மலையனார்
மலையனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மலையனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயரோ பிற விவரங்களோ தெரியவில்லை. "மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!" என்று பாடிய வரியின் சிறப்பு காரணமாக மலையனார் என்று அழைக்கப்பெற்றுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
மலையனார் பாடிய பாடல் நற்றிணையில் 93 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பகல் காலத்தே மட்டும் வந்து சென்று திருமணம் செய்து கொள்ளாமல் நாள் கடத்தும் தலைவனை நோக்கி தலைவியின் துயரை தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குறிஞ்சி நிலத்தில் தேன்கூடுகள் தொங்கும். பலாப்பழங்கள் பழுத்துத் தொங்கும். வெண்ணிற அருவி பொங்கி ஓடும். அருவி நீரால் தினைப்பயிர்கள் செழித்து வளர்ந்து நீர் வழியில் அடித்து செல்லப்படும். இத்தகு மலைக்கு உரியவன் தலைவன்.
- பரந்த தோள்களையும் அழகிய அணிகலன்களையும் அணிந்திருப்பர் மாமை நிறமுடைய குறிஞ்சி நிலத்து இளமகளிர். காதல் கொண்டு வருந்துவதால் பசலை நோய்க்கு ஆளாவர்.
- மயிர் சீவாத தோலினால் செய்யப்பட்ட அரசர்களின் போர் முரசு அறைந்தாலும் பெண்ணை கைவிட்டுச் சென்ற ஆடவர் திரும்பி வருவதில்லை என்று பாடப்பட்டுள்ளது.
பாடல் நடை
நற்றிணை - 93
- திணை: குறிஞ்சி
- கூற்று:வரைவு கடாயது
'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல்
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Aug-2025, 21:14:54 IST