under review

மாணிக்கவாசகர்

From Tamil Wiki
Revision as of 21:27, 30 December 2023 by Madhusaml (talk | contribs)
மாணிக்கவாசகர், திருப்பெருந்துறை

மாணிக்கவாசகர் (மணிவாசகர்,அருள்வாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன்)(பொ.யு.ஏழாம் நூற்றாண்டு). சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர். சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இடம்பெறும் திருவாசகமும் திருக்கோவையாரும் இவரால் இயற்றப்பட்டன. திருவாசகம் தன் உருக்கமான பக்திச்சுவைக்காக 'திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்' எனப் புகழப்பட்டது.

காலம்

மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். அவரது பாடல்களில் சமண சமயம் பற்றிய குறிப்பு காணப்பெறவில்லை. மூவர் காலத்தில் சமண சமயம் தழைத்திருந்தது. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை போன்றகாரணங்களினால் அவ்வாறுகருதுகின்றனர்.

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் பொயு. 9-ஆம் நூற்றாண்டு என்று ஜி.யு. போப் கருதினார். பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணன்[1] ( 863-911) மாணிக்கவாசகரின் வரலாற்றில் குறிப்பிடப்படும் அரிமர்த்தன பாண்டியன் என்ற ஆய்வின்படி மாணிக்கவாசகரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொண்டார். மற்றும் பல அறிஞர்களும் அதுவே மாணிக்கவாசகரின் காலம் எனக் கொள்கின்றனர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி யில் தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக மாணிக்கவாசகரின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

திருவாதவூரார் வைகை ஆற்றங்கரையில் மதுரை மாநகரத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள திருவாதவூரில் அந்தண குலத்தில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். சிவபக்தராகவும், சைவ சித்தாந்தத்தில் பற்றுடையவராகவும் இருந்தார். மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவியில் அமர்ந்தார்.

நரியைப் பரியாக்கியது-தொன்மம்
திருப்பெருந்துறை குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகர் ஆத்மநாதரிடம் உபதேசம் பெறல் நன்றி: தினமணி

மன்னன் அரிமர்த்தனன் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்துள்ளதைக் கேள்விப்பட்டு, வாதவூராரிடம் பொன் கொடுத்து, குதிரைகளை வாங்கி வரும்படி பணித்தான்.மாணிக்கவாசகர், பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே, குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவாக அமர்ந்திருந்தார்.

அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய "சிவஞான போதம் அல்ல). இது நிகழ்ந்த விதத்தை திருவாதவூரார் திருவாசகத்தின் திருவண்டப்பகுதியில் குறிப்பிடுகிறார்

கருணையின் பெருமை கண்டேன் காண்க
புவனியில் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க

சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பவை யாவை என்று உபதேசிக்க வேண்டினார் வாதவூரார். சிவபெருமான் அவருக்கு குருவாக சிவஞானத்தை போதித்துத் திருவடி தீட்சையும் அளித்தார். துறவுக்கோலம் பூண்டு வாய்பொத்தி தன் குருவின் முன் நின்ற வாதவூராரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார்

பாண்டியன் ஒற்றர்களிடம் ஓலை மூலம் ஆணையிட்டு அவரை அழைத்து வரக் கட்டளையிட்டான். 'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் ஓலையை குருவிடமே கொடுத்துவிட்டார். குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்துக் 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வராததால் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெயிலில் நிறுத்தினான். இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினான். சிவபெருமானின் சிவகணங்களைக் குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே, இறைவனுக்குப் பரிமேலழகர் எனும் காரணப் பெயர் ஏற்பட்டது. உயர் ரகக் குதிரைகள் வருவதை அறிந்து மன்னன் மகிழ்ந்தான்.

தலைவன் அரசனிடம் குதிரைகளை ஒப்படைத்தான். பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கிக் குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளைk கடித்துவிட்டு ஓடின. பாண்டியன் மிகவும் கோபம் கொண்டு கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

வாதவூராரின் துன்பம் பொறுக்காமல் சிவன் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்ய, கரைகளை உடைத்துக்கொண்டு வெள்ளம் வந்தது.

பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று ஆணையிடுகிறான். பிட்டு விற்கும் வந்திக் கிழவி வீட்டில் ஆண்கள் யாருமில்லை. சிவபெருமான் ஏவலாளாக வந்து வந்தியின் உதிந்த பிட்டுக்காக மண் சுமக்கும் திருவிளையாடலை நிகழ்த்தினார்.

