under review

மகாமகம்

From Tamil Wiki
Revision as of 15:57, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கும்பகோணம் மகாமகம் குளம் (செயற்கைக்கோள் வரைபடம்)
கும்பகோணம் மகாமகம் திருவிழா

மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் நடைபெறும் விழா. பன்னிரெண்டு புகழ்பெற்ற சிவன் கோவில்களிலும், ஐந்து வைணவக் கோவில்களிலும் மகாமகம் நடைபெறும். சிவன்கோவில்களின் விழாக்கள் ('தீர்த்தவாரி') மகாமகக் குளத்திலும் வைணவக் கோவில்களின் விழாக்கள் காவிரி ஆற்றிலும் நடப்பெறும்.

மகாமகம்

மகாமகம் என்பது மாசி மாதத்தில் குரு கும்பராசியில் இருக்கும்போது மகம் நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும் பொருந்தி வரும் காலம். தேவகுருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான், சிம்ம ராசியுடன் பொருந்தும்போது, அவரோடு மாசி மாதத்தில் மக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நிலையில், கும்ப ராசியில் சூரியன் இவர்களையும், இவர்களை சூரியனும், முழுப் பார்வையுடன் பார்க்கும் நாளே மகாமகப் புண்ணிய நாள். இந்நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். மகாமகத்தை மாமாங்கம் என்றும் கூறுவர்.

தொன்மம்

பக்தர்களின் பாவங்களை நீக்கும் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நதிகள் பக்தர்களின் பாவங்களால் நிறைந்தன. இந்நதிகளின் பாவங்களைப் போக்க அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கும்பகோணத்தில் அக்னித் திக்கில் உள்ள தீர்த்தத்தில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பெளர்ணமி நாளான மகாமக நாளில் நீராடினால் பாவம் நீங்கும் என சிவன் ஆசி வழங்கினார். இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இது மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்பட்டது.

பிரம்மன் கும்பகோணத்தில் கோவில் கொண்ட கும்பேசரை வழிபாடு செய்யத் தகுந்த காலம் மாசித்திங்கள் என்பதால் அந்த மாதத்தின் பூர்வ பட்சத்தில் (வளர்பிறை) வரும் அஸ்வதி நட்சத்திரத்தில் புனித தீர்த்தத்தில் மூழ்கி வணங்கி மாசி மக மகோத்ஸவம் செய்வித்தார். ஒன்பது நாட்கள் விழா எடுத்து பத்தாவது நாளான மக நாளில் அக்னித் திக்கில் உள்ள தீர்த்தத்தில் கும்பேசருக்கு நீராட்டுவிழாவும் செய்தார். அதுவே மக விழா என்றழைக்கப்பட்டது.

