being created

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்

From Tamil Wiki
திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் (திரு.வி.க) (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம்) (ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) தமிழறிஞர், சைவ அறிஞர், தொழிற்சங்க முன்னோடி, இதழியல் முன்னோடி, பேச்சாளர், தனித்தமிழியாக்க முன்னோடிகளில் ஒருவர். தமிழ் மறுமலர்ச்சியின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக திரு.வி.க மதிப்பிடப்படுகிறார்

பிறப்பு, கல்வி

பெற்றோர்

திரு.வி.கவின் தந்தை பெயர் திருவாரூர் விருத்தாசல முதலியார். அவர்களின் பூர்வீகம் திருவாரூர். விருத்தாசல முதலியாரின் அன்னை பெயர் கனகம்மாள். விருத்தாசல முதலியார் இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். இராமநாடக ஆசிரியர், இராமநாடக நடத்துநர். தமிழ்ப்பள்ளி ஒன்றை தொடங்கி அங்கே ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை இராயப்பேட்டையில் அர்சிமண்டி ஒன்றை சிலகாலம் நடத்தினார். செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாரும் குத்தகைதாரராகச் செயல்பட்டார். பெரும்பொருள் ஈட்டினார்.

விருத்தாசல முதலியாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பச்சையம்மாள். இரண்டாம் மனைவி சின்னம்மாள். பச்சையம்மாளுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். பச்சையம்மாள் மறைந்தபின் விருத்தாசல முதலியார் சின்னம்மாளை மணந்தார். சின்னம்மாள் எட்டு குழந்தைகளைப் பெற்றார். அதில் ஐந்தாவது குழந்தை திரு.வி. உலகநாத முதலியார். ஆறாவது குழந்தை திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்.

பிறப்பு

விருத்தாசல முதலியார் சென்னைக்கு அருகே உள்ள குன்றத்தூர் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாருவதற்கான ஒப்பந்தத்தை பிரித்தானிய அரசிடமிருந்து பெற்றார். அந்தப் பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம்(தற்போது தண்டலம்) சிற்றூரில் குடியிருந்தார். அப்போது விருத்தாசல முதலியார், சின்னம்மாள் இணையருக்கு ஆறாவது மகனாக ஆகஸ்ட் 26, 1883-ல் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் பிறந்தார்.

விருத்தாசல முதலியார் முதலியார் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். பச்சையம்மாள் இறந்த பின் சின்னம்மாளை மணந்தார். சின்னம்மாளுக்கு நான்கு ஆண் மக்கள், நான்கு பெண் மக்கள். ஐந்தாவது மகனாகிய திரு.வி.உலகநாத முதலியாரும் ஆறாவது குழந்தையான திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரும் இறுதிவரை இணைந்தே வாழ்ந்தார்கள்.

கல்வி
பள்ளிக்கல்வி

கல்யாணசுந்தர முதலியார் தொடக்கத்தில் தந்தையிடம் கல்வி பயின்றார். 1890ல் விருத்தாசல முதலியார் தன் குழந்தைகளின் கல்வியின்பொருட்டு சென்னையில் ராயப்பேட்டையில் குடியேறினார். திரு.வி.க ஆரியன் தொடக்கப் பள்ளியில் பயின்றார். அப்பள்ளியில் கருத்துவேறுபாடும் பிளவும் உருவாகவே 1894-ல் வெஸ்லி பள்ளியில் (உவெசுலி பள்ளி) நான்காம் வகுப்பில் சேர்ந்தார்.

மிகவும் பருமனாக இருந்த கல்யாணசுந்தர முதலியாருக்கு ஒரு சாமியார் அளித்த சித்த மருந்தை விருத்தாசல முதலியார் அளித்ததாகவும், அந்த மருந்துடன் செய்யவேண்டிய கடுமையான பத்தியமுறைகளை கடைப்பிடிக்க முடியாமல் திருவிகவின் வலது கையும் காலும் முடங்கியதாகவும் அவருடைய வரலாற்றை எழுதிய அவருடைய நெடுங்கால உதவியாளர் சக்திதாசன் சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். அப்போது திரு.வி.கவுக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தியவர் தலித் சிந்தனையாளரான அயோத்திதாச பண்டிதர்.

