under review

சி.வை. தாமோதரம் பிள்ளை

From Tamil Wiki
சி.வை. தாமோதரம் பிள்ளை

To read the article in English: C.W. Thamotharampillai. ‎


சி.வை. தாமோதரம் பிள்ளை (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901) பழந்தமிழ் நூல்களை சுவடிகளில் இருந்து பிழைநோக்கி அச்சில் பதிப்பித்த தமிழறிஞர்களில் ஒருவர். தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். எழுத்தாளர், உரைநடையாளர், கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர், தமிழார்வலர் என தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தவர். வழக்கறிஞராகவும் பின்னர் நீதிபதியாகவும் வாழ்க்கை நடத்திய இவர் தன் இறுதி காலங்கள் முழுவதும் பதிப்பகப் பணியிலும் எழுத்துப் பணியிலும் ஈடுபட்டார்.

பிறப்பு, கல்வி

சி.வை.தாமோதரம்பிள்ளை

சி.வை. தாமோதரம் பிள்ளை, யாழ்ப்பாணம் புத்தூர் அருகே சிறுப்பிட்டி என்ற கிராமத்தில் செப்டம்பர் 12,1832-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை. இவர் தந்தையின் முழுப்பெயர் சிறுபிட்டி கிங்ஸ்பரி வைரவநாதன். தாயின் பெயர் மேரி டேட்டன் பெருந்தேவி. சிறுபிட்டி குருநாத பிள்ளையின் மகன் கிங்ஸ்பரி வைரவநாதன். மேரி டேட்டன் பெருந்தேவி ஏழாலை ஊரைர் சேர்ந்தவர்.

சி.வை.தாமோதரம் பிள்ளையின் தந்தை வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பில் பயின்று பண்டத்தரிப்பு அமெரிக்க மிஷன் பாடசாலையில் தலைமையாசிரியராகவும் கிறிஸ்தவப் பிரசங்கியாகவும் பணியாற்றினார். சி.வை.தாமோதரம் பிள்ளையின் கிறிஸ்தவப் பெயர் வின்ஸ்லோ கிங்ஸ்பரி. பின்னாளில் அவர் சைவத்திற்கு மாறினார் (யாழ்ப்பாணத்தில் கல்வி, வேலை ஆகியவற்றின்பொருட்டு பெயரளவே கிறிஸ்தவர்களாக இருக்கும் வழக்கம் அன்று இருந்தது). சிறுபிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை - சி.வை.தாமோதரம் பிள்ளை என்று பெயர் சூட்டிக்கொண்டார். அவர் பிறந்தது ஏழாலை என்ற குக்கிராமமாக இருந்தாலும் சிறுப்பிட்டி கிராமத்தையே தன் சொந்த ஊராகத் தாமோதரம் பிள்ளை கூறுகிறார். .

சி.வை. தாமோதரம் பிள்ளை ஆரம்பக்காலத்தில் நிலாப்பள்ளியில் தந்தையிடம் படித்தார். சுன்னாகம் முத்துக்குமார நாவலரிடம் இலக்கணம் படித்தார். பின்னர் அமெரிக்க மிஷனரிகள் தொடங்கிய வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பில் சில ஆண்டுகள் பயின்றார். தெல்லியம்பதி அமெரிக்க மிஷன் கல்லூரியிலும் படித்தார் (1844-52). தமிழ்ப்புலவர் படிப்பில் சான்றிதழ் பெற்றார். ஆங்கில மொழி அறிவும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் பெற்றார். வட்டுக்கோட்டை குருமடத்துக்கு உரிமையான கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது மாணவர்களுக்காக குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கம் என்னும் நூலை உரை எழுதி வெளியிட்டார் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

