first review completed

தோப்பில் முகமது மீரான்

From Tamil Wiki
Revision as of 20:26, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
நன்றி: jeyamohan.in

தோப்பில் முகமது மீரான் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019) சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர மண் சார்ந்த இஸ்லாமியக் கலாசாரத்தையும், வாழ்க்கையையும், வட்டார வழக்கையும் தன் படைப்புகளில் யதார்த்தமாக, வரலாற்றுப்பூர்வமாகப் பதிவு செய்தார். மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் எழுத்தால் உந்தப்பட்டு எழுதத் தொடங்கி, புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 22 படைப்புகளுக்கும் மேல் எழுதினார்.எளிய மக்கள் மேல் வரலாறு முழுக்க செலுத்தப்படும் ஒடுக்குமுறையும், அதன்விளைவான வன்முறையும், அம்மக்கள் மீதான அவரது கருணையும் மீரானின் படைப்புகளின் அடிநாதமாக ஒலித்தன.

பிறப்பு, கல்வி

குமரி மாவட்டத்தின் கடலோர கிராமமான தேங்காய்ப்ப்பட்டிணத்தில் முஹம்மது அப்துல் காதர்-ஃபாத்திமா இணையருக்கு செப்டம்பர் 26, 1944 அன்று மகனாகப் பிறந்தார். தேங்காய்ப்பட்டணம் அம்சி உயர்நிலைப் பள்ளியிலும் நாகர்கோயில் தெ.தி. இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முகம்மது மீரான் கல்வி பயின்றது மலையாள மொழியில்.

தனி வாழ்க்கை

இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவருக்கு ஷமீம் அகமது, மிர்ஷாத் அகமது என்று இரு மகன்கள்.

தேங்காய்ப்பட்டிணத்தில் அவரது வீட்டு மதிலுக்குப் பின்பக்கம் ஒரு சுடுகாடு இருந்தது. ஒதுக்கப்பட்ட அந்த இடத்தைத் தோப்பு என அழைத்தார்கள். இறந்து போனவர்களின் நினைவுகளை, அவர்கள் வாழ்க்கையில் பெற்ற சுகதுக்கங்களை, நீதி அநீதிகளை எழுத முற்படுகிறவர் என்பதால் தன் பெயரைத் தோப்பில் முகமது மீரான் என்று வைத்துக் கொண்டதாக ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

இலக்கியப் பணி

jeyamohan.in

கல்லூரிப் படிப்பை மலையாளத்தில் படித்த முகம்மது மீரான் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் எழுத்துக்களால் மிகவும் கவரப்பட்டார். அவரது எழுத்துப் பணி மலையாளத்தில் தொடங்கியது. திருவனந்தபுரத்தில் வசித்த எழுத்தாளர் அ.மாதவனுடன் ஏற்பட்ட நட்பால் தமிழ் நூல்களைப் படிக்கத் தொடங்கி, விரைவில் தமிழில் எழுதவும் தொடங்கினார். அவர் முதன் முதலில் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை யில் இஸ்லாமியச் சமூகத்தின் பழமையான அதிகாரக் கட்டமைப்பைக் காட்டி,பொருளியல் அதிகாரமும் மதமும் ஒன்றுக்கொன்று கருவியாகி எளிய மக்களைச் சுரண்டுவதைச் சித்தரித்தார். அவரது தந்தை எம்.ஓ. முகமது அப்துல் காதர், கடலோர கிராமங்களைப் பற்றிச் சொன்ன கதைகளே ஒரு கடலோர கிராமத்தின் கதையாக விரிந்ததாக ஓர் நேர்காணலில் குறிப்பிட்டார். 1977-ல் முஸ்லீம் முரசு பத்திரிகையில் வெளிவந்த இந்த நாவல் கவனிக்கப்படவில்லை. 1988-ம் ஆண்டு தானே அதைப் பதிப்பித்தார். ஒரு கடலோர கிராமத்தின் கதை இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்றது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி அதைத் தமிழின் ஒரு முக்கியமான நாவலாகக் கருதினார்.