உடல்நிலை மேம்பட்ட பின் 1908-ஆம் ஆண்டில் மீண்டும் வெஸ்லி பள்ளியில் சேர்ந்தார். வெஸ்லி பள்ளியில் டேவிட் தேவதாஸ் என்னும் ஆசிரியரிடம் ஆங்கிலம் பயின்றார். நா.கதிரைவேற் பிள்ளை வெஸ்லி பள்ளியின் தமிழாசிரியராக வந்தார். அவரிடம் தமிழ் கற்றார். கதிரைவேற்பிள்ளைக்கும் வடலூர் இராமலிங்க வள்ளலார் ஆதரவாளர்களுக்கும் இடையே வழக்கு (அருட்பா மருட்பா விவாதம்) நிகழ்ந்தபோது தன் ஆசிரியர் கதிரைவேற்பிள்ளைக்காக நீதிமன்றத்தில் சாட்சியம் சொன்னார். அதன்பொருட்டு நீதிமன்றம் செல்லவேண்டியிருந்தமையால் தேர்வு எழுதுவதற்கான வருகைப்பதிவு இருக்கவில்லை. பள்ளி நிர்வாகம் திருவிகவை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அத்துடன் கல்வி நின்றது

தமிழ்க்கல்வி

பள்ளிக்கல்வி நின்றபின் கதிரைவேற்பிள்ளையிடம் தொடர்ச்சியாக தமிழ் கற்று வந்தார். கதிரைவேற்பிள்ளை மறைந்த பின் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களைப் பாடம் கேட்டார். இராயப்பேட்டை சிதம்பர முதலியாரிடம் திருக்குறள் கற்றார். மயிலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தேவப்பிரகாசம் பண்டிதரிடம் கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்ற நூல்களைப் பயின்றார். இராயப்பேட்டை குகானந்த நிலையம் என்னும் இடத்தில் வந்து தங்கும் வழக்கம் கொண்டிருந்த மறைமலையடிகள் சிலகாலம் திரு.வி.கவுக்கு தமிழ்நூல்களைப் பாடம் சொன்னார். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் திருவிகவிற்கு தமிழ்க்கல்வி அளித்திருக்கிறார்.

ஆங்கிலக் கல்வி

மதராஸ் டைம்ஸ் என்னும் ஆங்கில நாளிதழின் ஆசிரியரான கிளின்பார்லோ என்னும் அறிஞர் நடத்திவந்த ஷேக்ஸ்பியர் கிளப் என்னும் அமைப்பின் உறுப்பினராகி திருவிக ஆங்கில இலக்கியங்களைக் கற்றார். குகானந்தநிலையத்திற்கு வந்து தங்கும் சச்சிதானந்தம் பிள்ளை என்பவரிடமிருந்து மேலைநாட்டு அரசியல், சமூகவியல் சிந்தனைகளை கற்றார்.

மதக்கல்வி

பாம்பன் குமரகுருதாச சுவாமிகளிடம் சைவசித்தாந்தப் பாடங்களைக் கற்றார். மருவூர் கணேச சாஸ்திரி, கடலங்குடி நடேச சாஸ்திரி ஆகியோரிடம் சம்ஸ்கிருத நூல்களை பாடம் கேட்டார். புதுப்பேட்டையில் வாழ்ந்த சமண ஆசிரியர்களான பார்சுவநாத நயினார், சக்ரவர்த்தி நயினார் ஆகியோரிடம் சமணநூல்களை கற்றார். அயோத்திதாச பண்டிதர் நடத்திய சாக்கிய பௌத்த சங்கம் என்னும் அமைப்பில் இருந்து பௌத்த தத்துவங்களைப் பயின்றார். அப்துல் கரீம் என்னும் இஸ்லாமிய அறிஞரிடம் இஸ்லாமிய மார்க்க கருத்துக்களை பயின்றார்.