கும்பகோணம் மகாமகம் குளம்

வரலாறு

  • தஞ்சை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் கோவிந்த தீட்சிதர் மகாமகக் குளத்தைத் தூய்மைப்படுத்தி, மக்கள் நீராட வசதியாக படித்துறைகளை அமைத்தார். குளத்தைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்களையும், அவற்றிற்கான மண்டபங்களையும் கட்டினார்.
  • திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் கோவிலில் உள்ள விஜயநகரப் பேரரசின் குறுநில மன்னன் தெலுங்குச் சோழன் வாலக காமயர் கல்வெட்டில் பொ.யு. 1482 மாசி மாதம் 9, ஞயிற்றுக்கிழமை மகாமகப் புண்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
  • கிருஷ்ணதேவராயர் பொ.யு. 1517 மாசி மாதம் 12-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மகாமகப் புண்ய காலத்தில் மகாமகக் குளத்தில் நீராடினார். பிப்ரவரி 24, 1518-ல் புதன்கிழமை மகாமகம் கும்பகோணத்தில் நடந்ததாகவும் அன்று கிருஷ்ணதேவராயர் மகாமகக்குளத்தில் நீராடி பொன்னும் பொருளும் வாரி வழங்கியதாகவும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
  • பிப்ரவரி 22, 1624-ல் ஞாயிற்றுக்கிழமை மகாமகம் வந்ததாகவும் அன்று ரகுநாத நாயக்கர் குளத்தில் நீராடி தன் எடைக்குச் சமமான பொன்னை தானமாக வழங்கியதாகவும் துலாபார மண்டபத்தில் கல்வெட்டு உள்ளது.
  • உ.வே. சாமிநாதையரின் 'என் சரித்திரம்' வழியாக 1873-ம் ஆண்டின் மகாமகத் திருவிழாவின்போது புலவர்களும், இலக்கியவாதிகளும் கூடி விவாதம் செய்த வித்வ சபைகள் இருந்ததை அறிய முடிகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் சுப்பிரமணிய தேசிகர் தம் பரிவாரங்களுடன் சென்று கும்பகோணம் பேட்டைத் தெருவில் தங்கினார் என்ற குறிப்பும் உள்ளது.
  • 1885-ல் நடைபெற்ற மகாமகத்தில் கும்பகோணத்தில் அளவற்ற கூட்டம் கூடியது. தியாகராஜ செட்டியாரும், திருவாவடுதுறையிலிருந்து சுப்பிரமணிய தேசிகரும் பரிவாரத்துடன் வந்தனர். வித்வ சபைகள் கூட்டம் நடைபெற்றது.
  • 1897-ல் பிப்ரவரி மாதம் நடைபெற்ற மகாமகத்தில் திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவில் உள்ள மடத்தில் தங்கினார். தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில் வித்துவான்களுடைய உபந்யாசங்களும் உரையாடல்களும் நடைபெற்றன. பாம்பன் சுவாமிகள் வந்திருந்தார்.
  • மார்ச் 6, 1909 சனிக்கிழமையன்று (கீலக மாசி 23) மகாமகம் நடைபெற்றது. கும்பகோணம் காஞ்சி மடத்தின் நிர்வாகப் பீடமாக இருந்தது. ஆசாரிய பீடம் ஏறிய பரமாச்சாரியார் மகாமகத்தன்று யானை மீது அமர்ந்தவாறு மகாமகக் குளத்திற்கு நீராடச் சென்றார். தஞ்சை அரச குடும்பத்தினரும், அரசு அதிகாரிகளும் முன் சென்றனர்.
  • பிப்ரவரி 22, 1921 செவ்வாய் (ரௌத்ரி மாசி 11) அன்று நடைபெற்ற மகாமகம் குறித்து சுப்பிரமணிய பாரதியார் கட்டுரை எழுதினார். "தீர்த்த ஸ்தலங்கள், புண்ணிய ஷேத்திரங்கள் எல்லா மதத்தினருக்கும் பொதுவாக அமைந்திருக்கின்றன. பாவத்தைத் துரத்திட விரும்புபவர்க்கு ஒரு மனோ உறுதியை இத்தகைய விழாக்கள் நமக்குத் தெளிவுறுத்துகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். "பாவத்தைக் களைந்து புண்ணியத்தைப் போட்டுக்கொள்வதாகிய ஒரு ராஜசடங்கு" என்றும் எழுதினார். இம்மகாமகத்தின்போது சென்னை முஸ்லீம் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த இருநூறு இளைஞர்கள் வருகை தந்து பொதுமக்களுக்குத் தொண்டாற்றினர். அப்போது பட்டீஸ்வரத்தில் முகாமிட்டிருந்த மகா பெரியவர் இதனை அறிந்து அத்தனை முஸ்லீம் இளைஞர்களையும் அழைத்துப் பாராட்டி அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய சங்கத்திற்கு அன்புப்பரிசாக வெள்ளிக் கோப்பைகளை வழங்கினார்.