குமரி மாவட்டத்தில், இந்திய தேசத்தின் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் சம்பவங்களைப் பிணைத்து கடலை நம்பி வாழ்ந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களின் வாழ்வை அந்த காலகட்டத்தினூடாகச் சித்தரித்த நாவல் துறைமுகம்.

panuval.com

ஒரு காலத்தில் கேரள மன்னர் ஐந்து முஸ்லீம் நெசவாளர்களை ஒரு கிராமத்தில் குடிவைக்கிறார். அவர்களால் உருவாகிய அஞ்சுவண்ணம் தெருவில் வாழும் மாறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையை அதன் வரலாற்றுடன். தொன்மத்துடன் அழியா நினைவுகளுடன் பதிவு செய்திருக்கிறார் முகமது மீரான். மண்ணின் மரபான வாழ்க்கை நோக்குக்கும் புதிதாய் முளைத்துவரும், கல்வி பெற்ற உலகளாவிய நோக்குக்குமான மோதலே அஞ்சுவண்ணம் தெரு நாவல்..

1970-களில் திருவனந்தபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான பூவாற்றில் மீனவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடந்த மோதலை அடிப்படையாகக் கொண்டது கூனன் தோப்பு.

அவர் இறுதியாக எழுதிய, சாகித்ய அகாடமி விருது பெற்ற சாய்வு நாற்காலியும் வீழ்ச்சியின் கதையே. திருவனந்தபுரம் அரசர் மார்த்தாண்டவர்மரால் 'அம்மாவா' என்று அழைக்கப்பட்ட, செல்வந்தரான பவுரீன் பிள்ளையின் குடும்பத்தின், இரு நூற்றாண்டுகளுக்கு நீளும் கதையைச் சொல்வது. பழம்பெருமை, காம விழைவுகள் மற்றும் குருட்டு நம்பிக்கையில் மூழ்கி நிகழ் காலம் பற்றிய உணர்வே அற்று எளிய மக்களையும் பெண்களையும் காலடியில் நசுக்கும் அடுத்த தலைமுறைகள் படிப்படியாகச் சந்திக்கும் பெரு வீழ்ச்சியும் தலைமுறைகளாகத் தொடரும் மன ஓட்டமும் சொல்லப்படுகிறது. முஸ்தபாக்கண்ணு சாய்ந்து காலாட்டியபடியே வாசம் செய்யும் சாய்வு நாற்காலியும் பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அவருடைய அதபு (ஒழுக்கம்) பிரம்பும்கூட கதையின் முக்கிய பாத்திரங்கள்.

மீரானின் சிறுகதைகளின் பேசு பொருள்கள் மனித சமூகம் முழுமைக்குமானவை. பழமை, பாரம்பரியம், மரபு இவற்றைச் சிதைத்து மாறிவரும் நவீன உலகத்தின் அகப்புற முரண்களை அவரது சிறுகதைகள் பேசுகின்றன.

முகமது மீரான் மலையாளத்திலிருந்து சில முக்கியமான ஆக்கங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கை வரலாறு அவற்றுள் ஒன்று.

இறப்பு

தோப்பில் முகமது மீரான் சிறிய உடல் நலக் குறைவுக்குப்பின் மே 10, 2019 அன்று காலமானார்.

goodreads.com

இலக்கிய இடம்/மதிப்பீடு

நன்றி:பனுவல்.காம்

மலையாளம், அரபி, நாகர்கோவில் வட்டார வழக்கு, அந்த மண் சார்ந்த கலாச்சாரம், இஸ்லாமியர்களின் பேச்சு வழக்கு மற்றும் இஸ்லாமிய சமயத்தின் தொன்மக் குறியீடுகள் சார்ந்த மொழி இவற்றின் கலவையான நடையில் முகமது மீரான் தமது புனைகதைகளை எழுதினார். பெரும்பாலான படைப்புகள் இஸ்லாமியக் கதா பாத்திரங்களோடும் அவர்களின் புழங்கு வெளியோடும் இயைந்தே உருவாக்கப்பட்டன. "பொதுவாக இலக்கிய வீச்சும் வேகமும் கொண்ட முதன்மையான இஸ்லாமிய படைப்பாளி 'தோப்பில் முகம்மது மீரான் ' என்றே ஓர் இலக்கிய விமர்சகனாக நான் கூறுவேன்[1] " என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். எழுத்தாளர்கள் சல்மா, கீரனூர் ஜாஹீர் ராஜா போன்றவர்களுக்கு அவரே முன்னோடியாவார். இஸ்லாமியக் கலாச்சாரத்தை பொதுவெளியில் சிறப்பாக முன்வைத்து, அதைக் குறித்து எழுதுவதில் இருந்த மனத் தடையை உடைத்து, இஸ்லாம் சார்ந்த வாழ்வை விமர்சன பூர்வமாக அணுகினார்.