தனிவாழ்க்கை

குடும்பம்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் கமலாம்பிகையை 13 செப்டெம்பர் 1912-ல் திருமணம் செய்துகொண்டார். ராயப்பேட்டை இருளப்பன் தெருவில் ஜான் ரத்தினம் பிள்ளை தலைமையில் திருமணம் நிகழ்ந்தது. பூவை கலியாணசுந்தர முதலியார் வாழ்த்துப்பாடல் பாடினார். கமலாம்பிகை சென்னை கார்டன் உட்ரோப் நிறுவனத்தில் கணக்காராக பணியாற்றிய கிருஷ்ணசாமி முதலியாரின் மகள். இளமையில் பெற்றோரை இழந்த கமலாம்பிகை தன் பெரியதந்தையாரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவர். திருவிக- கமலாம்பிகை இணையருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.ஆண்குழந்தை பிறந்த முதல் வாரத்திலேயே மறைந்தது. திலகவதி என்று பெயரிடப்பட்ட மகள் ஓராண்டில் மறைந்தாள். கமலாம்பிகை எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டார். 1918-ல் மனைவி மறைந்தார். அஞ்சலிக்குறிப்பை திருவிக 18 செப்டெம்பர் 1918ல் எழுதியிருக்கிறார்.

பணிகள்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் 1906-ல் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டதால் அவ்வேலையிலிருந்து நீங்கினார். உமாபதி குருப்பிரகாசம் பிரஸ் என்னும் அச்சகத்தை தொடங்கி நடத்தினார். அதில் பெரியபுராணத்தை தனித்தனி இதழ்களாக வெளியிட்டார். அதில் இழப்பு ஏற்படவே ஆசிரியர் பணிக்குச் சென்றார். அதன்பின் இதழாளராகப் பணியாற்றினார்.

ஆசிரியப் பணி

டேனியல் சிங் என்னும் ஆசிரியரின் பரிந்துரையால் திருவிக 1910 முதல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். ஜான் ரத்தினம் பிள்ளை என்னும் அறிஞர் வெஸ்லியன் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். திருவிக அங்கே ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 1916 ஜூன் மாதம் இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். ஓர் ஆண்டு தலைமையாசிரியராகப் பணியாற்றியபின் 5 டிசம்பர்1917 ல் அரசியல் செயல்பாட்டில் ஈடுபடும் நோக்குடன் பணியை துறந்தார்.

அரசியல்

முதல் உரை

1916 டிசம்பர் மாதம் சைவசித்தந்த மகாசமாஜம் சார்பில் ஒரு மாநாடு சென்னை ஹாமில்டன் பால அருகே இருந்த இராஜு கிராமணியார் தோட்டம் என்னுமிடத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சர். பிட்டி தியாகராஜச் செட்டியார் பிராமணரல்லாதார் முன்னேற்றம் என்னும் தலைப்பில் பேசினார். அன்னிபெசண்டின் ஹோம்ரூல் இயக்கம், காங்கிரஸ் இரண்டையும் எதிர்த்தார். பிராமணரல்லாதாருக்கான கட்சி ஒன்று தேவை என உணர்வதாக அவர் சொன்னார். அவ்வாண்டு ஜஸ்டிஸ் கட்சி உருவானது. ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) ஆந்திர பிரகாசிகா (தெலுங்கு) திராவிடன் (தமிழ்) ஆகிய இதழ்களை ஜஸ்டிஸ் கட்சி நடத்தியது. ஜஸ்டிஸ் கட்சி சைவசமயம், தமிழ்மொழி ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதாகக் கருதிய சைவர்கள் அதை எதிர்த்தனர். ஜஸ்டிஸ் கட்சியின் அரசியலுக்கு எதிராக 1917 செப்டெம்பர் மாதம் கோகலே மண்டபத்தில் திவான்பகதூர் கேசவப் பிள்ளை தலைமையில் கூடிய கண்டனக் கூட்டத்தில் ’திராவிடரும் காங்கிரஸும்’ என்னும் தலைப்பில் திருவிக தன் முதல் உரையை ஆற்றினார்.