1855-ல் வட்டுக்கோட்டை குருமடம் மூடப்பட்டது. 1855-ல் சென்னையில் பீட்டர் பெர்சிவல் நடத்தி வந்த தினவர்த்தமானி வாரப்பத்திரிகையில் சி.வை.தாமோதரம்பிள்ளை உதவியாசிரியராகச் சேர்ந்தார். பத்திரிகைப் பணியுடன் பர்னல் பண்டிதர், வால்டர் எலியட், லூஷிங்டன் ஆகியோருக்கு தமிழ் கற்பிக்கும் பணியையும் செய்தார். கள்ளிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் சிலகாலம் பணியாற்றிவிட்டு சென்னைக்கு திரும்பி வந்தார். சென்னை ராஜதானி கல்லூரியில் தமிழ்ப்பண்டிதராக பணியமர்ந்தார். 1857-ல் சென்னைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது சி.வை. தாமோதரம் பிள்ளை மாணவராகச் சேர்ந்தார். 1858-ல் அப்பல்கலைகழகத்தின் முதல் இரு பட்டதாரிகளில் ஒருவராக பி.ஏ. படிப்பை முடித்தார். அப்போது சி.வை. தாமோதரம் பிள்ளைக்கு வயது 25. இவருடன் பட்டம் பெற்றவர் கரோல் விசுவநாதபிள்ளை.

சி.வை.தாமோதரம்பிள்ளையிடம் தமிழ் படித்தவரான ஆங்கில அதிகாரி லூஷிங்டன் சென்னையில் உள்ள வரவுசெலவு கணக்குநிலையத்தில் கணக்காயர் பதவியை சி.வை.தாமோதரம்பிள்ளைக்கு வாங்கித்தந்தார். அதில் விசாரணைகர்த்தர் (சூபரிண்டெண்ட்) பதவியை அடைந்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1871-ல் சட்டப்படிப்பில் பி.எல் பட்டம் பெற்றார்.புதுக்கோட்டை சமஸ்தான நீதிபதியாக இருந்தபோது ஓய்வு பெற்றார் (1882). தன் இறுதி காலங்களில் கும்பகோணத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.

தனிவாழ்க்கை

சி.வை.தாமோதரம் பிள்ளை சிலை, சிறுபிட்டி

சி.வை.தாமோதரம்பிள்ளையின் இளமைக் காலத்தில் கல்விக்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறியாகவேண்டும் என்னும் நிலைமை இலங்கையில் இருந்தது. பின்னர் அந்நிலை மாறலாயிற்று. நல்லூர் ஆறுமுக நாவலரின் பணியால் சைவசமயம் மறுமலர்ச்சி அடைந்தது. சி.வை.தாமோதரம் பிள்ளை சென்னைக்கு வந்து கல்வியும் பதவியும் அடைந்தபோது சைவமதப்பற்று கொண்டவரானார். 1867-ல் சி.வை.தாமோதரம்பிள்ளை சைவ மகத்துவம் என்னும் நூலை எழுதினார். பெயரில்லாமல் ‘விவிலிய விரோதம்’ என்னும் நூலையும் எழுதினார்.

இவர் முதலில் யாழ்ப்பாணம் வள்ளியம்மை என்ற பெண்ணை மணந்தார். மனைவி இறந்தபின் மீண்டும் மறுமணம் புரிந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபின் மனைவி இறந்தார். பின் 1890-ல் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது பெண்ணை மணந்தார். மீண்டும் இரண்டு பிள்ளைகள். மூன்றாவது மனைவியுடன் சென்னையில் வாசம் செய்தார். இவரின் மூன்று மனைவிகளுக்குமாகப் பத்துப் பிள்ளைகள். இவர்களில் எட்டுப் பேர் சி.வை. தாமோதரம் பிள்ளை உயிரோடு இருந்தபோதே இறந்துவிட்டனர். எஞ்சிய இரண்டு பேரில் சி.தா. அமிர்தலிங்கம் பிள்ளை என்ற மகன் ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். அழகுசுந்தரம் என்ற மகன் கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறி கிங்ஸ்பெரி என பெயரையும் மாற்றிக்கொண்டார். தாமோதரம் பிள்ளை அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். தன் இறுதிக்காலத்தில் அழகுசுந்தரம் ‘நான் ஏன் கிறிஸ்தவன் ஆனேன்’ என்ற நூலை எழுதினார்.