  • மார்ச் 10, 1933 வெள்ளிக்கிழமை (ஆங்கிரஸ மாசி 27) நடைபெற்ற மகாமகத்திருவிழா தலைத் தீப ஒளித்திருவிழாவாக கொண்டாடப்பட்டது. 1932-ல் கும்பகோணத்திற்கு முதன் முதலாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. 1931-ல் தமிழ் நாட்டில் முதல் பேசும் படம் வந்தது. மகாமகக் கண்காட்சியில் கருப்பு வெள்ளைப்படம் திரையிடப்பட்டு வண்ணங்களோடு ஒளி வில்லைகள் இலவசமாக காட்டப்பட்டது. முதன்முதலாக பம்பாயிலிருந்து சர்க்கஸ் போட்டனர்.
  • பிப்ரவரி 26, 1945 திங்கட்கிழமை (தாரண மாசி 15) மகாமகம் நடைபெற்றது.
  • பிப்ரவரி 25, 1956 (மன்மத மாசி 13) பதினோராம் ஆண்டிலேயே மகாமகம் நடைபெற்றது. அவ்வகையில் சிறப்பு பெற்றது
  • பிப்ரவரி 14, 1968 புதன்கிழமை (பிலவங்க மாசி 2) மகாமகம் நடைபெற்றது.
  • மார்ச் 1, 1980 சனிக்கிழமை (சித்தார்த்தி மாசி 18) நிகழ்ந்த மகாமகத்தில் கும்பகோணம் கீதா வெளியீட்டகம் கும்பகோணம், மகாமகம், குடந்தையைச் சுற்றிலுள்ள தலங்கள், குடந்தையின் வாழ்ந்த கோமான்கள் என்ற தலைப்புகள் உள்ளிட்ட கட்டுரைகளைக் கொண்ட ஒரு மலரை வெளியிட்டது.
  • பிப்ரவரி 18, 1992 செவ்வாய்கிழமை (பிரஜோத்பத்தி மாசி 6) நடைபெற்ற மகாமகத்தில் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்து கொண்டார். கூட்ட நெரிசலில் மகாமகக் குளக்கரையில் அமைந்திருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து அறுபது பேர் பலியாகினர். இம்மகாமகத்தின் நினைவாக தமிழ்நாடு அரசு சிறப்பு மலரை வெளியிட்டது. இந்நூல் அருளாளர்களின் ஆசியுரைகள், வாழ்த்துச்செய்திகள் மற்றும் பதிப்புரையுடன் வெளியானது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சைவத்தலங்கள், வைணவத்தலங்கள், கும்பகோணம், மகாமகம், கோயில் அமைப்பு, மடங்கள், செப்புத்திருமேனி, கோவிந்த தீட்சிதர் உள்ளிட்ட பல தலைப்புகளில் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டது.
  • மார்ச் 6, 2004-ல் (மாசி 23) நிகழ்ந்த மகாமகத்தின் நினைவாக தமிழ்நாடு அரசு 'மகாமகம் 2004' சிறப்பு மலரை வெளியிட்டது. அந்நூலில் அருளாளர்களின் ஆசியுரைகளுடனும், சிற்பம், ஓவியம், கட்டடம், இசை, இலக்கியம், கல்வெட்டு, புராணம் என்ற பல கூறுகளில் அமைந்த கட்டுரைகளைக் கொண்டுள்ளது. மகாமகம், குடந்தையில் சூரியன் வழிபாடு, பழையாறைத் திருக்கோயில்கள், குடந்தைக் கீழ்க்கோட்டம், ஏட்டுச்சுவடிகளில் குடந்தைப்புராணம், கலம்காரி ஓவியங்கள், கும்பேசர் குறவஞ்சி உள்ளிட்ட பல தலைப்புகளில் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டது.
  • பிப்ரவரி 13, 2016-ல் நடைபெற்ற மகாமகப் பெருவிழாவுக்காக தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டது. இந்த சின்னத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கோபுரம், மகாமகக் குளம், சிவன், பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண், அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டது. சரஸ்வதி மகால் நூலக மகாமக மலர், இந்து சமய அறநிலையத் துறை மலர் ஆகிய இரு மலர்கள் வெளியிடப்பட்டன.

