under review

அ. மறைமலையான்

From Tamil Wiki
Revision as of 03:44, 30 June 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அ. மறைமலையான்

அ. மறைமலையான் (டாக்டர் அ. மறைமலையான்) (பிறப்பு: ஜூலை 08, 1932) கவிஞர், எழுத்தாளர், இதழாளர். தமிழக அரசின் வருவாய்த் துறையிலும், இந்திய அஞ்சல் துறையிலும் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். திராவிட இயக்க ஆதரவாளராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

அ. மறைமலையான், ஜூலை 08, 1932-ல், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கண்ணந்தங்குடியில், க.து. அய்யாசாமி மண்கொண்டார் - முத்தம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். சரபோஜி மன்னர் மாலைக் கல்லூரியில் பயின்று வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

அ. மறைமலையான், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று, 1952-ல், மாநில அரசின் வருவாய்த் துறையில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். 1953-ல் அஞ்சல் துறையில் எழுத்தர் ஆனார். பணி ஓய்வுக்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்று சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். திருமண வாழ்க்கை குறித்த விவரங்களை அறிய இயலவில்லை.

அ. மறைமலையான் நூல்

இலக்கிய வாழ்க்கை

அ. மறைமலையான் இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா பாடல்களால் ஈர்க்கப்பட்டார். டால்ஸ்டாயின் 'How much land does a nan require' என்னும் கதை மூலம் எழுத்தார்வம் பெற்றார். 1953 முதல் பல்வேறு இதழ்களில் எழுதத் தொடங்கினார். கலைமகள் இதழில் 'நட்சத்திரப் பூ என்னும் தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதினார். தொடர்ந்து கலைமகள் இதழில் பல சிறுகதைகளை எழுதினார். தொடர்ந்து பல்வேறு இதழ்களில் பொது வாசிப்புக்குரிய சிறுகதை, கட்டுரை, நாடகங்களை எழுதினார். 'யாருக்காக வாழ்கிறாள்' என்பது அ. மறைமலையான் எழுதிய நாவல்.

அ. மறைமலையான், சிறுகதை, புதினம், வானொலி நாடகம், கவிதை, வாழ்க்கை வரலாறு, பயணம், ஒப்பாய்வு என 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மறைமலையானின் பல படைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூல்களாக வைக்கப்பட்டன.

மேடையுரை

அ. மறைமலையான், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 1988-ல் நடைபெற்ற உலகக் கவிஞர் மாநாட்டில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். பல்வேறு கவியரங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டு கவிதை படைத்தார். பல இலக்கிய நிகழ்வுகளில் பங்குபெற்றுச் சொற்பொழிவாற்றினார்.

இதழியல்

அ. மறைமலையான், 'போர்வாள்', 'போல்டு இந்தியா' நாளிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். 'நவமணி' நாளிதழின் தலையங்க ஆசிரியராகப் பணிபுரிந்தார். 'மக்கள் பாதை மலர்கிறது' இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். 'Guiding Light' என்னும் ஆங்கில மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.

அரசியல்

அ. மறைமலையான், பகுத்தறிவுக் கொள்கைகளில் நாட்டம் கொண்டிருந்தார். திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் ஆதரவாளராகச் செயல்பட்டார்.

அ. மறைமலையான் புத்தக வெளியீடு

பொறுப்பு

  • எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டிதழின் இரண்டாம் பதிப்பின் பொறுப்பாசிரியர்
  • உலக தமிழ் எழுத்தாளர் பேரவைத் தலைவர்
  • மக்களாட்சி பாதுகாப்பு இயக்கத் தலைவர்

விருதுகள்

  • கலைமகள் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு
  • ஆனந்த விகடன் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு
  • 'காட்டு மல்லிகை' நூலிற்கு அகில இந்திய வானொலியின் வானொலி நாடகப் போட்டியில் முதல் பரிசு
  • 'ஒரு தமிழ்ப்பூ தவிக்கிறது' நூலுக்காக தமிழக அரசின் முதல் பரிசு
  • 'அண்ணாவின் பெருவாழ்வு' நூலுக்காக தமிழக அரசின் பரிசு
  • அண்ணாவின் வாழ்க்கை வரலாறு நூலுக்கு 'பேரறிஞர் அண்ணா விருது'
  • தென்றல் இதழின் வெண்பா போட்டியில் பரிசு
  • 'Trees are my Teachers' கவிதைக்கு தாய்லாந்து அரசின் பாராட்டு மற்றும் பரிசு
  • கவிஞானி பட்டம்
  • தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது
  • தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அளித்த கலைமாமணி விருது
  • அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் அளித்த டி.லிட். பட்டம்

மதிப்பீடு

அ. மறைமலையான், கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரைகளை எழுதினார். வாழ்க்கை வரலாற்று நூல்களையும் அரசியல் சார்ந்த நூல்களையும் எழுதினார். தொகுத்தார். அ. மறைமலையானின் படைப்புகள் பொது வாசிப்புக்குரியவை. சமூகச் சீர்த்திருத்தச் சிந்தனைகளை வலியுறுத்துபவை. அ. மறைமலையான் திராவிட இயக்கம் சார்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • காட்டு மல்லிகை
  • ஒரு தமிழ்ப் பூ தவிக்கிறது
  • பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு
  • பேரறிஞர் அண்ணாவும் பெருந்தலைவர் பெரியாரும்
  • நிலவில் பூத்த நெருப்பு (அறிவியல் நாவல்)
  • கொள்கைச் செம்மல் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி
  • அன்னை தெரேசா வாழ்கை வரலாறு
  • தமிழறிஞர் மறைமலையடிகளார்
  • மறக்க முடியாத மாணிக்கங்கள்
  • எஸ்.டி. சோமசுந்தரம் வாழ்க்கை வரலாறு
  • தூயதமிழ் வாசமும் துப்பாக்கி வீராங்கனையும்
  • தலைவர் பெரியார் தளபதி அண்ணா: ஓர் ஒப்பாய்வு நூல்
  • குருதியில் பூக்கும் தமிழீழம்
  • அலைகள் ஓய்வதில்லை
  • அவளும் ஒரு எம். எல். ஏ.
  • பொற்கால ஆட்சிக்குப் புதிய அரசமைப்புச் சட்டம்
  • பட்டிக்காட்டாரின் பகுத்தறிவுப் பயணம்
  • மக்கள் பாதை மலர்கிறது
  • அண்ணா போற்றிய அறிஞர்கள் (தொகுப்பு நூல்)
  • அண்ணா போற்றிய பெருமக்கள் (தொகுப்பாசிரியர்கள்: கவிஞர் அ. மறைமலையான், புலவர் பெ. சு. இளஞ்செழியன்)
  • பேரறிஞர் அண்ணா கருத்துமணிகள் (தொகுப்பாசிரியர்கள்: கவிஞர் அ. மறைமலையான், புலவர் பெ. அ. இளஞ்செழியன்)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jun-2026, 17:19:22 IST