பணியாற்றி வந்துள்ளார். அங்கு தங்கிய மாணவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தினார் .

1967-ல் ராம சுப்பையா, இந்திய மாணவர் கல்விப் பொருளுதவி நிதியை தோற்றுவித்தார் (Indian Students Scholarship Fund). பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கோ, சேர்ந்த பின்னர் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டால் அவர்களுக்கு உதவுவதற்கென தானே முன்னின்று 22 பேர் அடங்கிய நிர்வாகக் குழுவொன்றை உருவாக்கி இந்நிதியைத் தோற்றுவித்தார்.

மாணவர்கள் திறன் வளர்ச்சி

மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்ப்பதிலும் முனைவர் இராம. சுப்பையா அக்கறை காட்டினார். அவர் அளித்த ஊக்கத்தினால் பி.பி.என் மாணவர்களால் தமிழ் சொற்போர் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்பட்டது. இச்சொற்போரில் பி.பி.என் விடுதி, தொழில்நுட்பக் கல்லூரி, பகல் நேர ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பல்கலைக் கழக விடுதிகள் ஆகியவற்றில் உள்ள இந்திய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இப்போட்டிக்கான கேடயத்தையும் அவரே வழங்கினார்.

மறைவு

மே 13,1969 கலவரத்திற்குப் பிறகு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்ததால் நாட்டில் கடுமையாண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இச்சிக்கலில், மலாயா பல்கலைக்கழகத்தில் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத மலேசிய இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாதமும் ஐந்து ரிங்கிட் பங்களிப்பை வழங்கும் நிதியத்தை முனைவர் இராம. சுப்பையா முன்மொழிந்தார். ஓரளவு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த பயணத்தின் போது, அவர் சாலை விபத்தில் நவம்பர் 25, 1969-ல் மரணமடைந்தார். அவரது அகால மரணத்திற்குப் பிறகு அந்த நிதிக்கு 'ராம சுப்பையா உதவிநிதி' (The Rama Subbiah Scholarship Fund) என்று பெயரிடப்பட்டு இன்றுவரை தொடர்ந்து இயங்கி வருகிறது.

படைப்புகள்

  • கீழ்ப் பேராவில் வழங்கும் தமிழ்ப் பேச்சு வழக்குகளின் பொருளாராய்ச்சி (1966)
  • தமிழ்ச் சமயப் பாடல்கள் (ஆங்கில மொழிபெயர்ப்பு) (1966).
  • பெஸ்கியின் பரமார்த்த குருவின் கதை (தமிழ் ஒளி இதழ், 1966).
  • குயில் பாட்டு (தமிழ் ஒளி இதழ், 1967).
  • மலாக்கா மன்னர்கள் வரலாறு (1968).
  • குறுந்தொகை மொழிபெயர்ப்பு (சிங்கப்பூர் கவிதை இதழ் 2, 1968).
  • தொல்காப்பியமும் ஒலியியலும் (இந்தோ-இரானியன் கஞ்சிகை மலர் 10, இதழ் 4, 1968).
  • மலாய் இலக்கணத்திற்கு ஓர் அறிமுகம் (அஸ்மா ஹஜி ஓமாருடன் இணைந்து எழுதியது) (1968).
  • எழுத்துத் தமிழுக்கு ஓர் அறிமுகம் (1969).
  • குறுந்தொகையிலிருந்து சில பாடல்கள் (ஆங்கில மொழிபெயர்ப்பு, தெங்காரா இதழ் 1, 1967, இதழ் 3, 1969).
  • தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ஒரு புதிய குறியீட்டு முறை (உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கட்டுரை (1969).
  • தமிழ் பேசும் மக்களிடையே வழங்கும் மலாய்ச் சொற்கள் (உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கட்டுரை (1969).
  • பெஸ்கியின் பரமார்த்த குருவின் கதையில் காணப்படும் சில சொற்றொடர் வகைகளும் அவற்றின் அமைப்பு முறைகளும் (உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கட்டுரை (1969).
  • தமிழ் மலேசியானா (நூற்தொகை) (1969).

துணைநூற் பட்டியல்

  • Rama Subbiah. (1965). A Syntactic Study of Spoken Tamil (Unpublished doctoral dissertation). Department of Phonetics and Linguistics, School of Oriental and African Studies, University of London. https://eprints.soas.ac.uk/29252/1/10731347.pdf
  • Thomas W. Gething . (July, 1967). Reviewed Work: A Lexical Study of Tamil Dialects in Lower Perak. ("Department of Indian Studies Monograph Series by Rama Subbiah. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, 4(1)-211, 157-159. https://www.jstor.org/stable/41491915
  • Singaravelu, S. (Jun, 1971). Dr. Rama Subbiah’s Academic Contributions. Booklet published during naming Ceremony of Dr. Rama Subbiah Reading Room in PPN Student’s Hostel.
  • மாணவர்கள். (Jun, 1971). அறிஞர் ராமாவின் அரிய பணிகள். Booklet published during naming Ceremony of Dr. Rama Subbiah Reading Room in PPN Student’s Hostel.


✅Finalised Page