under review

அ. வேளாங்கண்ணி

From Tamil Wiki
கவிஞர் அ. வேளாங்கண்ணி

அ. வேளாங்கண்ணி (பிறப்பு: மே 25, 1977) கவிஞர், சிறுகதை ஆசிரியர், துணுக்கு எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

அ. வேளாங்கண்ணி, மே 25, 1977 அன்று புதுக்கோட்டையில் பிறந்தார். கரூரில் வளர்ந்தார். கரூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். கரூர் முனிசிபல் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளநிலை பட்டம் பெற்றார். டெல்லி இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில், கணினிப் பயன்பாடுகளில் முதுநிலை பட்டம் (எம்.சி.ஏ.) பட்டம் பெற்றார். சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுநிலை பட்டம் (எம்.பி.ஏ.) பெற்றார்.

தனி வாழ்க்கை

அ. வேளாங்கண்ணி, இந்திய விமானப்படையில் தொழில் நுட்பப்பிரிவில் கர்நாடகா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற இடங்களில் இருபது ஆண்டுகள் பணியாற்றி, ஜூலை 2015-ல் ஓய்வு பெற்றார். ஆகஸ்ட் 2015 முதல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காசாளராகப் பணியாற்றி வருகிறார்.

மணமானவர். மனைவி புனிதா கவிஞர், எழுத்தாளர். இவர்களுக்கு மெர்சி ரோஸ்லின், சாரா ஏஞ்சலின் என இரு குழந்தைகள்.

அ. வேளாங்கண்ணி நூல்கள்
அ. வேளாங்கண்ணி புத்தக வெளியீடு
விருது பெறும் அ. வேளாங்கண்ணி

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

அ. வேளாங்கண்ணி, 1991-ல், பத்தாவது படிக்கும்போது, பள்ளியில் நடந்த கவிதை போட்டிக்காக தனது முதல் கவிதையை எழுதினார். அக்கவிதை இரண்டாம் பரிசு பெற்றது. அச்சில் வந்த முதல் படைப்பான சிறார் பாடல், 2010-ல், தினமலர் சிறுவர் மலரில் வெளியானது. தொடர்ந்து அதே இதழில் சில சிறார் பாடல்களை எழுதினார். தொடர்ந்து ஆனந்த விகடன், குமுதம், கல்கி, குங்குமம், கல்கண்டு, ராணி, ஜன்னல், கண்மணி, காமதேனு, இனிய உதயம், தினமலர் - வாரமலர், பாக்யா, அத்திப்பூ, தங்க மங்கை, பொதிகை மின்னல், இந்து தமிழ்திசை, இலக்கியச் சோலை, தினமணி - சிறுவர் மணி, தினமணி கவிதை மணி உள்ளிட்ட இதழ்களில் வேளாங்கண்ணியின் கவிதைகளும், சிறார் பாடல்களும், நகைச்சுவைத் துணுக்குகளும் வெளியாகின.

படைப்புகள்

இணைய இதழ்களிலும், இணையத்தில் வெளியாகும் மின்னிதழ்களிலும், இணையக் குழும அமைப்புகளிலும் நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதினார். எழுத்து.காம் இணையதளத்தில் 1000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 900-த்திற்கு மேற்பட்ட துணுக்குகளையும் எழுதினார்.

நூல் வெளியீடுகள்

'தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள்' நூலில் வேளாங்கண்ணி பற்றிய குறிப்பும், ஆறு நகைச்சுவைத் துணுக்குகளும் இடம்பெற்றன. படைப்பு குழும வெளியீடான 'மௌனம் திறக்கும் கதவு', 'நதிக்கரை ஞாபகங்கள்' இரண்டிலும் வேளாங்கண்ணியின் கவிதைகள் இடம் பெற்றன. 'நிலாமுற்றம்' வெளியிட்ட முதலாமாண்டு மலர் கவிதைத் தொகுப்புகளிலும் வேளாங்கண்ணியின் கவிதைகள் இடம்பெற்றன. 'கவியுலகப் பூஞ்சோலை' குழும ஆண்டுவிழா மலரில் வேளாங்கண்ணியின் பாடல் ஒன்று இடம்பெற்றது. எழுத்துலகில் அமிர்தகணேசன் எனும் புதுவை அகனைத் தனது குருவாகக் கருதிச் செயல்பட்டார். தனது நண்பர்கள் பலரை எழுத ஊக்குவித்தார். அ. வேளாங்கண்ணியின் படைப்புகள் சில அமேசான் கிண்டிலில் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளன.

மேடையுரை

அ. வேளாங்கண்ணி, கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார்.

பொறுப்பு

அ. வேளாங்கண்ணி, நிலாமுற்றம் குழுமத்தின் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர்.

விருதுகள்/பரிசு

  • 'அத்திப்பூ' மாத இதழ் நடத்திய கவிதை போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு
  • திருச்சி தினமலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு
  • 'மேஜிக் போட்' எனும் ஆங்கிலச் சிறுவர் இதழில், படம் பார்த்து கதையெழுதும் போட்டியில் இரண்டு முறை முதல் பரிசு
  • புதுச்சேரி இணையதளப் படைப்பாளிகள் சார்பாக வழங்கப்பட்ட 'மிகுநிறை சுவைஞர் பெறு புகழ்மணி' விருது
  • 'தமிழன்பன் 80' விருது
  • நிலாமுற்றம் குழுமம் அளித்த 'நிலாக்கவிஞர்' விருது
  • மாமதுரைக் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட 'கவிமுரசுப் பட்டம்'
  • 'கவினெழி' பட்டம் மற்றும் சான்று

மதிப்பீடு

அ. வேளாங்கண்ணி, பொது வாசிப்புக்குரிய கவிதை, சிறுகதை, சிறார் பாடல்கள், ஆல்பங்களுக்கான பாடல்களை எழுதினார். அழகியல் சார்ந்த கவிதைகளை எழுதினார். சமூகம் சார்ந்த கருத்துக்களைத் தனது படைப்புகளில் முன்வைத்தார். தமிழின் முன்னணி இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • நட்பியல்
  • செவப்பி
  • காதலில் வலிகள் இலவசம்
  • நீங்காத எண்ணம் ஒன்று
  • துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய்
  • வாசித்துப் பின் யோசிப்போம்
  • பேசும் குடுவைகளும் விழுங்கும் குகையும்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2025, 07:59:41 IST