இலக்கியம்

சேக்கிழார் எழுதிய பெரிய புராணம்

பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம் மாமகத்தான் ஆடுதற்கு வந்து வழி படுங்கோயில்

என்று மகாமக விழாவைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

சிவன் கோவில்கள்(12)

மகாமகத்தில் பன்னிரெண்டு சிவன் கோவில்கள் பங்கேற்கின்றன.

  • காசி விஸ்வநாதர் கோயில், கும்பகோணம்
  • ஆதி கும்பேஸ்வரர் கோயில், கும்பகோணம்
  • சோமேஸ்வரர் கோயில், கும்பகோணம்
  • நாகேஸ்வரர் (வில்வவனேஸ்வரர்) கோயில், கும்பகோணம்
  • காளஹஸ்தீஸ்வரர் கோயில், கும்பகோணம்
  • கௌதமேஸ்வரர் (உபவீதநாதர்) கோயில், கும்பகோணம்
  • கோடீஸ்வரர் கோயில், கோட்டையூர்
  • அமிர்தகலசநாதர் கோயில், கலயநல்லூர்
  • பானபுரீஸ்வரர் கோயில், கும்பகோணம்
  • அபிமுகேஸ்வரர் கோயில், கும்பகோணம்
  • ஆத்திகம்பட்ட விஸ்வநாதர் கோயில், கும்பகோணம் மற்றும்
  • ஏகாம்பரேஸ்வரர் கோயில், கும்பகோணம்

வைணவக் கோவில்கள் (5)

மகாமகத்தில் ஐந்து வைணவ கோவில்கள் பங்கேற்கின்றன.

  • சாரங்கபாணி கோவில்
  • சக்ரபாணி கோவில்
  • ராமஸ்வாமி கோவில்
  • ராஜகோபாலஸ்வாமி கோவில்
  • ஆதிவராஹப் பெருமாள் கோவில்

தீர்த்தங்கள், பயன்கள்

மாசிமகம் எனும் புண்ணிய நாளில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவது புண்ணியங்களையும் நற்பலன்களையும் வழங்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. மகாமகக் குளத்தில் பத்தொன்பது தீர்த்தங்கள் உள்ளன.

  • வாயு தீர்த்தம் - நோய்கள் யாவும் நீங்கும்.
  • பிரம்ம தீர்த்தம் - பித்ருக்கள் பாவம் தொலையும்.
  • கங்கை தீர்த்தம் - சாத்வீக மரணம்
  • குபேர தீர்த்தம் - செல்வம் பெருகும்
  • யமுனை தீர்த்தம் - ஆபரணச் சேர்க்கை தங்கும்
  • கோதாவரி தீர்த்தம் - எண்ணியது ஈடேறும்
  • ஈசான்ய தீர்த்தம் - சிவலோகப் பிராப்தி கிடைக்கும்
  • நர்மதை தீர்த்தம் - தேக ஆரோக்கியம் கூடும்
  • சரஸ்வதி தீர்த்தம் - கல்வி, ஞானம் கிடைக்கும்
  • இந்திர தீர்த்தம் - சொர்க்கம் நிச்சயம்
  • அக்னி தீர்த்தம் - கொலைக்கு நிகரான பாவங்கள் நீங்கும்
  • யமன் தீர்த்தம் - எம பயம் விலகும்
  • காவிரி தீர்த்தம் - குழந்தை பாக்கியம் கிடைக்கும்
  • குமரி தீர்த்தம் - அஸ்வமேத யாக புண்ணியம்
  • நிருதி தீர்த்தம் - கண் திருஷ்டி, வீண் கிலேசம் விலகும்
  • தேவ தீர்த்தம் - ஆயுள் பலம் பெருகும்
  • சரயு தீர்த்தம் - குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்
  • வருண தீர்த்தம் - காடு கழனி நிறையும்
  • பயோஷினி தீர்த்தம் - இல்லற ஒற்றுமை மேலோங்கும்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2024, 18:32:19 IST