பார்க்க: பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

திருவாதவூராருக்காக இறைவன் நடத்திய விளையாடலைக் கண்டு மன்னன் மீண்டும் வாதவூராரை மந்திரியாக இருக்க வேண்டினான். அதை மறுத்து குருவின் ஆணைப்படி சிவத்தலங்களுக்குச் சென்று பாடி வணைங்கி, சிதம்பரத்துக்கு வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் 'நமச்சிவாய வாழ்க' என்று தொடங்கும் சிவபுராணம், அற்புதப் பத்து, அதிசயப் பத்து, குழைத்த பத்து, சென்னிப் பத்து, ஆசைப் பத்து, வாழாப் பத்து, அடைக்கலப் பத்து, செத்திலாப் பத்து, புணர்ச்சிப் பத்து, அருட்பத்து, திருவார்த்தை, எண்ணப் பதிகம், திருவெண்பா, திருப்பள்ளியெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப் பத்து, பிரார்த்தனைப் பத்து, திருப்பாண்டிப் பதிகம், திருச்சதகம் முதலிய பதிகங்களைப் பாடினார். உத்தரகோசமங்கைக்குச் சென்று நீத்தல் விண்ணப்பம் பாடினார்.

பாண்டிய நாட்டைக் கடந்து சோழ நாட்டின் திருவாரூர் தியாகேசரை வணங்கி திருப்புலம்பல் என்னும் பதிகத்தை இயற்றினார். சீர்காழியில் பிடித்த பத்து என்னும் பதிகத்தைப் பாடினார். நடுநாட்டை அடைந்து திருமுதுகுன்றம், திருவெண்ணெய்நல்லூர் முதலிய தலங்களைத் தரிசித்து, திருவண்ணாமலையை அடைந்தார்.

திருவண்ணாமலையில் மார்கழி மாதம் திருவாதிரைக்கு முன் பத்து நாட்களில் கன்னிப் பெண்கள் விடியற்காலம் எழுந்து வீடுகள் தோறும் சென்று ஒருவரையொருவர் துயிலெழுப்பிக்கொண்டு ஆதி அண்ணாமலை ஆலயத்தின் அருகே உள்ள தீர்த்தக்குளத்தில்( இப்பொது அது மாணிக்கவாசகர் குளம் என அழைக்கப்படுகிறது) நீராடி வழிபாடு செய்வதைக் கண்டு, கன்னியர் வாய் மொழியாகவே திருவெம்பாவை பாடினார்.அவ்வூர்ப் பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு அவர்கள் பாடுவதைப்போல் திருவம்மானை பாடினார்.

காஞ்சிபுரம் வழியாக திருக்கழுகுன்றத்தை அடைந்து திருக்கழுக்குன்றப் பதிகம் பாடினார். தில்லைக்குச் சென்று நடராசரை கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், கோயில் மூத்த திருப்பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல் அன்னைப் பத்து, திருக்கோத்தும்பி, குயில் பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து, ஆகிய பதிகங்களையும் தில்லையில் இயற்றினார்.

ஈழத்திலிருந்து சைவத்தை எதிர்த்து வாதிட வந்த பிக்குகளை வாதத்தில் வென்றார்(அவர்களை ஊமையாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஈழமன்னனின் ஊமைப்பெண்ணை பேசவைத்ததாகவும் தொன்மக் கதை கூறுகிறது. பெண்கள் விளையாடும் சாழல் என்ற வகைமையில் கேள்வி பதில் முறையில் திருச்சாழல் என்ற பதிகத்தை இயற்றினார் (ஊமைப்பெண்ணை பேச வைத்ததும் அவள் மாணிக்கவாசகரின் கேள்விகளுக்குச் சொன்ன பதிலே திருச்சாழல் என்றும் கூறப்படுகிறது). இதன்பிறகு திருப்படையாட்சி, திருப்படையெழுச்சி, அச்சோப் பதிகம், யாத்திரைப் பத்து ஆகிய பதிகங்களைப் பாடினார்.

இறைவன் திருவாசகத்தை எழுதியெடுத்தது-தொன்மம்

சிதம்பரத்தில் அந்தணர் ஒருவர் மாணிக்கவாசகரிடம் வந்து அவர் பல தலங்களில் எழுதிய பதிகங்கள்(திருவாசகம்) அனைத்தையும் முறையாகச் சொல்லும்படி கேட்டு அவற்றை சுவடியில் எழுதியெடுத்தார். மாணிக்கவாசகரால் 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் பாடக்கேட்டு சுவடிகளில் எழுதியெடுத்தார். 'பாவையைப் பாடிய வாயால் கோவையைப் பாடுக' என்று அந்தணர் வேண்ட மாணிக்கவாசகரால் திருக்கோவையார் பாடப்பட்டு அதுவும் சுவடியில் எழுதப்பட்டது. அந்தணர் வடிவில் வந்து திருவாசகத்தை எழுதியெடுத்தது சிவபெருமானே என்று கூறப்படுகிறது. நூலின் முடிவில் 'மாணிக்கவாசகர் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து' எனத் திருச்சாத்திட்டு சுவடிகள் தில்லைச் சிற்றம்பலத்தில் பஞ்சாக்கரப் படியில் வைக்கப்பட்டிருந்தன. தில்லையில் இருந்த அச்சுவடிகள் கர்நாடக நவாபின் படையெடுப்பின்போது நாகலிங்க அடிகளால் பாண்டிச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டிச்சேரி அம்பலத்தாடி மடத்தில் நடராஜரின் பாதத்துக்கு அருகில் சுமார் ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட வெள்ளிப்பேழையில் திருவாசக ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மறைவு

தில்லை அம்பலத்தின் பஞ்சாக்கரப் படியில் திருவாசக ஏடுகளைக் கண்ட தில்லை மூவாயிரவர் நடந்த நிகழ்வின் பொருள் என்ன என்று மாணிக்கவாசகரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று தனது 32-ஆம் வயதில் இறைவனுடன் கலந்து மறைந்தார் என்று கூறப்படுகிறது.

