standardised

இராமலிங்க வள்ளலார்: Difference between revisions

From Tamil Wiki
(Standardised)
(Moved to Standardised)
Line 119: Line 119:
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->


{{ready for review}}
{{Standardised}}




<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:11, 5 February 2022

To read the article in English: Ramalinga Vallalar. ‎

வள்ளலார்
வள்ளலார்

இராமலிங்க வள்ளலார் (இராமலிங்க அடிகள் / இராமலிங்க சுவாமிகள் / திருவருட்பிரகாச வள்ளலார், அக்டோபர் 5, 1823 – ஜனவரி 30, 1874) சாதி மத வேறுபாடுகளை மறுத்து சமரச சன்மார்க்க நெறியை முன்வைத்த ஆன்மீகவாதி. சடங்குகளை மறுத்து அருட்பெருஞ்சோதி வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர். வடலூரில் சத்தியஞான சபையையும் சத்திய தர்ம சாலையையும் நிறுவியவர். திருவருட் பிரகாச வள்ளலார் என்றும், வடலூர் வள்ளலார் என்றும் குறிப்பிடப்படுபவர். இவர் எழுதிய பாடல்களில் திருவருட்பா முதன்மையான பக்தி நூல்.

பிறப்பு, கல்வி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் அக்டோபர் 5, 1823 அன்று இராமலிங்கர் பிறந்தார். தந்தை ராமையா பிள்ளை கிராமக் கணக்கராக இருந்தவர், தாய் சின்னம்மையார். இவருக்கு நான்கு உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்து ஆறு மாதங்களில் தந்தை இறந்து விட்டார். தாயார் குழந்தைகளோடு தான் பிறந்த ஊராகிய பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராசாமிப் பிள்ளை தெருவில் குடியேறினார்.

இராமலிங்கரின் அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். இராமலிங்கரை நன்கு படிக்க வைக்க வேண்டுமென விரும்பினார். அக்கால முறைப்படி தமிழ்க் கல்வி கற்பிக்க திவாகரம், நிகண்டு, சதகம், அந்தாதி போன்றவற்றை தம்பிக்குக் கற்பித்தார். இராமலிங்கருக்கு ஆன்மீக நாட்டம் இருந்த அளவுக்குக் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. சபாபதி தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில இராமலிங்கரை அனுப்பி வைத்தார். இராமலிங்கர் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவதிலேயே ஈடுபாடு கொண்டிருந்தார். சென்னை நகரில் கந்தசாமி கோவில் என்றும் முத்துக்குமாரசாமி கோவில் என்றும் சொல்லப்படும் ஆலயமே கந்தகோட்டம்.

அவரது ஆசிரியரும் இராமலிங்கர் பாடிய பாடல்களைக் கேட்டு, இயல்பிலேயே புலமை கொண்டிருந்த ராமலிங்கருக்கு கல்வி தேவையில்லை என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன் ஆன்மீகத் தேடலில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார். தான் கல்வியின் சிறப்பால் பாடத் தொடங்கவில்லை என்றும் கடவுளின் அருளால்தான் பாட முடிகிறதென்றும் அவரே தன் பாடல்களில் குறிப்பிடுகிறார்.

ஆன்மீக வாழ்க்கை

கந்தகோட்டதில் பல மணிநேரம் தியானத்திலும் வழிபாட்டிலும் ஈடுபடுவார். இராமலிங்கர் முதலில் இயற்றிய பாடல்களான தெய்வமணிமாலை இங்குதான் பாடப்பட்டது. எளிய சொற்கள் கொண்ட 31 பாடல்களைக் கொண்ட இத்தொகுப்பில் பாடல்தோறும் ஈற்றடி


“கந்த கோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே” என்று அமைந்திருக்கும்.

இவற்றுள்
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்” எனத் தொடங்கும் பாடல் மிகவும் புகழ் பெற்றது.

பன்னிரண்டாவது வயதில் இருந்து முழுமையான ஞான வாழ்வு தொடங்கியதாகப் பாடியிருக்கிறார் (“பன்னிரண்டாண்டு தொடங்கி நான் இற்றைப் பகல் வரை அடைந்தவை எல்லாம்” – பிள்ளைப் பெருவிண்ணப்பம்). தினமும் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அருட்பாவின் முதல் மூன்று திருமுறையின் பல பாடல்கள் ஒற்றியூர் இறைவன் மீது பாடப்பட்டவை.

சமரச சுத்த சன்மார்க்கம்

1865-ல் ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம் என்ற ஒரு நெறியை ஏற்படுத்தினார். வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்னும் ஆறு அந்தங்களுக்கும் பொதுவான நெறி என்று இப்பெயரிட்டார்.  கடவுள் ஒருவரே, அக்கடவுளை ஒளி வடிவில் வழிபட வேண்டும், சிறுதெய்வ வழிபாடு கூடாது, அத்தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணக் கூடாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, எவ்வுயிரையும் தன்னுயிர் போல எண்ணவேண்டும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வைக் கைக்கொள்ள வேண்டும், பசி தீர்த்தல் முதலிய ஜீவகாருண்யமே பேரின்ப வீடு பேறடைய வழி என்பதும், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்காது என்பதும், இறந்தவரை எரிக்காது புதைக்க வேண்டும் என்பதும், சடங்குகள் தேவையில்லை என்பதும் சமரச சுத்த சன்மார்க்க நெறியின் கொள்கைகள் ஆகும்.