நேர்மையும் நகைச்சுவை உணர்வும் மிக்க அவரது ஆக்கங்கள் பக்கச்சார்பின்றி நேரடியாக வாழ்க்கையை விவரிப்பவை. மறைக்கப்பட்ட, விலக்கப்பட்ட சரித்திரத்தை மீள் உருவாக்கம் செய்தவை. வாழ்ந்து கெட்டவர்களையும், வறுமையோடு போராடுகிறவர்களையும், மூடநம்பிக்கைகள் பீடித்தவர்களையும், வீட்டிற்குள்ளாக ஒடுக்கி வைக்கப்பட்ட பெண்களின் துயரையும் பதிவு செய்திருக்கிறார். அவலங்களூடே, அப் பாறைகளிலும், பாலைகளிலும் வேர் ஊன்றித் தளிர்விடும் கருணையையும், அன்பையுமே அவர் படைப்புகள் சொல்கின்றன.

இன்னொரு பக்கம் இன்று மதம் அரசியலாக்கப்படுவதையும் தூய்மை வாதம் பேசிக் கொண்டு மதவெறியை உருவாக்குகிறவர்களையும், மரபான எளிய வாழ்க்கையை, ஞானத்தைத் தொடர விரும்பும் இஸ்லாமியர்களையும் ஒரு சேர நம்முன்னே அறிமுகப்படுத்துகிறார்.

பஷீரிலிருந்து மீரான் பெற்றுக்கொண்ட உதிரிச்சொல் உரையாடல்களும் கற்பனாவாதச் சாயல்கொண்ட சூழல் விவரணைகளும் அவருடைய நாவல்களை நுட்பமான அகவெளிப்பாடு கொண்டவையாக ஆக்குகின்றன. வாழ்க்கையை அதன் இயல்போடு, அழகோடு ஆவணப்படுத்தி, தன் ஊரின் அழியா நினைவுகளைக் கலையாக்கினார்.

வீழ்ச்சியையும், வறுமையையும் , செயலற்று துருவேறி அழியும் சமூகத்தையும் சித்தரித்தாலும் இவற்றிற்கு அப்பால் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக நோக்கும் கண் கொண்டவர் முகமது மீரான். ஜெயமோகன் "ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் தர்காவில் ஊரை நோக்கி புன்னகைத்தபடி வாழும் சூஃபி பக்கிரி பஷீர்.அங்கே ஆர்மோனியத்துடன் வந்தமர்ந்த பாடகர் தோப்பில்" என்று அவரது நோக்கைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

விருதுகள், சிறப்புகள்

  • சாகித்திய அகாதெமி விருது – சாய்வு நாற்காலி (1997)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • தமிழக அரசு விருது
  • அமுதன் அடிகள் இலக்கிய விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது

படைப்புகள்

commonfolks.in
புனைவுகள்
  • ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
  • துறைமுகம் (1991)
  • கூனன் தோப்பு 1993)
  • சாய்வு நாற்காலி (1997)
  • அஞ்சுவண்ணம் தெரு (2010
சிறுகதைத் தொகுப்புகள்
  • அன்புக்கு முதுமை இல்லை
  • தங்கராசு
  • அனந்தசயனம் காலனி
  • ஒரு குட்டித் தீவின் வரிப்படம்
  • தோப்பில் முகமது மீரான் கதைகள்
மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்புகள்
  • தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது)
  • வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)
  • ஹுஸ்னுல் ஜமால்- (மொயின் குட்டி வைத்தியர்)
  • த்ரிகோட்டூர் பெரும-(யு.ஏ.காதர்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.