நாஞ்சில் நாடன்

From Tamil Wiki
Revision as of 19:20, 22 April 2022 by Navingssv (talk | contribs)
Nanjil nadan3.jpg

நாஞ்சில் நாடன் (பிறப்பு - டிசம்பர் 31, 1947) நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் எழுதி வருபவர். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை யதார்த்த பாணியிலும், மாய யதார்த்த பாணியிலும் எழுதியவர். கம்ப ராமாயணத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நாஞ்சில் நாடன் தொடர்ந்து கம்ப ராமாயணம் வகுப்புகளும், சொற்ப்பொழிவுகளும் நிகழ்த்தி வருகிறார்.

பிறப்பு, கல்வி

Nanjil.jpg

க. சுப்பிரமணியம் (ஜி. சுப்பிரமணியப் பிள்ளை) என்னும் இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் 1947 ஆம் ஆண்டு டிசம்பர் 31 கன்னியாகுமரி மாவட்டம் வீர நாராயணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை கணபதியாப்பிள்ளை, தாயார் சரஸ்வதி அம்மாள். தந்தை ஓர் ஏறு உலவாளி (குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்தவர்).

நாஞ்சில் நாடன் வீரநாராயணமங்கலம் ஊரில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். இரச்சக்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக் கற்றார். தாளக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் (S.T. Hindu College) இளங்கலை (பி.எஸ்.சி. கணிதம்) பட்டம் பெற்றார். இங்கே இவருக்கு கல்லூரித் தோழர்களாக முனைவர் அ.கா. பெருமாள், பேராசிரியர் வேதசகாயகுமார் பயின்றனர். நாஞ்சில் நாடன் தன் முதுகலை பட்டத்தை (எம்.எஸ்.சி. கணிதம்) திருவனந்தபுரம் மகாத்மா காந்தி மெமோரியல் கல்லூரி பயன்றார். நாஞ்சில் நாடன் முதுகலை மாணவனாக திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவரது கல்லூரிக்கு நேர் எதிரே உள்ள மார் இராணிய கத்தோலிக்கக் கல்லூரியில் நகுலன் ஆங்கில டுட்டோரியல் நடத்து ஆசிரியராகப் பணியாற்றினார்.

தனி வாழ்க்கை

Nanjil-nadan1.jpg

நாஞ்சில் நாடன் உடன் பிறந்தவர்கள் ஒரு தங்கை, ஐந்து தம்பிகள் என மொத்தம் ஏழு பேர். எழுவரில் நாஞ்சில் நாடன் முதலாவதாகப் பிறந்தார். இவரது தாத்தாவின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூளைக்கரைப்பட்டி என்னும் கிராமத்தின் அருகில் உள்ள முனைஞ்சிப்பட்டி. தாத்தா சுப்பிரமணியப் பிள்ளை தன் சொந்த அத்தை மகளை மணந்து இரண்டு பிள்ளைகளுடன் காலமான பின்பு, பாட்டி வள்ளியம்மாளை மணந்துக் கொண்டார். பாட்டிக்கு சொந்த ஊர் கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள பறக்கை என்னும் கிராமம்.

கல்லூரி முடிந்து இரண்டாண்டு காலம் அரசு பணிக்காகவும், கல்லூரி வேலைக்காகவும் நாகர்கோவிலில் காத்திருந்தவர் எதுவும் கிடைக்காததால் எந்தவித முன் திட்டமும் இன்றி பம்பாய்க்கு (மும்பை) சென்றார். பம்பாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தனியார் நிறுவனம் ஒன்றிலும் தினக்கூலியாக வேலைப் பார்த்தார். நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் நாஞ்சில் நாடன் குடும்பம் குத்தகைக்கு எடுத்திருந்த நிலத்தின் உரிமையாளர்கள் அவருக்கு 1973 ஆம் ஆண்டு பம்பாயில் உள்ள டபிள்யூ. ஹெச். ப்ராடி (W.H. Brady) நிறுவனத்தில் தினப்படி வேலை வாங்கி தந்தனர். அந்நிறுவனத்திலேயே கிளார்க், ஸ்டோர் கீப்பர், நிர்வாகி, மேலாளர், மேனேஜர் எனப் பதிவு உயர்வு பெற்றார். 1989 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் கிளைக்கு ரீஜினல் மேனேஜராக மாற்றம் பெற்று தென்னிந்தியாவில் உள்ள நான்கு மாநிலத்திற்கு மேலாளராகப் பணியாற்றி 31 டிசம்பர் 2005 அன்று ஓய்வு பெற்றார்.

