under review

பாதாதிகேசம்

From Tamil Wiki
Revision as of 10:46, 5 November 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாதாதிகேசம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாதாதிகேசம் என்பது பாதம் முதல் கேசம்வரை என்னும் பொருள்தரும் வடமொழிச் சொல். கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். கலிவெண்பாவால் பாதத்தில் தொடங்கி தலைமுடி வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் பாதாதிகேசம். இறைவனையும், இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் பாதாதிகேசமாகப் பாடுவது மரபு.

அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல்
படர்வுறு கலிவெண் பாவால் கூறல்
பாதாதி கேசம் கேசாதி பாதம்
                         பாட்டியல் 111

நவநீதப் பாட்டியல்

  அகங்கால் உகிர்விரல் மீக்கால்பரடு அங்கணை முழந்தாள்
  மிகுங்கால் துடைஇடை அல்குல் கொப்பூழ்வயின் வெம்முலையாய்
  நகம்சார்விரல் அங்கைமுன்கை தோள்கண்டம் முகம்நகைவாய்
  தரும்காது இதழ்மூக்கு கண்புருவம் நெற்றி தாழ்குழலே.

என்று பாதாதிகேசத்தில் பாடப்படவேண்டிய உறுப்புகளை வரிசையாக எடுத்துரைக்கின்றது.

பொருநராற்றுப்படையின் பாடினி வர்ணனையும்(25-4), சிறுபாணாற்றுப்படையில்விறலியின் வர்ணனையும்(13-32) கேசாதி பாத, பாதாதி கேச – சிற்றிலக்கிய வகையின் தோற்றப்புள்ளிகள்.

எடுத்துக்காட்டுகள்

ஒன்பதாம் திருமுறை

ஒன்பதாம் திருமுறையில் திருவாலியமுதனாரின் திருவிசைப்பா-திருப்பல்லாண்டின் 'மையல் மாதொரு கூறன் மால்விடை[1]' பாடல் சிவபெருமானின் பாதாதி கேச பதிகம் எனப்படுகின்றது. இதில் உள்ள பதினோரு பாடல்களில் பத்துப்பாடல்கள் இறைவனின் உருவை பாதாதிகேசமாக வருணித்துப் பாடப்பெற்றுள்ளன. பாதம், கழல், தொடை, கச்சு, உந்தி, உதரபந்தனம், மார்பு, காதுகள், முகம், நெற்றி, விழிகள், சென்னி ஆகியன இப்பாடலுள் வருணனை செய்யப்பெற்றுள்ளன.

திருப்புகழ்

அருணகிரிநாதரின் திருப்புகழ் தொகுப்பில் உள்ள திருவகுப்பு என்ற பகுதியில் அமைந்திருக்கும் கொலுவகுப்பு என்ற கிளைப்பிரிவின் நிறைநிலை அடிகள் கேசாதி பாத வருணனைப் பகுதியாக அமைத்துப் பாடப்பெற்றுள்ளன.

அறுகதி ரவரென அறுமணி மவுலிகள்
அடர்ந்து வெயிலே படர்ந்த தொருபால்
அறுமதி எனஅறு திருமுக சததள
அலர்ந்த மலரே மலர்ந்த தொருபால்
மறுவறு கடலென மருவுப னிருவிழி
வழிந்த அருளே பொழிந்த தொருபால்
வனைதரு மகரமு மணியணி பணிகளும்
வயங்கு குழையே தயங்க ஒருபால்
இறுகுபொன் மலையொடும் இடறுப னிருபுயம்
இசைந்து நெடுவான் அசைந்த தொருபால்
எழிலியை அனையப னிருகையில் அயில்முதல்
இலங்கு படையே துலங்க ஒருபால்
உறுவரை யருவியை நிகர்தரும் உரமிசை
யுடன்கொள் புரிநூல் கிடந்த தொருபால் .
உருமென இகலிமுன் எதிர்பொரும் அவுணருள்
உடைந்த உடைவாள் சிறந்த தொருபால்
அநவர தமுமறை முறையிடு பரிபுரம்
அலங்கும் இருதாள் குலுங்க ஒருபால் ’’

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page