under review

எம்.எஸ்.கல்யாணசுந்தரம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
Line 65: Line 65:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://azhiyasudargal.blogspot.com/2023/02/blog-post_02.html தபால்கார அப்துல்காதர் சிறுகதை - எம்.எஸ். கல்யாணசுந்தரம்: அழியாச்சுடர்கள்]
* [https://azhiyasudargal.blogspot.com/2023/02/blog-post_02.html தபால்கார அப்துல்காதர் சிறுகதை - எம்.எஸ். கல்யாணசுந்தரம்: அழியாச்சுடர்கள்]





Revision as of 14:21, 3 July 2023

To read the article in English: M.S. Kalyanasundaram. ‎

எம்.எஸ். கல்யாணசுந்தரம் (நன்றி: அழிசி ஸ்ரீநி)

எம்.எஸ். கல்யாணசுந்தரம் (மார்ச் 28, 1901 -1989) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போரில் கைதிகளாகச் சிக்கிக்கொண்டு பசிபிக் தீவு ஒன்றில் சிக்கி மீண்டு வருபவரை கதைநாயகனாகக் கொண்ட இருபது வருஷங்கள் அவருடைய முதன்மையான படைப்பு. மிகையில்லாத யதார்த்தவாதத்தை எழுதியவர்.

பிறப்பு கல்வி

எம்.எஸ். கல்யாணசுந்தரம் மார்ச் 28, 1901-ல் மதுரையில் ஒரு சௌராஷ்ட்ர குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சீதாராமையா. இவர் ஒரு காந்தியவாதி. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் தமையன் மதுரை அருகே ஆண்டிப்பட்டியில் வேகவதி என்னும் காந்திய ஆசிரமத்தை நடத்திவந்தார். சீதாராமையா அந்த ஆசிரமத்தில் தங்கி கரட்டூர் ராமு என்னும் நாவலை 1934ல் எழுதினார்

எம்.எஸ். கல்யாணசுந்தரம் பஞ்சாப் பல்கலையில் பி.ஏ பட்டமும், இந்தியில் பிரவீண் பட்டமும் பெற்றார். மாண்டிஸோரி முறை பயிற்றியலை மாண்டிஸோரி அம்மையாரிடம் இருந்து கற்றார். ஆங்கிலம் தமிழ், இந்தி, உருது தெலுங்கு வங்காளி குஜராத்தி சம்ஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் மொழிகள் அறிந்தவர்.

தனிவாழ்க்கை

எம்.எஸ். கல்யாணசுந்தரம் மணம் செய்துகொள்ளவில்லை. பின்தங்கிய பகுதிகளில் மக்கள்பணியாற்றியமையால் தொழுநோய்க்கு ஆளானார் என்று சொல்லப்படுகிறது. இறுதிநாட்களை கொடைக்கானலில் ஒரு மருத்துவ விடுதியில் கழித்தார்.

அரசியல்

தபால்தந்தி துறையில் ஊழியராக இருந்தபோது 1942ல் காந்தியின் அழைப்பை ஏற்று வேலையை துறந்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். ஆங்கிலம், தமிழ், இந்தியில் அரசியல் கட்டுரைகளை எழுதினார். தமிழ்-இந்தி, தமிழ்-ஆங்கிலம் அகராதிகள் தயாரித்தார்.

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் (நன்றி: அழிசி ஸ்ரீநி)

இலக்கியவாழ்க்கை

எம்.எஸ். கல்யாணசுந்தரம் வாழ்ந்தபோது 'இருபது வருஷங்கள்' என்னும் நாவலும் 'பொன்மணல்' என்னும் சிறுகதை தொகுதியும் மட்டுமே வெளிவந்தன.'பகல்கனவு' என்னும் நாவல் நெடுங்காலம் கையெழுத்துப் பிரதியாக கி.ஆ. சச்சிதானந்தத்திடம் இருந்தது. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் மறைந்த பின்னர் வெளிவந்தது.

