நல்வெள்ளியார்

From Tamil Wiki
Revision as of 16:48, 7 October 2022 by Siva Angammal (talk | contribs)

நல்வெள்ளியார் என்றும் நல்லொளியார் என்றும் அழைக்கப்பட்ட இவர்  சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது 4 பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் குறிப்பு

நல்வெள்ளியார் என்ற இப்புலவரின் பெயர் வெள்ளிவீதியார் என்னும் பெண்பாற் புலவரின் பெயரை ஒத்துள்ளது. மேலும்  நல்வெள்ளியார்  இயற்றிய பாடல்களில்  பெண்களின் நுண்ணுணர்வுகள் நுட்பமாக  வெளிப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு இவர் பெண்பாற் புலவர் எனக் கருதப்படுகிறது.

பாடல்கள்

நல்வெள்ளியார் இயற்றிய 4 பாடல்கள் கீழ்காணும் சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன;

அகநானூறு 32

நெருநல் எல்லை ஏனல் தோன்றி,

திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,

புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,

இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,

சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்

குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,

'சூரரமகளிரின் நின்ற நீ மற்று

யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்

சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு

இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என்

உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்

கடிய கூறி, கை பிணி விடாஅ,

வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற

என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்

சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து,

இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்

தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.

சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே

மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,

என் குறைப் புறனிலை முயலும்

அண்கணாளனை நகுகம், யாமே.


எளிய பொருள்;

அழகிய மணி விளங்கும் பூணினையுடைய ஒருவன், நேற்றைப் பொழுது தினைப் புனத்திற்கு வந்து  அரசன் போலும் தனது தோற்றத்துடன் மாறுபட, இரத்தல் செய்யும் மக்களைப் போலப் பணிந்த மொழிகளைப் பலகாற் சொல்லி, சிறிய தினையிற் பொருந்தும் கிளிகளைக் கடியுமாறு, குளிருடன் கூடிய தட்டையாய கிளிகடி கருவிகள் வலியில்லாதன கொண்டு பல முறையும் புடைத்து, சூரரமகளிர் போல நின்ற நீ யாரோ, எம்மை வருத்தினவளே, நின்னை நுகர்வேன் என்று கூறி, எனது பிடரியினை அணைத்துக் கொண்டானாக;  அவ்வுரைக் கருத்தினை மனத்திற் கொண்டு,  மழை பெய்யப் பெற்ற மண்போல, நெகிழ்ந்து வருந்திய என் உள்ளத்து நிலையினை அவன் அறிதலை அஞ்சி, மனத்தொடு படாத கடிய சொற்களைக் கூறி அவன் கையை அகற்றிய, எனது சினத்தைக் கண்டு(கூசி),  தன் காதலை உள்ளடக்கிக் கொண்டு; பிறிதொரு சொல்லும் என்னிடம் கூற வலியற்றவனாகி, வருந்தி, தன் இனத்தினின்றும் நீங்கும் களிற்றைப்போல் மீண்டான்,  அவன் இன்றும் வந்து நமக்குத் தோலாதிருத்தல் இல்லை; நமது வளைந்த சந்தினையுடைய பெரிய தோளின் உரிமை,  தனக்கே குற்றமின்றி உளதாதலையும் அறியானாய், வருந்தி, என்னால் அடையலாம் காரியத்திற்கு என்னை இரந்து பின்னிற்றற்கு முயலும்,  நம்முன் வந்துறும் அத் தலைவனைப் பழித்து மகிழ்வோம்;

குறுந்தொகை 365

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்

பாடில கலிழ்ந்து பனியா னாவே

துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவி

தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்

மருங்கிற் கொண்ட பலவிற்

பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே.


எளிய பொருள்;

அணுகுதற்கரிய நெடிய மலைப்பக்கத்திலே ஒலித்த அருவியானது தண்ணென்று முரசைப்போல ஒலிக்கின்ற ஆரவாரத்தை வெளிப்படுத்தும் பக்கத்திற் கொண்ட  பெரிய மலையையுடைய நாடனே நின்னால் விரும்பப்பட்ட சங்குகளை அறுத்துச் செய்த ஒளிர்வளைகள் அணிந்த தலைவியின் கண்கள்  நாள்தோறும் துயிலுதல் இல்லாதனவாகி கலங்கி நீர்த்துளியை நீங்காதிருக்கின்றன.

நற்றிணை 7

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,

பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,

கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்

கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,

தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்

இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!

வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை

தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்

சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.


எளிய பொருள்;

தோழீ ! மூங்கிலின் நெல்லைத் தின்ற வரி பொருந்திய நெற்றியையுடைய யானை; தண்ணிதாகிய நறுமணங் கமழும் மலைப்பக்கத்திலே உறங்காமல் நிற்கும்; சிறிய இலையுடைய சந்தன மரத்தினையுடைய வாடிய பெரிய காட்டினில் அகன்ற சுனையில் நீர் நிறையவும்; பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிப்பவும்; கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவருகின்ற மிக்க விசையினையுடைய காற்றாற்றில்  மூங்கிலும் முழுகுமாறு பெருகிய வெள்ளத்தின் அலை காட்டில் சென்று மோதவும் ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னி நிற்கும் இக் காலத்தை நோக்கினவுடன் அவர் இங்கே வந்து நின்னை வரைந்து கொள்வராதலின், நீ வருந்தாதே கொள் !

நற்றிணை 47

பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி

உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,

நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்

பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்

கானக நாடற்கு, 'இது என' யான் அது

கூறின் எவனோ- தோழி! வேறு உணர்ந்து,

அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,

வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,

அன்னை அயரும் முருகு நின்

பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?


எளிய பொருள்;

தோழீ ! தலைவனைப் பிரிந்ததனாலாகிய நின் மெய்வேறுபாட்டைப் பிறிதொன்றாகக் கருதித் தெய்வத்தான் அறியப்படுகின்ற கழங்கில் அம்மாறுபாட்டைக் காட்டுதலாலே வெறி எடுத்தவழித் தீருமென்றறிந்த உள்ளத்துடனே, ஆடு  அறுத்து அன்னையால் வணங்கப் பட்ட  முருகவேள்; நினது பொன் போன்ற பசலையைப் போக்குதற்குப் பயன்படாமையினாலே; புலியானது பெரிய களிற்றியானையைக் கொன்றதேயென்று அதன் கரிய பிடி யானை வாடிய துன்பத்தோடும் வருத்தத்தோடும் இயங்க மாட்டாமே; நெய்தலின் பசிய இலையை ஒக்கின்ற அழகிய செவியையுடைய துன்புற்ற தன் (அழகிய) கன்றினை அணைத்துக்கொண்டு; விரைவாகத் தீர்த்தற்கரிய புண்ணுற்றாரைப் போல வருத்தமுற்றிருக்கும் கானக நாடனை நெருங்கி; நீ தலையளி செய்யாமை காரணமாக இப் பசலை தோன்றிற்றுக் கண்டாய் என்று யான் அதனைக் கூறின் அதனால் ஏதேனும் குற்றப்பாடுளதாமோ? உளதாயிற் கூறிக்காண்;

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்

எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்

அகநானூறு, தமிழ் இணையக் கல்விக் கழகம்;