”சாதி சமயச் சழக்கை விட்டேன் – அருட் சோதியைக் கண்டேனடி”

“கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்முடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக  மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற” போன்ற பல பாடல்களில் இந்நெறியின் கொள்கைகளை விளக்கிப் பாடியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

இராமலிங்கர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்க அடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.

திருவருட்பா
திருவருட்பா

“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே” (அருள்விளக்கமாலை, 2)

“கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே !
காணுர்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!” (அருள்விளக்கமாலை, 39)

“அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்” (பரசிவ நிலை 1)

போன்ற எளிய வார்த்தைகளில் இறைவனைப் புகழ்ந்து இராமலிங்கர் பாடிய அருட்பா பாடல்கள் புகழ்பெற்றவை. ஏறக்குறைய எல்லாப் பாடல்களுமே சமரசம் ஜீவகாருண்யம் ஆகிய இரண்டு அடிப்படை கொள்கைகளை பாடுபவை.

சிற்றிலக்கிய மரபைச் சேர்ந்த உலா, தூது வகைமையில் பல பாடல்கள் அருட்பாவில் இடம் பெற்றுள்ளன. சிவபெருமான் உலா வரும்போது கண்டு காதல் கொண்ட காதலியாகக் கற்பனை செய்து பாடிய பாடல்கள் திருவுலாப் பேறு, திருவுலா வியப்பு, திருவுலாத் திறம் போன்றவை. நாரையையும் கிளியையும் இறைவனிடம் தூது அனுப்பும் தூது வகைப் பாடல்களும் எழுதியுள்ளார்.

மனுமுறைகண்ட வாசகம் (1854) என்னும் மனுநீதி சோழன் முறை செய்த வரலாற்றை விளக்கும் உரைநடை நூலை எழுதினார்.

“நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ!” எனத் தொடங்கும் புகழ்பெற்ற பாடல் மகனது செயல் கேட்டு மனுநீதிச் சோழன் தன் செங்கோல் வளைந்தது என வருந்தும் பகுதியில் வருவது.

செய்யுளில் சொல்லைப் பலவிதமாகக் கையாண்டு புலமையைக் காட்டும் வழக்கம் சிற்றிலக்கியக் காலம் முதல் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பிட்ட சில சொற்களை எடுத்துக் கொண்டு, அவற்றின் முதலிலும், இடையிலும், கடையிலும் உள்ள எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து வெவ்வேறு சொற்களாக்கிக் குறிப்பினால் பொருளுணர்த்தும் முறையில் வள்ளலார் பாடிய பாடல்கள், எழுத்தியலமைப்பில் 'மிறைக் கவி' (சித்திரகவி) என்னும் வகையை சேர்ந்தது.

தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
தாதாதா என்றுலகில் தான் அலைந்தோம்-போதாதா
நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே
எந்தாய் எனப் புகழவே.

என்னும் வெண்பாவின் முதலடியில் ஏழு முறை வந்துள்ள ‘தா’ என்னும் எழுத்துக்களின் பின் 'குறை' என்ற சொல்லை இணைத்து எழுதாக்குறை என்று பொருள் கொள்ள வேண்டும். இரண்டாவது அடியில் உள்ள தாதாதா என்பதை தாதா, தா எனப் பிரித்து வள்ளலே தா(கொடு) எனப் பொருள் கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் வெளிவந்த பல நூல்களுக்கு சாற்றுகவி எழுதியுள்ளார். அவற்றுள் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதிநூலுக்கு (1859) எழுதிய சாற்றுகவி குறிப்பிடத்தக்கது.

சமூகப் பணி

சத்திய தரும சாலை

இராமலிங்கர் 1858-ல் சென்னையை விட்டு சிதம்பரம் சென்றார். 1858 முதல் 1867 வரை கருக்குழி என்னும் ஊரில் வேங்கட ரெட்டியார் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்.

பசித்த மக்களுக்கு தினம்தோறும் உணவிட வேண்டும் என்று இராமலிங்கர் வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று மே 23, 1867 அன்று சத்திய தரும சாலையை தொடங்கினார்.

”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய இராமலிங்கர் ஜீவகாருண்யம் என்ற கொள்கையை முன்வைத்து பசித்திருக்கும் அனைவருக்கும் உணவிடவேண்டும் என்று சொன்னவர். இந்த தர்மசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. இன்றும் அங்கு இராமலிங்கர் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவிடப் படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள் இதுபோல தர்ம்சாலைகள் நடத்துகிறார்கள்.