சென்னை மாகாண சங்கம்

தென்னகத்தின் பிராமணரல்லாதார் காங்கிரஸ் ஆதரவாளர்கள்தான் என்பதை நிறுவும் நோக்குடன் சென்னை மாகாண சங்கம் என்னும் பெயருடன் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. திவான் பகதூர் கேசவப் பிள்ளை தலைவர். லாட் கோவிந்த தாஸ், ஈ.வெ.ராமசாமி பெரியார் ,நாகை பக்கிரிசாமிப் பிள்ளை, சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை சீனிவாசப்பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் அதன் உதவித் தலைவர்கள். தி.வி.கோபாலசாமி முதலியார், குருசாமி நாயுடு, டாக்டர் வரதராஜுலு நாயுடு, சக்கரைச் செட்டியார் ஆகியோருடன் திரு.வி.கவும் அதில் அமைச்சுப் பொறுப்பில் இருந்தனர். சென்னை மாகாண சங்கம் சார்பில் தொடங்கப்பட்ட தேசபக்தன் என்னும் இதழுக்கு ஆசிரிட்யர் பொறுப்பை ஏற்ற திருவிக அதன் பொருட்டு ஆசிரியப்பணியை துறந்தார்.

தமிழ்மொழி அரசியல்

அரசியல் விவாதங்கள் தமிழில் நிகழவேண்டும் என திரு.வி.க முன்முயற்சி எடுத்தார். 1918ல் சென்னை மாகாண சங்கம் சார்பில் நடைபெற்ற தஞ்சை- திருச்சி மாநாட்டில் அரசியலறிக்கைகள், உரைகள் தமிழில் அமையவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார்.

காங்கிரஸ் பணி

திருவிக 6 ஏப்ரல் 1919 ல் சென்னையில் காந்தியால் அமைக்கப்பட்ட சத்யாக்ரக சபையின் சென்னை நகரத்தில் ராயப்பேட்டை வட்டாரத்தின் பொறுப்பை ஏற்றார். ஜாலியன் வாலாபாக் படுகொலைக் கண்டனக் கூட்டங்கள் நடத்தினார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தார்.

15,15 நவம்பர் 1924 ல் திருவண்ணாமலையில் ஈ.வெ.ராமசாமி பெரியார் தலைமையில் கூடிய தமிழ்நாட்டு காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸில் இருந்த சுயராஜ்ய கட்சி ஆதரவாளர்கள் காங்கிரஸ் சட்டச்சபைக்குச் செல்லவேண்டும் என்று கூறியமைக்கு ஆதரவாக திருவிக தீர்மானம் கொண்டுவந்தார். சட்டச்சபையை கைப்பற்றி தங்கள் மக்களாதரவை அரசுக்கு காட்டுவது காங்கிரஸுக்கு நல்லது என்றும் , சட்டச்சபையை கைப்பற்றிய பின் அமைச்சரவை அமைக்காமல் அரசுக்கு முட்டுக்கட்டைபோட வேண்டும் என்றும் திருவிக வாதிட்டார். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அத்தீர்மானத்தை எதிர்த்தார், ஆனால் அந்த தீர்மானம் ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டது. தமிழக காங்கிரஸில் ராஜகோபாலாச்சாரியாரின் முதல் தோல்வியாக அது கருதப்பட்டது.

