under review

சாற்றுகவி

From Tamil Wiki

முந்தைய காலத்தில் நூல் எழுதுபவர்கள் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை சாற்றுகவி (சாற்றுக்கவி). இது சிறப்புப் பாயிரம் என்றும் குறிப்பிடப்பட்டது.

சாற்றுகவி மரபு

இன்று நூல் அச்சேறுவதற்கு முன்பு ஒரு நல்ல வாசகரிடம் அல்லது புகழ்பெற்ற எழுத்தாளரிடம் அணித்துரை பெறும் வழக்கம் இருப்பது போல் முற்காலத்தில் நூலை முழுவதும் படித்துவிட்டு, அதைப் படித்த புலவர் அல்லது எழுத்தாளர் ஒரு சாற்றுகவி எழுதித் தருவார். ஒரு நூலை ஒருவர் வெளியிட்டால் சில சமயம் அதற்குப் பல புலவர்கள் சாற்றுகவி அளித்திருப்பார்கள். சில நூல்களில் நூலின் அளவைவிடச் சாற்றுக் கவிகளின் அளவு மிகுதியாக இருக்கும்.

புகழ்பெற்ற சாற்றுகவிகள்

வள்ளலார் என அழைக்கப்பட்ட இராமலிங்க வள்ளலார் பல நூல்களுக்கு சாற்றுகவி எழுதியிருக்கிறார். இராமலிங்க அடிகள் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதி நூலுக்கு பின்வரும் சாற்றுகவியை வழங்கியிருக்கிறார்:

வளங்கொள் குளத்தூர் அமர்ந்த வேதநா
யகன் அருளால் வயங்க முன்னாள்
உளங்கொள்மனு உரைத்தனன் ஓர் நீதிநூல்
அந்நூற்பின் உறுநூலாகத்
துளங்கிடும் அவ்வூர்உறை அத்தோன்றல் ஓர்
நீதிநூல் சொன்னான் இந்நாள்
விளங்கும் இந்நூல் முன்னர்மற்றை
நூல் எல்லாம் கிழிபடத்தின் வெண்ணூலன்றே

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் நீதி நூலுக்கு சாற்றுகவி இயற்றியிருக்கிறார். இதுதவிர நீதிநூலுக்குச் 56 புலவர்களிடம் சாற்றுகவி பெற்றிருகிறார் வேதநாயகம் பிள்ளை. கோபாலகிருஷ்ண பாரதி நந்தனார் சரித்திரத்தை எழுதிய போது திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அதில் இலக்கணப் பிழைகள் மட்டுமல்லாது பொருள் குற்றம், கருத்துப் பிழை இருப்பதாகச் சொல்லி நந்தனார் சரித்திரத்திற்கு சாற்றுகவி எழுதிக் கொடுக்க மறுத்து வந்தார்.[1] பின்னர் கோபாலகிருஷ்ண பாரதியார் பெருமுயற்சி செய்து மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மனதைத் தன் இசையால் மாற்றி, பாயிரம் எழுதி வாங்கினார் என உ. வே. சாமிநாதையர் ’என் சரித்திரம்’ நூலில் குறிப்பிடுகிறார்.

"ஆசிரியப்பிரானுடைய சாற்றுக்கவி இருந்தால் தம் நூலுக்குப் புகழும் சிறப்பும் ஏற்படும் எனப் பலரும் விரும்பினர்கள். பலர் அவரிடம் சாற்றுக்கவிகளே வாங்கினர்கள்." என்று உ.வே. சாமிநாதய்யரின் சாற்றுகவி பெற பலரும் விரும்பியதை ’என் ஆசிரியப்பிரான்’ நூலில் கி.வா.ஜகந்நாதன் குறிப்பிடுகிறார்.[2]

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page