நாஞ்சில் நாடனின் மனைவி பெயர் சந்தியா (இயற்பெயர் - பகவதி). இவர் மனைவியின் சொந்த ஊர் திருவனந்தபுரம். நாஞ்சில் நாடனின் கல்யாணம் திருவனந்தபுரத்தில் 29 ஆகஸ்ட் 1979 அன்று நடைப்பெற்றது. நாஞ்சில் நாடனின் மகள் எஸ். சங்கீதா கோவையில் எம்.டி முடித்து ஆர். விவேகானந்தனை (எம்.எஸ். ஆர்த்தோ) திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் சித்தார்த்தன், அரவிந்தன். நாஞ்சில் நாடனின் மகன் எஸ். கணேஷ் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்கிறார். இவரது மனைவியின் பெயர் ஸ்ரீலேகா.

இலக்கிய வாழ்க்கை

Nanjil-nadan4.jpg

நாஞ்சில் நாட்டில் மனிதர்கள், விவசாய நிலங்கள், நதிகள், கிராம வாழ்க்கை சூழ வாழ்ந்த நாஞ்சில் நாடனுக்கு பம்பாயில் தனிமையைப் போக்க பம்பாய் தமிழ் சங்கம் உதவியது. அங்கே சென்று அங்குள்ள நூலகத்தில் புத்தகம் வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டார். புத்தகம் வாசித்த கையோட தனிமை அவரை எழுதவும் தூண்டியது. நா. பார்த்தசாரதி நடத்தி தீபம் மாத இதழில் நாஞ்சில் நாடனின் முதல் சிறுகதை “விரதம்” 1975 ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. பா. லட்சுமணச் செட்டியாரும், பா. சிதம்பரமும் சென்னையில் நடத்தி வந்த இலக்கிய சிந்தனை என்னும் அமைப்பின் சார்பில் அவ்வாண்டிற்கான சிறந்த சிறுகதை பரிசை “விரதம்” பெற்றது. அகமதாபாத் சென்றுக் கொண்டிருந்த பா. லட்சுமணச் செட்டியார் பம்பாய் வந்து நாஞ்சில் நாடனை நேரில் சந்தித்து பரிசுத் தொகையான 50 ரூபாயை வழங்கினார்.

சிறுகதை எழுதும் நுணுக்கம் கைகூடியதும் நாஞ்சில் நாடனின் கவனம் நாவல் பக்கம் சென்றது. அந்நாளில் கவிஞர் கலைக்கூத்தனும், எழுத்தாளர் வண்ணதாசனும் இவரை நாவல் எழுதும் படி தூண்டினர். அவரது முதல் நாவலான “தலைகீழ் விகிதங்கள்” 1977 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின் தொடர்ந்து நாவல்களும், சிறுகதைகளும் எழுதி வந்த நாஞ்சில் நாடனை எழுத்தாளர் சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழுக்காகக் கட்டுரை எழுதும் படி கேட்டுக் கொண்டார். காலச்சுவடு சார்பில் நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் “நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கையில் காலம் நிகழ்த்திய மாற்றங்கள்” என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் பேசினார். இவ்வுரை கட்டுரை வடிவில் காலச்சுவடு இதழில் வெளிவந்தது. பின்னர் புத்தகமாக ”நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை காலம் நிகழ்த்திய மாற்றங்கள்” என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்தது. இன வரைவியல் எழுத்திற்கு தமிழில் இந்நாவல் ஒரு முன்னோடி படைப்பு.

இவரது சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுதிக்காக 2010 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி பரிசு பெற்றார். பின் மூன்று முறை ஜூரிக் குழுவில் இருந்து தமிழின் மூத்த எழுத்தாளரான ஆ. மாதவனுக்கு சாகித்திய அகாடமி விருதும், இளம் எழுத்தாளர்கள் அபிலாஷ் சந்திரன், சுனில் கிருஷ்ணனுக்கும் யுவ புரஸ்கார் பரிசு வாங்கித் தந்தார்.

விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பின் சார்பில் ஊட்டி குரு நித்யா குருகுலத்தில் நடத்தப்படும் காவிய முகாமில் 2012 முதல் கம்ப ராமாயண வகுப்பு எடுக்கிறார். கனடா இலக்கிய அமைப்பு சார்பில் கொரோனா காலகட்டத்தில் மாதத்தின் இரண்டாவது சனியன்று கம்பராமாயணம் வகுப்பு எடுக்கிறார். கம்பனின் மீதும், மரபிலக்கியம் மீதும் தீராப் பற்றுக் கொண்ட நாஞ்சல் நாடன் சிறு வயது முதலே பள்ளியில் மரபிலக்கியம் பயின்று வருகிறார். ஏழாம் வகுப்பில் எண்கோடி செட்டியார், உயர்நிலைப்பள்ளியில் மகாதேவன் பிள்ளை, கல்லூரியில் பேராசிரியர் அவ்வையார் அழகப்பன் அம்மையார், கே.சி. தாணு, புலவர் அரசு ஆறுமுகம், டாக்டர் எஸ். சுப்பிரமணியம், பின் பம்பாயில் நடந்த மரபிலக்கிய சொற்பொழிவு எல்லாம் இவரின் மரபிலக்கிய நாட்டத்திற்கு பங்கிளிப்பாற்றின.