எம்.எஸ். கல்யாணசுந்தரத்தை சிறுபத்திரிகை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் சி.சு. செல்லப்பா. 1934ல் 'ஆனந்த விகடன்' பத்திரிகை நடத்திய போட்டியில் ரூ.25 பரிசுபெற்ற 'தபால்கார அப்துல்காதர்' கதையை 'எழுத்து' இதழில் மறுபிரசுரம் (எழுத்து 23, நவம்பர் 1960) செய்தார். 'இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டுப் பெற்று சிறுகதைத்துறை வளர்ச்சிப் பாதையில் புதுவழி காட்டிய கதைகள் சில இன்றும் புஸ்தக உருவம் பெறாமல் கிடக்கின்றன' எனவும் 'அவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவருகிறபோது சிறுகதைக்கு அவர் பங்கை மதிப்பிடமுடியும்' என்ற முன்குறிப்புடன் அந்தக் கதை பிரசுரமானது. 1961 ஏப்ரலில் 'பொன்மணல்' தொகுப்பு வெளியானதும் அத்தொகுப்பைப் பற்றி 'மனிதாபிமானப் படைப்பாளி' என்ற விமர்சனக் கட்டுரையை எழுத்து இதழில் எழுதினார்.

எழுத்து 28, ஏப்ரல் 1961ல் வெளியான விளம்பரம்

கவிதைகள், இதழ்களுக்கு எழுதும் வாசகர் கடிதங்கள் போன்றவற்றை ’முன்ஷி’ என்ற பெயரில் எழுதினார். சில கதைகள் வெளியான இதழ்களில் ம.சீ.கல்யாணசுந்தரம் என முன்னெழுத்துகள் தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. சில இதழ்களில் முன்னெழுத்துகள் இல்லாமல் பெயர் மட்டும் உள்ளது. தி மெயில், தி ஹிந்து, ஸன்டே ஸ்டாண்டர்டு முதலிய ஆங்கில நாளேடுகளில் நடைச்சித்திரங்கள் எழுதினார். அவற்றில் சிலவற்றை இவரே தமிழில் மொழிபெயர்த்து 'மஞ்சரி' இதழில் வெளியிட்டார். இருபது வருஷங்கள் நாவலின் சுருக்கப்பட்ட வடிவிலும் 'மஞ்சரி' இதழில் படங்களுடன் வெளியானது.

நூல்வெளியீடு

எம்.எஸ். கல்யாணசுந்தரம் தன் நூல்களை பிரசுரிக்க ஆர்வம் காட்டவில்லை. அவருடைய நூல்கள் இறுதிக்காலத்தில் அவரிடம் பழகிய கி.ஆ.சச்சிதானந்தம் அவர்களிடம் தங்கிவிட்டன. ’இருபது வருஷங்கள் தவிர அவருடைய நூல்கள் கவனிக்கப்படவுமில்லை. அவர் மறைந்து இருபதாண்டுகளுக்குப்பின் அவருடைய கைப்பிரதியில் இருந்து 2001-ல் தான் அவருடைய இரண்டாவது நாவலான பகல்கனவு வெளியிடப்பட்டது.

பெர்க்லி - கல்கி பரிசு

இலக்கிய இடம்

எம்.எஸ். கல்யாணசுந்தரம் தமிழில் அன்று எழுதப்பட்ட பொதுவான கதைக்களங்களான கிராமவாழ்க்கை, குடும்பச்சூழல், ஆண்பெண் உறவு ஆகியவற்றில் இருந்து வெளியே சென்று உலகப்போர்ச் சூழல் போன்ற முற்றிலும் புதிய களங்களில் கதைகளை எழுதினார். மிகையில்லாத யதார்த்தவாத எழுத்து அவருடையது. விலங்குகள், புறவயச்சூழல் ஆகியவற்றை நுட்பமாகக் கவனித்து எழுதும் பாணி கொண்டிருந்தார். நெடுங்காலம் அச்சில் இல்லாதிருந்த அவருடைய ஆக்கங்கள் அவருடைய நூற்றாண்டை ஒட்டி தமிழினி பதிப்பகத்தால் அச்சில் கொண்டுவரப்பட்டன. அவை வாசகர்களால் காலத்தால் பழைமையாகாத ஆக்கங்கள் என கருதப்பட்டன.

