under review

குறத்தி முடுக்கு

From Tamil Wiki
Revision as of 11:44, 16 September 2022 by Madhusaml (talk | contribs) (Stage updated)
குறத்திமுடுக்கு

குறத்தி முடுக்கு (1963) ஜி.நாகராஜன் எழுதிய குறுநாவல். ஜி.நாகராஜன் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை வெவ்வேறு கதைகளில் எழுதியிருந்தாலும் இந்த நாவலில்தான் முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார். இந்நாவலில் அவருடைய தனிவாழ்க்கையின் சாயல் உண்டு எனப்படுகிறது.

எழுத்து வெளியீடு

ஜி. நாகராஜன் குறத்திமுடுக்கு நாவலை 1960ல் மதுரையில் இருக்கையில் எழுதி 1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் வெளியிட்டார். பின்னர் இந்நாவல் அவருடைய மொத்தப் படைப்புகளின் தொகுப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பின்னணி

ஜி.நாகராஜன் நெல்லையில் கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றும்போது அவருக்கு பாலியல்தொழில் உலகுடன் அறிமுகம் ஏற்பட்டதாகவும், பின்னர் கட்சியில் இருந்து விலகி சுதந்திர இதழாளராக சிலகாலம் பணியாற்றியபோது ஒரு பாலியல்தொழிலாளிப் பெண்ணை மணக்க முயன்றதாகவும் நாளை மற்றுமொரு நாளே நாவலின் பின்னிணைப்பாக வந்த வாழ்க்கைச்சுருக்கத்தில் உள்ளது (சுந்தர ராமசாமி இதை எழுதினார் எனப்படுகிறது). அந்த நிகழ்வின் பின்னணி இந்த நாவலில் உள்ளது. குறத்தி முடுக்கு என இங்கே சொல்லப்படுவது திருநெல்வேலியின் நயினார்குளம் அருகே உள்ள ஒரு தெரு எனப்படுகிறது.

“அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ளமுடியும். எது எப்படி இருப்பினும் ‘தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை” என்று இந்நாவலின் முன்னுரையில் ஜி.நாகராஜன் சொல்கிறார்.

கதைச்சுருக்கம்

கதைசொல்லி தங்கம் என்னும் பாலியல்தொழிலாளிப் பெண்ணுடன் கொண்ட உறவுதான் இந்நாவல். அவளை மணக்க அவன் முயல்கையில் அவள் மறைந்துவிடுகிறாள். நெடுநாட்களுக்குப்பின் திருவனந்தபுரத்தில் அவளை அவள் முன்னாள் கணவனுடன் சந்திக்கிறான்.

இலக்கிய இடம்

தமிழில் கழிவிரக்கம், மனிதாபிமானக்கொள்கைகள் என எந்த பூச்சும் இல்லாமல் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொன்ன படைப்பு என இந்நாவல் கருதப்படுகிறது. அவர்கள் அத்தொழிலில் இருந்து விலகி இன்னொரு வாழ்க்கையை வாழ்வதற்காக கொண்டிருக்கும் ஏக்கமும் வெளிப்படுகிறது

குறத்திமுடுக்கு என்ற தெருவின் கதை அழியாத காதலின் நிரந்த வசீகரத்தை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. அவ்வகையில் ஜி. நாகராஜனே நம் காலத்தின் சிறப்பான காதல்நாவலை எழுதிய அற்புத எழுத்தாளன் என்று எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை

குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்


✅Finalised Page