மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

From Tamil Wiki
Revision as of 17:11, 14 October 2022 by Siva Angammal (talk | contribs)

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரைமாநகரில் ஓலைக்கடை என்பது ஒரு பகுதியாக விளங்கியது. அப்பகுதியில் வாழ்ந்ததால் இவருக்கு மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் என்னும் பெயர் வழங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் பாடிய இரு பாடல்கள் சங்க இலக்கிய தொகை நூலில் இடம் பெற்றுள்ளன. அவை நற்றிணை நூலில் 250 மற்றும் 369- வது பாடல்களாக உள்ளன. இரண்டு பாடல்களும் அகத்துறை சார்ந்ததாகும்.

பாடல் சொல்லும் செய்திகள்

நற்றிணை 250
  • மருதத் திணை
  • புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.
  • பகுத்த வாய் வழியாலே உள்ளே பரலிடப்பட்ட கிண்கிணி ஒலிக்க தெருவிலே முக்காற் சிறுதேரைப் பற்றிக் கொண்டு நடைபயிலுகின்ற இனிய மொழியையுடைய புதல்வனை  எம் மார்போடு அணைத்தலும் அவனது செவ்வாம்பல் மலர் போலத் தோன்றுஞ் சிவந்த வாய் நீர் ஒழுகியது.
  • சிதைந்த சந்தனப் பூச்சோடு விருப்பம் வரும் உள்ளம் அவனைச்  செலுத்த  காதலியை முயங்க வேண்டிய விருப்பத்துடனே அருகில் சென்றான்.
  • அங்ஙனஞ் சென்றவுடன் பிறைத்திங்களைப் போன்ற அழகு பொருந்திய மாசற்ற சிறப்புடைய நெற்றியையும் மணங்கமழும் கரிய கூந்தலையும் உடைய அவள் தன் உள்ளத்து வேறாகக் கருதி  பிணைமான் போல வெருண்டு அவனை நீங்கி விலகி நின்றாள்.
  • என்னருகில் வந்ததற்கான நோக்கமென்ன என்று அவனை இகழ்ச்சியுடன் நோக்கி அவள் கேட்டாள்.
நற்றிணை 369
  • நெய்தல் திணை
  • பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது
  • சூரியன் தான்கொண்ட சினம் தணியப்பெற்று அந்திமக் குன்றைச் சென்றடைய, நிறைந்த சிளகுகளையுடைய நாரைக் கூட்டம் ஆகாயத்திலே நெருங்கிச் சென்றன
  • பகற் பொழுது மெல்ல மெல்லச் செல்ல முல்லையரும்பு வாய்திறந்து மலர்ந்து நிற்கும் கொடிய மாலைப் பொழுதானது நேற்று வந்து துன்புறுத்தியதுபோல இன்றும் வருகிறது
  • பெரும்பாலும் ஞெமைகள் வளர்ந்த உயர்ந்த இமயமலை உச்சியில் வானிடத்தினின்று இறங்கும்  அருவியையுடைய பெரிய கங்கையாற்றினை கரை கடந்து வழியாது நின்ற அணையை உடைத்துச் செல்லும் பலம்கொண்ட நீர் வெள்ளம் போன்ற  எனது நிறையை அழித்துப் பெருகுகின்ற காம வெள்ளத்தை நீந்தத் தெரியவில்லையே. எவ்வாறு பிழைப்பேன்?

பாடல் நடை

நற்றிணை 250


நகுகம் வாராய்- பாண!- பகுவாய்

அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்

தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்

பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு

காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்

முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,

பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்

நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,

வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,

'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே!

நற்றிணை 369


சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,

நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,

எல்லை பைபயக் கழிப்பி, முல்லை

அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை

இன்றும் வருவது ஆயின், நன்றும்

அறியேன் வாழி- தோழி!- அறியேன்,

ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,

வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்

கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்

சிறை அடு கடும் புனல் அன்ன, என்

நிறை அடு காமம் நீந்துமாறே.

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்

நற்றிணை, தமிழ் சுரங்கம்