இலக்கியப் பணி

தன் வாழ்நாளில் பத்து பழந்தமிழ் நூல்களை பதிப்பித்திருக்கிறார். சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்த நூல்களின் முகவுரைகஆய்வுமுக்கியத்துவம் உடையவை.. அவை ப.சரவணனால் தாமோதரம் என்னும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன.அரசு தனக்குக் கொடுத்த ஓய்வூதியம் முழுவதையும் ஆய்வுப்பணிக்கே செலவழித்தார்.நூல்களைப் பதிப்பிக்க வசதியான இடமாகவும் வக்கீல் தொழில் செய்ய ஏதுவாகவும் இருந்ததால் ஓய்வுபெற்ற பின்பு சி.வை. தாமோதரம் பிள்ளை கும்பகோணத்தில் தங்கினார்.

பதிப்பாளராகவும், உரை நடையாளராகவும் இருந்தார். உதயதாரகை பத்திரிகையில் இவர் ஆசிரியராக இருந்தபோது சைவசமயம் குறித்த பல உரைநடைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் என நான்கு மொழிகளை அறிந்தவர். அரசுப் பேரகராதித் தொகுப்புக் குழு உறுப்பினர், கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறை உறுப்பினர் என்ப பல பதவிகளில் இருந்தவர். சென்னை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் இருந்தபோது தமிழ் மாணவர்களை சந்திப்பதும் ஊக்கப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பிற பணிகள்

சி.வை. தாமோதரம் பிள்ளை யாழ்ப்பாண ஏழாலை சைவப்பிரகாச சபையை நிறுவியவர்.

தாமோதரம் காலச்சுவடு பதிப்பு

பதிப்பியக்கப் பணிகள்

பிள்ளை யாழ்ப்பாணம் மிஷன் வித்தியாசாலையில் உபாத்தியராக இருந்தபோது மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடத்தில் ‘நீதிநெறி விளக்க’த்தைப் பதிப்பித்தார் (1854). இதே ஆண்டில் தொல்காப்பியம் சேனாவரையர் உரையை வெளியிட்டார். உ.வே.சாமிநாதையர் போன்றோர் பதிப்புக்கு இது முன்னோடி. ‘வீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் உரையும்’ நூலை வெளியிட்டார் (1881) பின்னர் 1883 -ல் திருத்தணிகை புராணத்தையும் இறையனார் அகப்பொருள் மூலம், நக்கீரர் உரை ஆகியவற்றை வெளியிட்டார். இறையனார் உரை வெளியான பிறகு தமிழ்மொழியை அகத்தியருடன் இணைத்துப் பேசும் வழக்கம் உருவகியது. இதை சி.வை. தாமோதரம் பிள்ளை கண்டித்திருக்கிறார்.

1885-ல் தொல்காப்பியம் பொருளதிகாரத்தை வெளியிட்ட போது இவர் பெரும் அளவில் கைப்பணத்தை இழந்திருக்கிறார். இந்த நூலைப் பதிப்பிக்க இவர் முன்உதவித் திட்ட அறிவிப்பை வெளியிட வேண்டி வந்த்ச்து. இதற்கு மிகவும் உதவியவர் சுப்பிரமணிய தேசிகர். இந்த நூல்களை வெளியிட்ட ஆழ்ந்த அனுபவத்தின் பின்புதான் சி.வை. தாமோதரம் பிள்ளை கலித்தொகையைப் பதிப்பித்தார் (1885). இவர் இந்நூலைப் பதிப்பிக்க ஆறுக்கும் மேற்பட்ட பிரதிகளைப் பரிசோதித்திருக்கிறார். இவற்றில் திருவாவடுதுறை பிரதியே நல்லபிரதி என்பதைக் கடைசியில் கண்டுபிடித்தார். கலித்தொகை பதிப்பித்தபோது அரசுமுறை மன்ற நடுவராய் இருந்தார். அதனால் புதுக்கோட்டை முகவரியில் இந்நூல் வெளிவந்தது.

