under review

அழகியல்வாதம்

From Tamil Wiki
Revision as of 10:52, 30 December 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Aestheticism. ‎

அழகியல் வாதம் (Aestheticism) பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கியம், ஓவியம், இசை ஆகியவற்றில் உருவான ஒரு கொள்கை. கலைப்படைப்பின் அழகு மட்டுமே முதன்மையானது என்றும் அதன் குறியீட்டுத்தன்மையோ அறிவுறுத்தும் தன்மையோ அல்லது உணர்வெழுச்சித்தன்மையோ முக்கியமானவை அல்ல என்றும் இந்த கொள்கை வாதிட்டது. கலைப்படைப்பின் உச்சகட்ட நோக்கமும் சிறப்பும் அழகில் முழுமை கொள்ளுதல் மட்டுமே என்றது. அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு படைப்பு மதிப்பிடப்படவேண்டும் என்றும், அழகு என்பது மாறிக்கொண்டே இருக்கும் கருத்துக்கள் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றுக்கு அப்பால் என்றும் மாறாமலிருக்கும் மானுடபொதுவான சில அடிப்படைகளைக் கொண்டது என்றும் கூறியது.

தோற்றம், பின்னணி

அழகியல்வாதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அன்றிருந்த இரண்டு பொதுவான பார்வைகளுக்கு எதிராக உருவானது. ஒருசாரார் இலக்கியமும் கலையும் அறங்களையும் ஒழுக்கங்களையும் போதனைசெய்யவேண்டும், மக்களை வழிநடத்தவேண்டும் என்று வாதிட்டனர். இன்னொரு சாரார் இலக்கியமும் கலையும் புதிய கருத்துக்களை மக்களிடையே எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்றனர். அழகியல்வாதிகள் அவற்றை மறுத்து கலையின் முதன்மை நோக்கம் கலையென நிலைகொள்வதே என்றனர். கலை அழகை உருவாக்குகிறது, அந்த அழகுணர்வில் இருந்து கருத்துக்கள் பலவாறாக உருவாக்கிக்கொள்ளப்படுகின்றனவே ஒழிய கலையின் நோக்கம் கருத்துருவாக்கம் அல்ல என்றது.

இக்கருத்து 1860-ல் இங்கிலாந்தில் வில்லியம் மோரிஸ் (William Morris) தாந்தே கம்ப்ரியேல் ரோசெட்டி (Dante Gabriel Rossetti) போன்ற ஓவியர்களும் கலைவிமர்சகர்களும் அடங்கிய சிறிய குழுவினரால் முன்வைக்கப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இச்சிந்தனையின் முதன்மை முகமாக ஆஸ்கார் வைல்ட் (Oscar Wilde ) அறியப்படுகிறார்.

Aestheticism என்னும் சொல் வால்டர் ஹாமில்டன் (Walter Hamilton) என்னும் விமர்சகரால் The Aesthetic Movement in England என்னும் நூலில் 1882-ல் முன்வைக்கப்பட்டது. பின்னர் ஐரோப்பா முழுக்க இலக்கியத்தையும் கலையையும் பிரச்சார வடிவம் மட்டுமாக சுருக்க முயன்ற அரசியல் இயக்கங்கள் மற்றும் மத அமைப்புகளுக்கு எதிராக வலுவான கருத்துநிலையாக அழகியல்வாதம் நிலைகொண்டது. ’கலை கலைக்காகவே’ என்னும் கோஷம் இதன் வெளிப்பாடு.

அழகியல்வாதம் கலையில் கருத்துச்செயல்பாடு இருக்கலாகாது என்று கூறும் தரப்பு அல்ல, கலையின் நோக்கமும் செயல்பாடும் கருத்து சார்ந்தது அல்ல என்றுமட்டுமே அது கூறியது. அது கலைப்படைப்பாக இருக்கையிலேயே தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது, எனவே முதன்மையாக அதை கலைப்படைப்பாக ஆக்கும் அழகியல்கூறுகளின் அடிப்படையிலேயே அது மதிப்பிடப்படவேண்டும் என வாதிட்டது.

கருத்துருவம்

அழகியல்வாதத்தின் வேர்கள் ஜெர்மானிய கற்பனாவாத தத்துவ இயக்கத்தில் உள்ளன எனப்படுகிறது. ஏ.ஜி. பௌம்கார்ட்டன் ( Alexander Gottlieb Baumgarten) அழகியல் என்னும் கருத்துருவை வரையறை செய்தார். இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant ) அதன் தத்துவ அடிப்படைகளை தன் Critique of Judgment (1790) என்னும் புகழ்பெற்ற நூல் வழியாக நிலைநிறுத்தினார். ஷில்லர் (Friedrich Schille) தன்னுடைய Aesthetic Letters (1794) நூல் வழியாக அந்த கருத்தை விரிவாக்கம் செய்தார்.

மனிதன் தன் அன்றாடநிலையில் இருந்து எழுந்து ஓர் உச்சநிலையில் கலையில் வெளிப்படுகிறான், கலையிலேயே உயர்ந்த கொள்கைகளும் அறமும் திகழ்கின்றன, அவை பின்னர் அவனால் வாழ்க்கைக்குக் கொண்டுவரப்படுகின்றன என்று ஜெர்மானிய கற்பனாவாதிகள் கூறினர். அழகு என்பது இயற்கையிலுள்ள ஒத்திசைவையும் முழுமையையும் மனிதன் கண்டடைவதும், தன் படைப்பில் அதை நிகழ்த்துவதுமாகும். ஆகவே அழகு என்பது தன்னளவிலேயே உன்னதமானது. உயர்ந்த சிந்தனைகளை உருவாக்க வல்லது. மனிதனை மீட்க கலையால் இயலும் என்னும் நம்பிக்கையை முன்வைத்தனர். இங்கிலாந்தில் இந்தத் தரப்பு தாமஸ் கார்லைல் (Thomas Carlyle) வழியாக செல்வாக்குபெற்றது.

அழகியல்வாதம், தமிழில்

தமிழ்ச்சூழலில் அழகியல்வாதம் நவீன இலக்கியத்தின் சிறுவட்டத்திற்குள், புதுமைப்பித்தன் தவிர்த்த மணிக்கொடி எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டது. கலைப்படைப்பின் முதன்மைநோக்கம் கலையமைதியை அடைவதே என்றும், அதனடிப்படையிலேயே அது மதிப்பிடப்படவேண்டும் என்றும் தன் விமர்சனக் குறிப்புகளினூடாக வாதிட்டவர் கு.ப. ராஜகோபாலன். இலக்கியப்படைப்புகள் அறம் மற்றும் ஒழுக்கத்தை பிரச்சாரம் செய்யவேண்டும் என்ற தரப்புக்கும், இலக்கியப்படைப்புக்கள் சமூகமாற்றத்தின் கருவிகளாக அமையவேண்டும் என்னும் கருத்துக்கும் எதிராக அவர் இக்கருத்தை முன்வைத்தார். தமிழில் அழகியல்வாதத்தின் வலுவான குரலாக சுந்தர ராமசாமி திகழ்ந்தார். மனிதனை மீட்பதில் மதமும் தத்துவமும் தோற்றுவிட்டன, கலை ஒன்றே மனிதனை மீட்கும்தன்மைகொண்டது என்று சுந்தர ராமசாமி தொடர்ந்து எழுதிவந்தார்.

(பார்க்க அழகியல் , அழகியல் விலக்கம் , அழகியல் சார்பு )

உசாத்துணை


✅Finalised Page