under review

மிளைக் கந்தன்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மிளைக் கந்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மிளைக் கந்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கந்தன் என்னும் இயற்பெயர் உடையவர். மிளை என்னும் சொல், ஊரினை சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்படும் காவல் வேலியை குறிக்கும். சிறப்பான காவல் வேலியை கொண்டிருக்கும் ஊருக்கு மிளை என பெயர் வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட மிளை என்ற ஊரில் பிறந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மிளைக் கந்தன் பாடிய பாடல் குறுந்தொகையில் 196 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பரத்தையர் இல்லம் சென்று திரும்பிய தலைவன், அவன் மேல் கோபம் கொண்டுள்ள தலைவியிடம் தன் பொருட்டு பேசுமாறு அவளது தோழியிடம் கூறுகிறான். அதற்கு தலைவியின் தோழி. தலைவனின் அன்பின்மையைச் சுட்டிக்காட்டி அவனுக்கு உரைக்கும் பதிலாக மருதத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பாரி என்னும் மன்னன் பறம்பு மலையினை ஆண்டான். தை மாதத்தில் பறம்பு மலையின் மேலுள்ள சுனையில் நீர் குளிர்ச்சியாக இருக்கும்.
  • உவமை: அன்பில்லாத தலைவனின் செயலுக்கு வேப்பங்காய் இனிக்கிறது என சொன்னதும் குளிர்ச்சியான நீர் வெப்பமும் உவர்ப்புமாக உள்ளது என்றதும் ஒப்புமை காட்டப்பட்டது.

பாடல் நடை

குறுந்தொகை - 196

  • திணை: மருதம் கூற்று: வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.

வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 10:03:25 IST