second review completed

எடப்பாடி ஆ. அழகேசன்

From Tamil Wiki
Revision as of 05:56, 1 April 2024 by Tamizhkalai (talk | contribs)
எழுத்தாளர் எடப்பாடி ஆ. அழகேசன்

எடப்பாடி ஆ. அழகேசன் (ஆறுமுகம் அழகேசன்; எடப்பாடி அழகேசன்) (பிறப்பு: 1958) கவிஞர், எழுத்தாளர். துணை ஆட்சியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய பல நாவல்களை, சிறுகதைகளை எழுதினார். ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது’ உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

எடப்பாடி ஆ. அழகேசன்

பிறப்பு, கல்வி

ஆ. அழகேசன், சேலம் அருகே உள்ள எடப்பாடியில் 1958-ம் ஆண்டில் பிறந்தார். தந்தை ஆறுமுகம். அழகேசன், எடப்பாடியில் பள்ளிக் கல்வி கற்றார். பி.ஏ. கார்பரேட் செகரட்டரிஷிப் பட்டம் பெற்றார். பொது ஆட்சியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

எடப்பாடி ஆ. அழகேசன் தமிழக அரசில் துணை ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: அ. ராணி. மகன்கள்: அ.ரா. அருண்; அ.ரா. தியாகு. மகள்: அ.ரா. மணிமொழி.

எடப்பாடி ஆ. அழகேசன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

எடப்பாடி ஆ. அழகேசன் இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின. முதல் சிறுகதைத் தொகுப்பு: மெல்லப் புரியும் உண்மை. முதல் நாவல்: சிறகுகள் முளைத்ததடி. முதல் கவிதைத் தொகுப்பு: 'வாழ்ந்து காட்டுவோம் வா'. அழகேசனின் ‘மானுடம் வளர்ப்போம்; சாதியம் ஒழிப்போம்’ சிறுகதைத் தொகுப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்று.

எடப்பாடி ஆ. அழகேசனின் படைப்புகளை தினமலர், அமுதசுரபி, 'மக்கள் குரல்' போன்ற இதழ்கள் வெளியிட்டு ஊக்குவித்தன. ராணி முத்து, தேவியின் 'கண்மணி' உள்ளிட்ட இதழ்களில் பல படைப்புகள் வெளியாகின. எடப்பாடி ஆ. அழகேசனின் பல கவிதைகள், அகில இந்திய வானொலி திருச்சி நிலையத்தில் ஒலிபரப்பாகின.

பொறுப்புகள்

  • எடப்பாடி தமிழ்ச்சங்க நிறுவனர்.
  • எடப்பாடி முத்தமிழ் சுற்றுச்சூழல் குழந்தைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர்
  • எடப்பாடி நேரு இளைஞர் மன்ற நிறுவனர்
  • எடப்பாடி அரிமா சங்கத்தின் முதல் நிலை உதவித் தலைவர்.

விருதுகள்

  • சென்னை பகுத்தறிவாளர் இணையத்தின் சிறந்த நூல் தேர்வு – மானுடம் வளர்ப்போம் சாதியம் ஒழிப்போம் – சிறுகதைத் தொகுப்பு – 2006.
  • சேலம் கே.ஆர்.ஜி. நாகப்பன் அறக்கட்டளை நிறுவனம், எழுத்துக் களம் இலக்கிய அமைப்பு இணைந்து அளித்த சிறந்த நாவலுக்கான விருது - கல்லூரிப் பறவைகள் – நாவல்.
  • தஞ்சை உலகத் திருக்குறள் மாநாட்டில் அளிக்கப்பட்ட ’திருக்குறள் சுடர்’ விருது - திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள் - நூல்.
  • சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறந்த நூலுக்கான பரிசு ரூபாய் பத்தாயிரம் - திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள் - நூல்.
  • சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழ் வாகைச் செம்மல் விருது
  • தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது - 2020
  • சமூக இலக்கிய விருது
  • அருவினை நம்பி பட்டம்
  • எழுத்துச் செல்வர் பட்டம்
  • சிறந்த மாமனிதர் விருது
  • நேரு நினைவு விருது
  • கலைமணி
  • முக்கனிப் பாவலர்
  • மக்கள் சேவகர்
  • மூவேந்தர் இலக்கியப் பேரவை புதுக்கவிதை விருது
  • அருந்தமிழ் மாமணிப் பட்டம்
  • மனித நேய முரசு
  • கவியருவி விருது
  • கவிப்பேரரசர் வைரமுத்து விருது
  • திருக்குறள் நூலறிச் செம்மல் விருது
  • சேவைச் செம்மல் விருது

மதிப்பீடு

எடப்பாடி ஆ. அழகேசன் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். காதல், குடும்ப உறவுச் சிக்கல்கள், பணிச் சூழல் பிரச்சனைகள், சமூகப் பிரச்சனைகள் போன்றவை அவற்றின் மையப்பொருளாக இருந்தன. எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, எடப்பாடி ஆ. அழகேசனின் சிறுகதைகள் குறித்து, “உலக மனித குலத்துக்குத் தேவைப்படுகிற ஒரு வாழ்வியல் பண்பாட்டை இவரது சிறுகதைகள் முன்வைக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

நூல்கள்

  • காதல் ரோசாவே
  • கல்லூரிப் பறவைகள்
  • சிறகுகள் முளைத்ததடி
  • சிந்னைச் சிகரங்கள்
  • காதல் திசைகள்
  • வாழ்ந்து காட்டுவோம் வா
  • திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்
  • மானுடம் வளர்ப்போம்; சாதியம் ஒழிப்போம்
  • மெல்லப் புரியும் உண்மை

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.