1889-ல் ‘இலக்கண விளக்கம்’ வந்தது. இதே ஆண்டில் சூளாமணியைப் பதிப்பிக்கத் திருவாவடுதுறைப் பிரதியைப் பயன்படுத்தினார். இந்தச் சமயத்திலும் கைப்பணத்தை இழந்திருக்கிறார். இவர் இந்து பத்திரிகையில் ஒருமுறை "என் கைப்பணம் இதுவரை ரூபாய் 3500/- க்கு மேல் செலவழிந்துவிட்டது" என்று வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். 1890,91-ஆம் ஆண்டுகளில் ‘தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை’யை முழுவதுமாக வெளியிட்டார். இந்தச் சமயத்தில் அவர் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார். அங்குச் சில நாட்கள் இருந்துவிட்டுச் சென்னை வந்தார். இறுதியாக அவர் வெளியிட்டது அகநானூறு பதிப்பு.அகநாநூற்றில் 300 பாடல்களை மட்டுமே அவர் பரிசோதிக்க முடிந்தது. அதற்குள் அவர் இறக்கநேரிட்டது.

சூளாமணி வசனநூல், ஏசுவரலாறு, இராமன் கதை, சைவ சமயம் தொடர்பான சில உரைநடைகள் போன்றவற்றையும் 6, 7 -ஆம் வகுப்பு பாடநூல்கள் சிலவற்றையும் சி.வை. தாமோதரம் பிள்ளை வெளியிட்டுள்ளார். சி.வை. தாமோதரம் பிள்ளையும் உ.வே.சாமிநாதையரைப் போல் ஏடு தேடி அலைந்திருக்கிறார். தமிழ் ஏட்டுப் பிரதிகளைத் தேடி அலைந்த அனுபவத்தை அவர் விரிவாக எழுதவில்லை என்றாலும் பதிப்புகளின் முகவுரையில் கோடிட்டுக் காட்டுகிறார். ஏடுகளில் உள்ள தவறு, அதைத் தாளில் பெயர்த்தெழுதும்போது ஏற்பட்ட சிரமம் பற்றி குறிப்பிடுகிறார். பலரிடம் ஏடு தேடி அலைந்த ஏமாற்றத்தையும் எழுதியிருக்கிறார்.

சி.வை. தாமோதரம் பிள்ளை தான் சேகரித்த ஏட்டுப் பிரதிகளை முதலில் பிரதி செய்துவிட்டுத் தகுதியான அறிஞர்களின் உதவியுடன் பாடபேதங்களைக் குறித்துக்கொண்டு திருத்திய பிரதியையே அச்சுக்கு கொடுப்பார். சி.வை.தாமோதரம் பிள்ளை அவருடைய சமகாலத்தவரால் பதிப்பியக்கத்தில் முதன்மையிடம் கொண்டவராக கருதப்பட்டார். உ.வே.சாமிநாதைய்யர் “தாமோதரம் பிள்ளை கும்பகோணத்தில் வந்து வசிக்கப்போகிறார் என்பது தெரிந்து எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. சேலம் ராமசாமி முதலியார் கூறியபடி பழைய தமிழ் நூல்களை ஆராய்வாரும் படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ் நாட்டில் எனக்குத் துணைசெய்வார் ஒருவரும் இல்லை. நானோ அந்த ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன். ஆனாலும் எப்படியாவது விஷயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மாத்திரம் எஞ்சியது. இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறார் என்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று” என்று குறிப்பிடுகிறார்.

பதிப்பு முக்கியத்துவம்

தாமோதரம் பிள்ளையின் பதிப்பு முன்னோடிகளாகப் புதுவை நயனப்ப முதலியார், திருவேங்கடாசல முதலியார், களத்தூர் வேதகிரி முதலியார் (1795-1852), ஆறுமுக நாவலர் (1822-1879), வில்லிவாக்கம் தாண்டவராய முதலியார் எனச் சிலரைச் சொல்லலாம். இவர்கள் எல்லோரும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுக்குப் பிற்பட்ட இலக்கியங்களில் கவனம் செலுத்தியவர்கள். சி.வை. தாமோதரம் பிள்ளை இவர்களிடமிருந்து வேறுபட்டு, சங்க இலக்கியங்களைப் பதிப்பிப்பதில் கவனம் செலுத்தினார்.

