புலியூர்க் கேசிகன்
கவிஞர், இலக்கண-இலக்கிய உரையாசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல களங்களில் செயல்பட்டவர் புலியூர்க்கேசிகன் (இயற்பெயர் சொக்கலிங்கம்; பிறப்பு: அக்டோபர் 16, 1923; இறப்பு: ஏப்ரல் 17, 1992). சங்க இலக்கிய நூல்கள் பலவற்றிற்கு எளிய உரைகளை எழுதியவர். ஜோதிடம், எண் கணிதம் போன்ற துறை சார்ந்தும் நூல்கள் எழுதியிருக்கிறார்.
பிறப்பு, கல்வி
புலியூர்க் கேசிகன், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புலியூர்குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமிப் பிள்ளை-மகாலட்சுமி இணையருக்கு, அக்டோபர் 16, 1923 அன்று மகனாகப் பிறந்தார். இயற்பெயர் சொக்கலிங்கம். பள்ளிப் படிப்பை டோணாவூர் பள்ளியில் பயின்றார். இன்டர்மீடியட் வகுப்பை மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் நிறைவு செய்தார். புலியூர் கிராமத்தில் இருந்து பட்டம் பெற்ற முதல் மாணவர் இவர் தான்.
தனி வாழ்க்கை
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், புலியூர்க் கேசிகனுக்கு அருகிலுள்ள ஊரான வடுகச்சிமலைப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. இளம் வயது முதலே தமிழின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் புலியூர்க் கேசிகன். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். தமிழார்வத்தால் நெல்லைப் பகுதியில் வாழ்ந்த தமிழறிஞர்கள் பலரைத் தேடிச் சென்று சந்தித்தார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி.க., டாக்டர் மு.வரதராசன் போன்றோருடன் நெருங்கிப் பழகி, தனது தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.
டோணாவூரில் உள்ள மருத்துவமனையில் மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மறைமலை அடிகளின் மீது கொண்டிருந்த பற்றால் நீலாம்பிகை அம்மையாரை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்தார் புலியூர்க் கேசிகன். நீலாம்பிகை அம்மையார், தனது கணவர் திருவரங்கப் பிள்ளையிடம் புலியூர்க்கேசிகனின் திறமை, தமிழார்வம் பற்றி எடுத்துரைத்தார். நீலாம்பிகை அம்மையின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டார் புலியூர்க் கேசிகன். நீலாம்பிகை அம்மையின் விருப்பத்தில் பேரில் அவர்களது மகள் சுந்தரத்தம்மையை மணம் செய்து கொண்டார்.
இதழியல் வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.