மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். வெண்ணாகனார் என்னும் இயற்பெயர் உடையவர். தென்பாண்டி நாட்டு பகுதியில் அமைந்த ஊர்களில் ஒன்று கடையம். கடையம் என்ற அவ்வூரினை சேர்ந்தவர். மதுரைக்கு சென்று வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 223-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டச் சென்ற தலைவனின் பிரிவால் வருந்தியிருக்கும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறினாள். தோழியின் ஆறுதலுக்கு மறுமொழியாக தலைவி தன் துயரை வெளிப்படுத்தும் விதமாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- திருவிழாவில் தினைப்பயிர்களை கொத்தித் தின்ன வரும் கிளிகளை விரட்டப் பயன்படும் தழலை, தட்டை முதலிய கருவிகளை விற்பர்.
- திருவிழாவிற்கு வரும் இளம்பெண்களின் மேலான தங்கள் விருப்பத்தை தெரிவிக்க ஆடவர் தாம் விரும்பிய பெண்ணுக்கு தழலை, தட்டை முதலான கருவிகளைப் பரிசாக வாங்கி தருவர். தினைப்பயிர்களை இளம்பெண்கள் காவல் காப்பது சங்க காலத்தில் நிலவிய சமூக வழக்கம்.
பாடல் நடை
குறுந்தொகை - 223
- திணை: குறிஞ்சி
- கூற்று: வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்றிவண்
நல்லோர் நல்ல பலவாற் றில்ல
தழலும் தட்டையும் முறியுந் தந்திவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி
அன்னை யோம்பிய ஆய்நலம்
என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 223:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 14:05:16 IST