1925 நவம்பரில் காஞ்சீபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு திரு.வி.க தலைமையில் கூடியது. அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி ஈ.வெ.ராமசாமி பெரியார் ஆதரவுடன் எஸ்.ராமநாதன் கொண்டுவந்த தீர்மானத்தை திருவிக எதிர்த்து தோற்கடித்தார். அது பிளவுப்பார்வை என அவர் கருதினார். இதனால் ஈ.வெ.ராமசாமி பெரியாருக்கும் திருவிகவுக்கும் கருத்து மோதல் உருவாகியது.

1925 டிசம்பரில் கான்பூரில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில் சட்டச்சபைகளை தேர்தலில் வெல்வது என முடிவாகியது. திரு.வி.க ஆறுமாத காலம் காங்கிரஸுக்காக தேர்தல்பிரச்சாரம் செய்தார். செங்கற்பட்டு மாவட்டத்தின் முழுப்பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சட்டச்சபையை கைப்பற்றியபின் ஒத்துழையாமையை மேற்கொள்வதற்குப் பதிலாக அமைச்சரவை அமைக்கும் நோக்கம் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு இருப்பதை அறிந்தமையால் மனவருத்தம் அடைந்து 9 ஜூலை 1926ல் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பை உதறினார்.

திருவிக தலைமை வகித்த காங்கிரஸ் அரசியல் மாநாடுகள்.

  • 1920 வட ஆர்காடு மாவட்ட மாநாடு. வேலூர்.
  • 1921 தென்னார்க்காடு மாவட்ட அரசியல் மாநாடு திருப்பாதிரிப்புலியூர்
  • 1922 திருநெல்வேலி மாவட்ட அரசியல் மாடாரு தென்காசி
  • 1923 அருப்புக்கோட்டை அரசியல் மாநாடு, அருப்புக்கோட்டை,
  • 1923 சாத்தூர் வட்ட அரசியல் மாநாடு சாத்தூர்,
  • 1923 சீவிலிபுத்தூர் வட்ட அரசியல் மாநாடு சாத்தூர்,
  • 1924 திருச்சி மாவட்ட அரசியல் மாநாடு .குழித்தலை
  • 1925 உடுமலைப்பேட்டை வட்ட மாநாடு அம்மாப்பட்டி புத்தூர்
  • 1925 தாராபுரம் வட்ட மாநாடு. தாராபுரம்
  • 1929 தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடு .காஞ்சிபுரம்
  • 1929 அறந்தாங்கி வட்ட மாநாடு. அறந்தாங்கி.

இதழியல்

தேசபக்தன்

திருவிக முயற்சியால் சென்னை மாகாண சங்கம் தேசபக்தன் என்னும் இதழையும், அதை வெளியிடும்பொருட்டு பிரிட்டிஷ் இந்தியா அச்சகத்தையும் நிறுவியது. திருவிகவின் தமையன் திரு.வி. உலகநாத முதலியார் அச்சகப்பொறுப்பை ஏற்றார். 7 டிசம்பர் 1917 ல் தேசபக்தன் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். வெ. சாமிநாத சர்மா சேஷாத்ரி சர்மா, வெங்கடாச்சாரியார், பழனிவேல், சம்பத் ஆகியோர் உதவி ஆசிரியர்கள். குலாம் ஹமீது, பரலி சு. நெல்லையப்பர், இராஜகோபால் நடேசன் ஆகியோர் பின்னர் துணையாசிரியர் ஆயினர். தி.செ.சௌ.ராஜன், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், ஈ.வெ.ராமசாமி பெரியார் போன்றவர்கள் அதன் இயக்குநர்களாக இருந்தார்கள். சுப்பராய காமத் என்பவர் நிர்வாகியாக இருந்தார். 28 பிப்ரவரி 1919 ல் தேசபக்தன் அரசின் பறிமுதல் ஆணைப்படி தடைசெய்யப்பட்டது . அபராதம் கட்டப்பட்டு மீண்டும் இதழ் வெளிவந்தது. சுப்பராய காமத் இதழை அடகுவைத்து பணம் வாங்கியது அறிந்ததும் 22 ஜூலை 1920ல் அவ்விதழில் இருந்து விலகினார்

