under review

கருங்குழலாதனார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கருங்குழலாதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

கருங்குழலாதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

கருங்குழலாதனார் பாடிய பாடல்கள் புறநானூறில் 7 மற்றும் 224-வது பாடல்களாக இடம்பெற்றுள்ளன. இவர் பாடிய இரண்டு புறப்பாடல்களும் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் மேல் பாடப்பட்டவை. புறநானூறு 7-வது பாடல் தனது நாட்டின் வளத்தை போற்றி வளர்க்காமல் பகைவர் நாட்டு ஊர்களை தீக்கிரையாக்கி அழிப்பது நன்றன்று என்று கரிகாலனுக்கு புலவர் அறிவுரை கூறுவதாக வஞ்சித் திணையில் அமைந்த பாடல். புறநானூறு 224-வது பாடல் கரிகால் பெருவளத்தான் இறந்தவுடன் அவனது மனைவியர் அணிகலன் அகற்றி துயரத்தில் மூழ்கினர். அதனை கண்டு கரிகாலனின் சிறப்புகளையும் அவனை இழந்த மனைவியரின் துயரத்தையும் பாடுவதாக பொதுவியல் திணையில், கையறு நிலை துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

புறநானூறு - 7
  • யானைப்படை, காலாட்படை, வில்லவர் படை ஆகிய மூன்று படைப்பிரிவுகளை சோழமன்னன் கரிகால் பெருவளத்தான் கொண்டிருந்தான்.
  • படைவீரர்கள் தோலால் செய்யப்பட்ட மார்புக் கவசத்தை அணிந்திருந்தனர். சோழன் கரிகால் பெருவளத்தான் தன்னை நாடிவந்த திருமகளை மறுத்து தோலால் செய்யப்பட்ட மார்பு கவசத்தை அணிந்தவன் என்று சிறப்பித்து கூறப்பட்டான்.
  • யானைப்படை, காலாட்படையால் பகைநாட்டை இடித்து தரைமட்டமாக்கி, வில்லவர் படையால் அம்பெய்தி பகை நாட்டவரை வீழ்த்தியும் வென்றான்.
  • போரில் வென்ற மன்னர்கள், வெல்லப்பட்ட ஊரை தீ வைத்து எரித்து சூறையாடும் வழக்கம் கொண்டிருந்தனர். அவ்வூர் மக்கள் அழும்குரலை கேட்பவனாக இருந்தான்.
  • சோழன் கரிகால் பெருவளத்தானின் நாடு நீர்வளம் மிக்கதாகவும் அவனால் வெல்லப்பட்ட நாடு மீன் வளம் மிக்கது என்றும் கூறப்பட்டுள்ளது.
புறநானூறு - 224

சோழன் கரிகால் பெருவளத்தானின் சிறப்புகளாக சொல்லப்படுவன:

  • காட்டரண்களைக் கடந்து சென்று போர்களில் வெற்றி கண்டான்.
  • தன் மனைவிமாருடன் வந்து பாணர் சுற்றத்தாருக்குக் கள்ளைத் தந்து அவர்களைப் பேணினான்.
  • வேதவேள்வி அறிந்தவர் முன்னின்று புகழ் பாட, மெல்லியல் கொள்கையும் குறையற்ற கற்பும் கொண்ட தன் மகளிர் சூழ்ந்திருக்க, சூரியனின் ஒளிவட்டம் போல் வட்டமிட்டு வந்து எருவைக் கழுகுகள் உண்ணும் உணவினை வெற்றித்தூண் நட்டு வேதவேள்வி செய்து முடித்தான்.
  • சோழன் கரிகால் பெருவளத்தான் இறந்தது உலகிற்கு இழப்பாகும். அவனது மனைவியர் அணிகளைந்தனர்.
  • உவமை: கரிகால் பெருவளத்தானின் மனைவியர் அணிகலன்களை அகற்றி துயரத்துடன் நிற்பது, அருவி நீர் வற்றி வறட்சியால் பசும்புல் அற்றுப்போன நிலத்தில் பூத்து நின்றிருக்கும் வேங்கை மரத்தின் பூக்களை அரிவாளால் வெட்டி பசுக்கூட்டத்திற்கு உணவாக்கும் ஆயரின் செயலுடன் ஒப்புமை கூறப்பட்டுள்ளது.

பாடல் நடை

புறநானூறு - 7

  • திணை: வஞ்சி
  • துறை:கொற்றவள்ளை

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்து அடி,
கணை பொருது கவி வண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ!
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Nov-2025, 21:20:35 IST