சிறப்பு

மாணிக்கவாசகரின் பாடல்கள் பன்னிரு திருமுறைகள் தொகுப்பில் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. மாணிக்கவாசகரின் பாடல்கள் இனிமைக்கும், உருக்கத்துக்கும், பக்திச்சுவைக்கும் பெயர்பெற்றவை. இராமலிங்க வள்ளலார்

வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங் கமலத்தின் சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

வாட்டம் இல்லா மாணிக்க வாசக! நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் எனில் இங்கு நானடைதல் வியப்பன்றே

என்று திருவாசகத்தின் உருக்கத்தையும், இனிமையையும் பாடுகிறார்.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

"மாணிக்கவாசகர் முப்பது வயதிற்குள் கவித்துவ எழுச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறார். பொன்னை உருக்கியது போலத் தமிழ் மொழியை உருக்கி வார்த்திருக்கிறார். திருவாசகத்தை வாசிக்க வாசிக்க மனதில் இசை இன்பமும் இனம் புரியாத ஆனந்தமும் நிரம்புவதை உணர்ந்திருக்கிறேன். மாணிக்கவாசகரின் கவிமொழியானது பாதரசம் போன்றது. அது உருண்டோடிக் கொண்டேயிருக்கும் வசீகர அழகுடையது. மாணிக்கவாசகர் எளிய சொற்களைக் கொண்டு மகத்தான அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். வெல்லப்பாகு போன்று மொழியை அவரால் பதமாக மாற்றிவிட முடிந்திருக்கிறது" என்று எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

வழிபாடு

சிதம்பரம் ஆனித் தேரோட்டம்-மாணிக்கவாசகர்

திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகருக்கு சன்னதி உள்ளது. இங்குள்ள உற்சவமூர்த்தியும் மாணிக்கவாசகரின் செப்புத் திருமேனியே. கருவறைக்குப் பின்புள்ள நாலுகால் மண்டபத்தில் குருந்தமூல சுவாமி(ஆத்மநாதர்) உபதேசம் செய்ய, மாணிக்கவாசகர் வணங்கி உபதேசம் பெறுவதுபோன்ற சிற்பங்கள் உள்ளன. மாணிக்கவாசகர் ஜோதியோடு கலந்திருப்பதால் இங்கு தீப ஆராதனையில் பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி இல்லை.

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் திருமறைநாதர் கோயிலுக்கு அருகில் மாணிக்கவாசகர் அவதரித்த இல்லம் இப்போது மாணிக்கவாசகரின் கோயிலாக எழுப்பப்பட்டு, அங்கே பூஜைகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியும், திருவெம்பாவையும் அனைத்து சிவாலயங்களிலும் ஓதப்பட்டும், பாடப்பட்டும் வருகின்றன.

விழாக்கள்

மாணிக்கவாசகர் சிவனோடு கலந்த ஆனி மகத்தன்று அனைத்து சிவ தலங்களிலும் மாணிக்க வாசகரின் குருபூஜை நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மார்கழி திருவாதிரையை ஒட்டி மாணிக்கவாசகரின் 10 நாள் உற்சவம் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. சிதம்பரத்தில் நடைபெரும் திருவாதிரை உற்சவத்தில் 10 நாட்களும் மாணிக்கவாசகரை நடராஜப் பெருமானின் முன் எழுந்தருளச் செய்து, திருவெம்பாவை பாடப்படும் வழக்கம் உள்ளது. உத்தரகோசமங்கை போன்ற சிவத்தலங்களிலும் திருவாதிரை விழா நடைபெறுகிறது.

சிதம்பரம் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த்திருவிழாவில் தேரில் இருந்து இறங்கும் நடராஜரை மாணிக்கவாசகப் பெருமான் எதிர்கொண்டு அழைக்கும் வைபவம் நடைபெறுகிறது.

பாடல் நடை

உன்னையன்றி எதுவும் வேண்டேன்

உற்றாரை யான் வேண்டேன்,
ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
கற்றாரை யான் வேண்டேன்,
கற்பனவும் இனி அமையும்,
குற்றாலத்து அமர்ந்து உறையும்
கூத்தா, உன் குரை கழற்கே
கற்று ஆவின் மனம்போலக்
கசிந்து உருக வேண்டுவனே!

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

அண்டத்தின் காட்சி

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின்’

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page