"மனிதாபிமானம்தான் அவரது ‘பொன் மணல்’ கதைத் தொகுதி நெடுக பொதுத்தன்மையாக அமைந்திருக்கும் இலக்கியப் பார்வை. இந்த பத்தொன்பது கதைகளில் ஒரு வில்லன் மருந்துக்கும் கிடையாது. தமிழ்ச் சிறுகதையின் பிதா என்று சொல்லத்தக்க வ.வெ.சு. அய்யர் முதல் என் வரையில், கெட்டதை மனதில் நினைக்காமல் இல்லை. அதை விஷயமாக வைத்து கதை எழுதாமல் இல்லை. ஆனால் கல்யாணசுந்தரம் அப்படி ஒரு கதையைக்கூட இந்தத் தொகுப்பில் எழுதவில்லை." என சி.சு. செல்லப்பா மதிப்பிடுகிறார்.

"தன் நோக்கத்தாலேயே தன் செயல்பரப்பைக் குறைத்துக்கொள்ள நேர்ந்த படைப்பாளி என்று எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தைச் சொல்லலாம். அந்தத்தளம் குறுகியது என்பதனால் அவர் முதன்மையான படைப்பாளி ஆகவில்லை. அது சாத்தியமே இல்லை. ஆனால் கலாச்சார இயக்கத்தில் அவர் தொடும் இடங்கள் இன்றியமையாதவை. ஆகவே அவர் படைப்புகள் என்றுமே தமிழுக்கு குறையாத முக்கியத்துவம் உடையவை’ என்று விமர்சகர் ஜெயமோகன் சொல்கிறார். ஜெயமோகன் எழுதிய இலக்கிய முன்னோடிகள் வரிசையில் தமிழிலக்கிய முன்னோடிகளில் ஒருவராக எம்.எஸ்.கல்யாணசுந்தரம் குறிப்பிடப்படுகிறார்.

தி.ஜ.ரங்கநாதன் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்திற்கு அளித்த முன்னுரையில் 'கல்யாண சுந்தரத்தின் சிறுகதைகள் எல்லாம் நவரத்தினங்கள் - உருவிலும் சரி, தன்மை யிலும் சரி, வகையிலும் சரி. அப்படிப் பட்டவை’ என்கிறார்.*

விருதுகள்

  • 1934-ல் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகளில் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் 'தபால்கார அப்துல்காதர்' சிறுகதையும் ஒன்று.
  • 1969-ல் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் 'நான் குற்றவாளியே' சிறுகதை பெர்க்லி-கல்கி இலக்கியப் பரிசுத் திட்டத்தில் 'சமூகக் கதைகள்' பிரிவில் மூன்றாம் பரிசு(ரூ.250) பெற்றது.

மறைவு

எம்.எஸ். கல்யாணசுந்தரம் 1989ல் காலமானார்.

இருபது வருஷங்கள்

நூல் பட்டியல்

நாவல்
சிறுகதைத் தொகுப்பு
  • பொன்மணல் (தமிழ் புத்தகாலயம், 1961)
மொழிபெயர்ப்புகள்
பிற
  • செய்தித்தாள் (சிறார் நூல், தமிழ் புத்தகாலயம், 1961)
  • தென்னாட்டு மலையூர்கள் (பயணக்கட்டுரைகள், தமிழ் புத்தகாலயம், 1961)
  • Indian Hill Stations (1961)
  • வளர்க அறிவு (முதியோருக்கு, அல்லயன்ஸ் பதிப்பகம், 1984)
அகராதி
  • ஹிந்தி-தமிழ் அகராதி
  • ஆங்கிலம்-ஹிந்தி அகராதி

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page