under review

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

From Tamil Wiki
Revision as of 13:14, 11 November 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களான அகநானூறு மற்றும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் என்னும் பெயரைக் கொண்டு இளம்பால் என்ற ஊரில் ஆசிரியப் பணிபுரிந்த சேந்தன் என்பவரின் மகன் கூத்தனார் என்றும் இவர் மதுரைக்கு வந்து வாழ்ந்தவர் எனவும் கருதப்படுகிறது. 'சேந்தன்' முருகனைக் குறிக்கும் சொல். இளம்பாலாசிரியன் என்னும் சொல்லுக்கு இளையவர்களுக்கு கல்வி கற்பித்தவர் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் இயற்றிய மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களான அகநானூறு( 102, 348) மற்றும் நற்றிணையில் (273) இடம் பெற்றுள்ளன. இவரது மூன்று பாடல்களுமே குறிஞ்சித் திணையில் அமைந்து தலைவின் ஏக்கத்தைப் பேசு பொருளாகக் கொண்டுள்ளன.

பாடல்களால் அறியவரும் செய்திகள்

  • தினைக்கதிர் போல வளைந்த கொம்புகளை உள்ள வலிமை மிக்க உளைமான் தினைப்புனத்தில் மேய வருகிறது. தினைக்கு உரிய கானவன் கழுது என்னும் மேடைப் பந்தலின் மேல் ஏறிக் காவல் புரிகிறான். அவன் கையால் பிழிந்து பிழிச்சாறு உண்டான். அவன் சந்தனக் கட்டையைத் தன் கையால் உரைத்துப் பூசிக்கொண்டான். சாறு பிழிந்ததும், சந்தனம் உரைத்ததுமான தன் கையால் தலைமயிரைக் கோதி உலர்த்திக்கொள்கிறான். அவன் மனைவி கொடிச்சி மலையே எதிரொலிக்கும்படி, குறிஞ்சிப் பண்ணால் பாட்டுப் பாடுகிறாள் (அகம் 102)
  • மலைமக்கள் தேன் போல் சுவைக்கும் மாம்பழம், பலாச்சுளை, இறால் மூன்றையும் கூழாக்கி மூங்கில் குழாயில் அடைத்துப் பாம்பு கடித்தது போலக் கடுப்பு ஏறும்படி வைத்திருந்த 'தோப்பி' என்னும் கள்ளைப் பருகினர் (அகம் 348)
  • தினைப்புனத்தை மேய்ந்த யானைகளை ஊரிலுள்ள இளைஞர்களும் முதியவர்களும் கையில் வில்லை வைத்துக்கொண்டு ஓட்டினர் (அகம் 348)
  • தலைவியின் மெலிவு கண்டு அன்னை வேலன் வெறியாட்டு நடத்தி குறி கேட்கிறாள் (நற் 273).

பாடல் நடை

அகநானூறு 102

குறிஞ்சித் திணை

இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது

உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பி, பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!

நற்றிணை 273

குறிஞ்சித் திணை

தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், ''நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்'' என்பது படச் சொல்லியது.

இஃது எவன்கொல்லோ- தோழி!- மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என,
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே?

உசாத்துணை


✅Finalised Page