நவசக்தி

தேசபக்தன் இதழ் நின்றபின் திருவிக சென்னை பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில் தொழிலாளர்கள் திரட்டித்தந்த நிதியாதரவால் சாது அச்சகம் என்னும் அமைப்பை தொடங்கி அதில் இருந்து நவசக்தி என்னும் வார இதழை வெளியிடலானார். 22 அக்டோபர் 1920ல் நவசக்தி முதல் இதழ் வெளிவந்தது. நவசக்தியில் கல்கி கிருஷ்ணமூர்த்தி துணையாசிரியராகப் பணியாற்றினார். ஈ.வெ.ராமசாமி பெரியார் அளித்த நிதியுதவியால் நவசக்தி வாரம் மும்முறை இதழாகச் சிலகாலம் வெளிவந்தது. ஜனவரி 1941 ல் நவசக்தி பொறுப்பில் இருந்து திரு.வி.க விலகிக்கொண்டார். அப்பொறுப்பு அதன் துணையாசிரியராக இருந்த சக்திதாச சுப்ரமணியத்திடம் அளிக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

அரசியல், சமுதாயம், சமயம் ஆகிய துறைகளில் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.

நூல் பட்டியல்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921 பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927 நாயன்மார் வரலாறு - 1937 முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938 உள்ளொளி - 1942 திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944 திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944 உரை நூல்கள் பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907 பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923 காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941 திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939 திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941

அரசியல்

தேசபக்தாமிர்தம் (1919) என் கடன் பணி செய்து கிடப்பதே (1921) தமிழ்நாட்டுச் செல்வம் (1924) தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு (1928) சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து (1930) தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 (1935) தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 (1935) இந்தியாவும் விடுதலையும் (1940) தமிழ்க்கலை (1953)

சமயம்

சைவசமய சாரம் - 1921 நாயன்மார் திறம் - 1922 தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923 சைவத்தின் சமசரசம் - 1925 முருகன் அல்லது அழகு - 1925 கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928 இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929 தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929 சைவத் திறவு - 1929 நினைப்பவர் மனம் - 1930 இமயமலை (அல்லது) தியானம் - 1931 சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933 சமரச தீபம் - 1934 சித்தமார்க்கம் - 1935 ஆலமும் அமுதமும் - 1944 பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949

பாடல்கள்

முருகன் அருள் வேட்டல் - 1932 திருமால் அருள் வேட்டல் - 1938 பொதுமை வேட்டல் - 1942 கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945 புதுமை வேட்டல் - 1945 சிவனருள் வேட்டல் - 1947 கிறிஸ்து மொழிக்குறள் - 1948 இருளில் ஒளி - 1950 இருமையும் ஒருமையும் - 1950 அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951 பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951 சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951 முதுமை உளறல் - 1951 வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953 இன்பவாழ்வு - 1925

பயண இலக்கியம்

இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்) பொதுவுடைமை தொடர்பான கட்டுரைகள் தொழிலாளர் லட்சியங்களைப் பற்றி ஓர் இந்திய ஒர்க் ஷாப்பிலிருந்து கர்னாடிக் மில் வேலைநிறுத்தம் தொழிலாளர் நிலையும் சென்னை சர்க்காரும் இந்திய தொழிலாளரின் சர்வதேச நோக்கு ஆம்ஸ்டர்டாம் சர்வதேச ஸ்தாபனமும், மாஸ்கோ சர்வதேச ஸ்தாபனமும் பெரம்பூர் பட்டாளத்தில் போலீஸ் அட்டூழியம் வேலைநிறுத்த உரிமை - கில்பர்ட் ஸ்லேடருக்குப் பதில் மில் வட்டாரத்துக் கலகங்கள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.