வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
From Tamil Wiki
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
கண்ணன் என்பது இயற்பெயர். வேம்பற்றூரில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 362-வது பாடலாக உள்ளது. குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல். தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி உடல் மெலிந்து சோர்வுறுவதைக் கண்டு அவளின் அன்னை பேய் பிடித்திருக்குமோ என்று கருதி வேலனை வெறியாட்டு பூசை நடத்த அழைக்கிறாள். அப்போது தோழி அறத்தோடு நிற்பதாக பாடல் அமைந்துள்ளது.
பாடல்வழி அறியவரும் செய்திகள்
- வேலன் வெறியாட்டு பூசை: பலவகையான உணவுப் பொருள்களை முருகனுக்குப் படைத்து, சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று பலி கொடுத்து தலைவியின் நெற்றியைத் தடவி அவளின் துன்பத்தைப் போக்கும் சடங்கு.
பாடல் நடை
- குறுந்தொகை: 362 (குறிஞ்சித்திணை)
முருகயர்ந் துவந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.
உசாத்துணை
✅Finalised Page