மறைவு

சி.வை.தாமோதரம்பிள்ளை தன் இறுதிக்காலத்தில் உயிலில் தன் மகனான கிங்ஸ்பெரிக்குச் சொத்து கிடையாது என்று எழுதிவைத்தார். தன் சொந்த நூல்நிலையத்துப் புத்தகங்களையும் ஏடுகளையும் விலைக்குக் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தைத் தன் மகளின் படிப்புக்குக் கொடுக்கும்படி எழுதியிருந்தார். தன் 69-ஆம் வயதில் (1901) காலமானார். இவரின் மரணப் படுக்கையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோது அதை ஏற்க உறுதியாக மறுத்தார்; அதனால்தான் இறந்தார் என்ற கருத்தும் உண்டு. இவரது உடல் சென்னை புரசைவாக்கம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

தாமோதரம்

இலக்கியமதிப்பு

தமிழ் பதிப்பியக்கம் பொதுவாக சைவம் வைணவம் சார்ந்த நூல்களையும், சிற்றிலக்கிய நூல்களையுமே அதிகமும் அச்சேற்றியது. சி.வை.தாமோதரம்பிள்ளை தொல்காப்பியத்தை முறையாக பிழைநோக்கி உரைக்குறிப்புகளுடன் அச்சேற்றினார். தமிழ்ச்செவ்வியல் இலக்கியத்துக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கிய பணியாக அது அமைந்தது. “அவர் பதிப்பித்த பன்னிரு நூல்களில் ஒன்பது நூல்கள் பண்டையத் தமிழிலக்கியங்களோடு தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது” என்று ஆய்வாளர் ப.சரவணன் குறிப்பிடுகிறார்.

ஆய்வாளர் எஸ். வையாபுரிப் பிள்ளை சி.வை. தாமோதரம் பிள்ளையை ஆறுமுக நாவலர், மழவை மகாலிங்கையர் ஆகியோருடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார். " இவர் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில், ஒருசிலர் தம்மைத் தவிர தமிழ் நூல்களைப் பதிப்பிடும் பணியைச் செய்தவர்களை எல்லாம் பழித்து வந்தார்கள். ஆனால் சி.வை தாமோதரம் பிள்ளை இவர்களில் முழுக்க வேறுபட்டவராய் இருந்தார்" என வையாபுரிப்பிள்ளை கூறுகிறார். இது இவர் தனிப்புகழுக்காக அன்றி ஒட்டுமொத்தமாக தமிழியக்கம் ஒன்று உருவாகவேண்டும் என்னும் கனவு கொண்டிருந்தார் என்பதற்கான சான்று

நூல்கள்

  • நீதி நெறி விளக்கம் – 1854
  • தொல்காப்பியம் சேனாவரையர் – 1854
  • வீரசோழியம் மூலம் – 1881
  • பெருந்தேவனார் உரை – 1881
  • திருத்தணிகை புராணம் – 1883
  • இறையனார் அகப்பொருள் மூலம் – 1883
  • நக்கீரர் உரை – 1883
  • தொல்காப்பியம் பொருளதிகாரம் – 1885
  • கலித்தொகை – 1885
  • இலக்கண விளக்கம் – 1889
  • சூளாமணி – 1889
  • தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை – 1890,91
  • அகநானூறு – 1891

படைப்புகள்

  • கட்டளைக் கலித்துறை
  • சைவ மகத்துவம்
  • வசன சூளாமணி
  • நட்சத்திர மாலை
  • ஆறாம் வாசகப் புத்தகம்
  • ஏழாம் வாசகப் புத்தகம்
  • ஆதியாகம கீர்த்தனம்
  • விவிலிய விரோதம்
  • காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)

வாழ்க்கை வரலாறு, ஆய்வுகள்

விருதுகள்

  • உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின் பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1895-ல் ராவ்பகதூர் என்ற விருது வழங்கியது.
  • நினைவகம்: அவர் படித்த கோப்பாய் கிறித்தவக் கல்லூரியில் சி.வை. தாமோதரம் பிள்ளையின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page