under review

பெருங்காப்பியம்

From Tamil Wiki
Revision as of 09:28, 5 November 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெருங்காப்பியம் பாட்டுடைத் தலைவனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை தொடர்நிலைச் செய்யுள்களாகக் கொண்ட இலக்கிய நூல். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் பாடுவது பெருங்காப்பியம்.

சிறுகாப்பியம் பாட்டுடைத் தலைவனின் ஒருசில வாழ்க்கைக் கூறுகளை மட்டுமே கூறும்.

பெருங்காப்பிய இலக்கணம்

  • வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறித் தொடங்க வேண்டும் (தண்டியலங்காரம்). அவையடக்கம் இடம் பெற வேண்டும் (மாறன் அலங்காரம்) [1]
  • காப்பியப் பாடுபொருள் அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நாற்பொருளையும் சொல்வதாக இருக்க வேண்டும்.
  • ஒப்புமை இல்லாத தலைவனைப் பற்றிய கதையாக இருக்க வேண்டும்.
  • மலை, கடல், நாடு, நகர், பருவம், சூரியோதயம், சந்திரோதயம் முதலிய வர்ணனைகளை கொண்டதாக இருக்க வேண்டும் (தண்டியலங்காரம்). தென்றலின் வருகை, ஆற்று வர்ணனைகள் இருக்க வேண்டும் (மாறன் அலங்காரம், நவநீதப் பாட்டியல் மாலை (பொழுது), குதிரை, யானை, கொடி, முரசு, செங்கோல் பற்றிய வர்ணனைகளையும் குறிப்பிடுகிறது.
  • பெருங்காப்பிய நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என இரண்டு வகை.
  • பொது நிகழ்ச்சிகளில், திருமணம், பொழிலாடல், நீராடல், மக்களைப் பெறுதல், புலவியிற் புலத்தல், கலவியில் கலத்தல் முதலிய செய்கை சிறப்புகளின் வர்ணனைகள் இடம் பெற்றிருக்க வேண்டும் (தண்டியலங்காரம்). இல்வாழ்க்கை, நிலையாமை, கைக்கிளை ஆகியவை இடம் பெற வேண்டும் (மாறன் அலங்காரம்). குலவரவு, உலகின் தோற்றம், ஊழின் இறுதி, தொண்ணூற்று அறுவரது இயற்கை, வேதியர் ஒழுக்கம் இவை பற்றிப் பேச வேண்டும் என புராணக் காப்பிய நிகழ்வுகளாக வச்சணந்திமாலை முதலான இலக்கண நூல்கள் குறிப்பிடும்.
  • பெருங்காப்பிய அரசியல் நிகழ்ச்சிகளாக மந்திரம், தூது, செலவு, இகல் வென்றி, முடிசூடல் ஆகியவை இடம் பெற வேண்டும் (தண்டியலங்காரம்). இவற்றுடன் ஒற்றாடல், திறை கோடல் ஆகியவற்றை மாறன் அலங்காரம் சேர்க்கிறது.
  • எண்வகைச் சுவையும், பாவமும் (மெய்ப்பாடுகள்) காப்பியத்தில் இடம் பெற வேண்டும்.
  • சந்தி, பாவிகம் ஆகிய கதைப் பின்னல் அமைதல் வேண்டும் (தண்டியலங்காரம்). இதனை சற்று விரித்து வித்து, எண், துளி, கொடி, கருப்பம் எனப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடுகிறது.
  • பெருங்காப்பியக் கட்டமைப்பாகச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்றவாறு பகுக்கப்படக் கூடியதாய் இருக்க வேண்டும் (தண்டியலங்காரம்). இவற்றுடன் படலம், காண்டம் ஆகியவற்றை மாறன் அலங்காரம் குறிப்பிடுகிறது.
  • வெண்பா, விருத்தம், அகவல், கொச்சகம் என்னும் பாவகைகள், காப்பியம் பாடச் சிறந்தவை (பன்னிரு பாட்டியல்)
  • இவை தவிர வழிப்படுத்துதல், வழிப்பயணம், பந்தாடல், அசரீரி, சாபம் முதலான நிகழ்வுகளும், சுடுகாடு, தீஎரி முதலான வர்ணனைக் கூறுகளும், காதை, புராணம் ஆகிய கட்டமைப்புக் கூறுகளும் பெருங்காப்பியக் கூறுகளாக அமையலாம்.

இவ்வாறு புனையப்படுவது பெருங்காப்பியம். நாற்பொருள் குறைவின்றி வந்து ஏனைய வர்ணனைப் பகுதிகளில் சில குறைந்து வருவது பிழையில்லை.

தமிழின் முதல் பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

உசாத்துணை

பெருங்காப்பியமும் சிறுகாப்பியமும், தமிழ் இணைய கல்விக் கழகம்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page