1867-ல் சன்மார்க்க போதினி பாடசாலை என்ற கல்வி பயிற்றுவிக்கும் பாடசாலை ஒன்றைத் தொடங்கினார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மும்மொழி கற்றுத்தருவதும், குழந்தைகள் முதல் முதியவர் வரை இங்கு கற்கலாம் என்றும் இப்பாடசாலை பற்றிய குறிப்பில் இருந்து அறிய முடிகிறது.

சத்திய ஞான சபை

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இராமலிங்கர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு ‘சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்’ என்று பெயரிட்டார். சாதிய பாகுபாடுகளை மறுத்தார். இந்து மதத்தில் இருந்த வந்த ஆசாரங்களை ஒப்புக்கொள்ளாமல், எந்த வழிபாட்டு சடங்குகளையும் கடைப்பிடிக்காமல் இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ‘அருட்பெரும்சோதி’ வழிபாட்டை முன்வைத்தார். அதனால் பல உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியை கடைப்பிடித்தார்.

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இராமலிங்கர், அன்றிருந்த நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டதால் மிகுந்த எதிர்ப்புகளை சந்தித்தார்.

விவாதங்கள்

இராமலிங்கர் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய மரபார்ந்த சைவ வாதிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக இராமலிங்கர் எழுதியவற்றை மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இராமலிங்கர் முன்வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர்.

1868-ல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம் என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்கியது. 1869-ல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது; இது அருட்பா அல்ல, போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.

வடலூர் இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா என்ற விவாதம் கடுமையாக எழுந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் இவ்விவாதத்தை எழுப்பினார். மிகக் கடுமையான சொற்களை பயன்படுத்தினார். அதற்கு வள்ளலாரின் சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் முதலியோர் வசை பாதி விவாதம் பாதியாக பதிலுரைத்தார். தொடர்ந்து மான நட்ட வழக்கும் நடந்தது.

பின்பு 1904-ல் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை அவ்விவாதத்தை முன்னெடுத்து அதி பயங்கரமான வசைக் கவிதைகளை எழுதினார். இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதற்கு வடலூரைச் சேர்ந்த பானு கவி 1905-ல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். கதிரை வேற் பிள்ளைக்கு உத்தரக் கிரியை நடத்தும் துண்டுப் பிரசுரங்கள் பல அடிக்கப் பட்டன.

சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த இராமலிங்கர் பழமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்.

தமிழினி வெளியீடாக வந்த ‘அருட்பா மருட்பா விவாதம்’ என்ற முக்கியமான நூலை ஆய்வாளர் ப. சரவணன் எழுதியுள்ளார். அதில் அவர் ஆறுமுகநாவலருக்கும் வடலூர் இராமலிங்க வள்ளலாருக்கும் இடையே நடந்த அருட்பா மருட்பா விவகாரத்தை விரிவான ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

மறைவு

1870க்குப் பிறகு இராமலிங்கர் வடலூருக்குத் தெற்கே இரண்டு மைல்தொலைவில் இருந்த மேட்டுக்குப்பத்தில் சித்திவளாக மாளிகை என்னும் இடத்தில் வாழ்ந்துவந்தார். அங்கு பிரம்மதண்டிகா யோகம் முதலான பலவிதமான யோக சாதனைகளை மேற்கொண்டார். 1874 தைப்பூசத்தன்று (ஜனவரி 30) சித்திவளாகத்தில் தனது அறையில் சென்று தாழிட்டுக் கொண்டவர் அப்படியே சோதியில் கலந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

வாழ்க்கைப் பதிவுகள்

ராஜ் கௌதமன் அவர்களின் ”கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக”  [முதல் பதிப்பு - தமிழினி, 2001] எனும் விமர்சன நூல் சமூக நோக்கில் இராமலிங்க வள்ளலாரை அவரது படைப்புகளையும் களப்பணி சூழலையும் விமர்சனபூர்வமாக அணுகிய ஆய்வு நூல்.

இராமலிங்க வள்லலாரின் அருட்பா மருட்பா வழக்கு சம்பந்தமாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் இருந்து  மூல ஆவணங்களை எடுத்து ப. சரவணன் மிக முக்கியமான ஆய்வு செய்துள்ளார்.

படைப்புகள்

இராமலிங்கர் (வள்ளலார்) எழுதிய நூல்கள்
  • திருவருட்பா
  • மனுமுறைகண்ட வாசகம் (1854) – மனுநீதி சோழன் முறை செய்த வரலாற்றை விளக்கும் உரைநடை நூல்
  • ஜீவகாருண்ய ஒழுக்கம்
இராமலிங்கர் பதிப்பித்த நூல்கள்
  • ஒழிவிலொடுக்கம் (1851) – எழுதியவர் சீகாழிக் கண்ணுடைய வள்ளலார்
  • தொண்டைமண்டல சதகம் (1855) – எழுதியவர் படிக்காசுப் புலவர்
  • சின்மய தீபிகை (1857)

உசாத்துணைகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.