இலக்கிய இடம்

Nanjil-nadan5.jpg

எழுத்தாளர் ஜெயமோகன் நாஞ்சில் நாடனின் புனைவு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “நாஞ்சில்நாடனின் கதைகளில் மிகநம்பகமான ஒரு புறச்சூழல் இருப்பதை நீங்கள் காணலாம். அது நாஞ்சில்நாடாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி, கூர்மையான தகவல்களுடன்கூடிய சித்தரிப்பு நம்மை அந்தச்சூழலை மிகத்தெளிவாக கண்முன் என பார்க்கவைக்கிறது.  ‘அம்பாரிமேல் ஓர் ஆடு’ என்ற ஆரம்பகால கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். மும்பையின் ஓர் உயர்தர சபாவின் மிதப்பான சூழலை எந்த முயற்சியுமில்லாமல் அவர் உருவாக்கி அளிக்கிறார்.

அவர் எழுதிக்காட்டிய நாஞ்சில்நாடு நாஞ்சில்மண்ணையே ஒருமுறைகூட பார்க்காதவர்களும் கற்பனையில் வந்து வாழ்ந்து சென்ற ஓர் இடமாக உள்ளது. ஓடையில் துணிதுவைக்கும் கல்லில் ஒட்டியிருக்கும் சிவப்பு சோப்பு ஏன் சொல்லப்படவேண்டும்? ஒரு கணத்தில் நம் கற்பனையை சீண்டி அது அந்த ஓடையையே நம் கண்முன் காட்டிவிடுகிறது

நாஞ்சில்நாடனின் கதைமாந்தர் அந்த நாஞ்சில்நாட்டிலேயே இயல்பாகக் காணக்கிடைப்பவர்கள். இயல்பான அற்பத்தனமும், அன்பும், பதற்றங்களும் கொண்டவர்கள். அசாதாரண கதாபாத்திரமான ‘பிராந்து’ முதல் சர்வசாதாரணமான கதாபாத்திரமான திரவியம் [தலைகீழ்விகிதங்கள்] வரை. அவர்கள் என்ன எண்ணமுடியுமோ அதையே எண்ணுகிறார்கள். அவர்கள் எதைப்பேசுவார்களோ அதையே பேசுகிறார்கள். அவர்கள் இயல்பாக எப்படி வளர்ச்சியடையமுடியுமோ அப்படி வளர்ச்சி அடைகிறார்கள்

அந்த நம்பகமான சூழலில் நம்பகமான மனிதர்கள் அடையும் உணர்ச்சிகளே அவர் படைப்பில் வருகின்றன. மிகப்பெரும்பாலும் அவர் உணர்ச்சிகளை நேரடியாக காட்டுவதில்லை.வாசகனுக்கு உணர்த்திவிட்டுச் செல்கிறார்  கடும்பசியுடன் இரு மகள்களின் வீட்டுக்குச் செல்கிறார் ஒருவர். அவர் சாப்பிட்டுவிட்டு வந்தார் என நினைத்து இருவருமே சாப்பிட அழைக்கவில்லை. பசியுடன் மீண்டும் தன் வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால் அவருடைய உணர்ச்சிகளை அவர் சொல்வதில்லை, வாசகனுக்கே விட்டுவிடுகிறார் நாஞ்சில்நாடனின் படைப்புலகில் மிகைநாடகம் இல்லை. மெல்லுணர்ச்சிகளும் இல்லை. உணர்ச்சிநிலைகள் உள்ளன. சாலப்பரிந்து போன்ற சிறுகதைகள் உதாரணம். ஆனால் அவருடைய மிகச்சிறந்த கதைகள் உணர்வெழுச்சித்தன்மை கொண்டவை.  ‘யாம் உண்பேம்’ ஓர் உதாரணம். அப்படிப்பட்ட ஐம்பது கதைகளையாவது சுட்டமுடியும். அங்கே வாசகன் உணர்வது துக்கம்போன்ற உணர்ச்சிகளை அல்ல. ஒரு பெரிய அறத்தை அல்லது வாழ்க்கைமுழுமையை தரிசித்ததன் சிலிர்ப்பை. அவற்றை எழுதியமையால்தான் நாஞ்சில்நாடன் தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவர். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி வரிசையில் வைக்கத்தக்கவர். அவருடைய பல கதைகளில் நம்பகமான சூழல், நம்பகமான கதைமாந்தர், உலகியல்சிக்கல் ஒன்று, அதைப்பற்றிய அவருடைய பார்வை ஆகியவை இருக்கும். இவை அவருடைய சாதாரணமான கதைகள். அவருடைய உணர்ச்சிகரமான கதைகளில் நம்பகமான உணர்வெழுச்சி பதிவாகியிருக்கும். அவருடைய சிறந்த கதைகளில் ஒரு மகத்தான மானுடவிழுமியம் வெளிப்பட்டிருக்கும்.” என்கிறார்.

