மீனெறி தூண்டிலார்
மீனெறி தூண்டிலார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மீனெறி தூண்டிலார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'மீனெறி தூண்டில்" என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அவ்வுவமையையே புலவரின் பெயராகக் கொண்டனர்.
இலக்கிய வாழ்க்கை
மீனெறி தூண்டிலார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 54-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவன் வராதது கண்டு துயருற்ற தலைவி தோழிக்குத் தன் துயரை உணர்த்துவதாக அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
தலைவன் வராமையினால் துன்பமுற்ற தலைவி, தன் துயரத்தை தோழிக்கு கூறுவதாக அமைந்துள்ள பாடல். குறிஞ்சித் திணையில் அமைந்தது.
- நான் மட்டுமே இங்குள்ளேன். எனது நலமாகிய மகிழ்ச்சி இங்கில்லை.
- கவண் கல்லின் ஒலிக்கு அஞ்சி உண்டு கொண்டிருந்த மூங்கிலை விட்டு சென்ற காட்டு யானை விலகி செல்லும். அது போல் தலைவனும் ஊரார் பேச்சுக்கு அஞ்சி என்னை விட்டு விலகி சென்றான்.
- தூண்டிலில் சிக்கிய மீனை, மீன் பிடிப்போர் விரைந்து இழுப்பதை போல தலைவனோடு என் மகிழ்ச்சியும் சென்று விட்டது.
பாடல் நடை
குறுந்தொகை - 54
திணை: குறிஞ்சி துறை: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 13:36:05 IST