விருதுகள்

  • 1993 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான (சதுரங்கக்குதிரை) தமிழ் வளர்ச்சித்துறை தமிழக அரசின் விருது, சென்னை
  • 1993 - 94 ஆம் ஆண்டு சிறந்த நாவல் சதுரங்கக்குதிரை, கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை, கோவை
  • 1993 இன் சிறந்த நாவல் சதுரங்கக்குதிரை, புதிய பார்வை - நீலமலைத் தமிழ்ச்சங்கம் பரிசு, சென்னை
  • 1994 இன் சிறந்த சிறுகதைத் தொகுதி பேய்க்கொட்டு, லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, கோவை
  • 1986 ஆம் ஆண்டின் சிறந்த நாவல் மிதவை, தெய்வத் தமிழ்மன்றம் பரிசு, மயிலாடுதுறை
  • 1986 ஆம் ஆண்டின் சிறந்த நாவல் மிதவை, பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்கம், பம்பாய்
  • தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் சிறுகதை வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, கல்கத்தா தமிழ்மன்றம் பரிசு, கல்கத்தா
  • 1975 ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த சிறுகதை விரதம், இலக்கிய சிந்தனை, சென்னை
  • 1977 ஜீலை மாதத்தின் சிறந்த சிறுகதை வாய் கசந்தது, இலக்கிய சிந்தனை, சென்னை
  • 1979 நவம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதை முரண்டு, இலக்கிய சிந்தனை, சென்னை
  • வாழ்நாள் இலக்கியச் சாதனை விருது, 1999 ஆம் ஆண்டு, அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு
  • நதியின் பிழைப்பன்று நறும்புனல் இன்மை, உலகத் தமிழாசிரியர்கள் நினைவுப் பரிசு 2007, தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா
  • 1994 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதி பேய்க்கொட்டு, திருப்பூர் தமிழ்ச் சங்கம்
  • 2009, கண்ணதாசன் விருது, கண்ணதாசன் கழகம், கோவை
  • 2010 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது, சூடிய பூ சூடற்க சிறுகதைத் தொகுதி
  • 2009 தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக இயற்தமிழ் கலைஞர் கலைமாமணி விருது.

நூல்கள்

நாவல்கள்
  • தலைகீழ் விகிதங்கள் (1977, 1983, 1996, 2001, 2008, காலச்சுவடு பதிப்பகம்)
  • என்பிலதனை வெயில் காயும் (1979, 1995, 2007, புஸ்தக டிஜிட்டல் மீடியா)
  • மாமிசப்படைப்பு (1981, 1999, 2006, விஜயா பதிப்பகம்)
  • மிதவை (1986, 2002, 2008, விஜயா பதிப்பகம், நற்றிணை பதிப்பகம்)
  • சதுரங்கக் குதிரை (1993, 1995, 2006, விஜயா பதிப்பகம்)
  • எட்டுத்திக்கும் மதயானை (1998, 1999, 2008)
சிறுகதை தொகுதி
  • தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் (1981)
  • வாக்குப் பொறுக்கிகள் (1985)
  • உப்பு (1990)
  • பேய்க் கொட்டு (1994, 1996)
  • பிராந்து (2002)
  • சூடிய பூ சூடற்க (2007)
  • கான் சாகிப் (2010)
  • தொல்குடி
  • கரங்கு
  • அம்மை பார்த்திருக்கிறாள்
கவிதை தொகுதி
  • மண்ணுள்ளிப் பாம்பு (2001)
  • பச்சை நாயகி (2010)
  • வழுக்குப்பாறை
  • அச்சமேன் மானுடவா
கட்டுரை தொகுதி
  • நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (2003, 2004, 2008 - காலச்சுவடு பதிப்பகம்)
  • நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2003, 2008)
  • நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை (2006)
  • காவலன் காவான் எனின் (2008)
  • தீதும் நன்றும் (2009)
  • திகம்பரம் (2010)
  • கம்பனின் அம்பறாத்துணி (2014)

வெளி இணைப்புகள்