under review

கார்த்திக் பாலசுப்ரமணியன்

From Tamil Wiki
Revision as of 15:46, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கார்த்திக் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கார்த்திக் (பெயர் பட்டியல்)
பாலசுப்பிரமணியன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாலசுப்பிரமணியன் (பெயர் பட்டியல்)
கார்த்திக் பாலசுப்ரமணியன்
எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன்

கார்த்திக் பாலசுப்ரமணியன் (பிறப்பு: மே 5, 1987) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், விமர்சன கட்டுரைகள் எழுதி வருகிறார். அவர் பணியாற்றும் மென்பொருள் நிறுவனங்களின் பின்புலத்தில் அப்பணி சார்ந்து இருக்கும் பொது பிம்பங்களை கேள்விக்குட்படுத்தும் வகையிலான இயல்புவாத கதைகளை உளவியல் கோணத்திலிருந்து எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

கார்த்திக் பாலசுப்ரமணியன் மே 5, 1987 அன்று ராஜபாளையத்தில் பாலசுப்ரமணியன், காளீஸ்வரி இணையருக்கு மகனாக பிறந்தார். இராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளியில் படித்தார். கோவை அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கார்த்திக் பாலசுப்ரமணியம் பிப்ரவரி 22, 2013-ல் திவ்யா ராஜேந்திரனை மணந்தார். மகன் வியன். சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்தாளர் அசோகமித்திரனை தனது ஆதர்சமாக கொண்ட கார்த்திக் பாலசுப்ரமணியனின் முதல் சிறுகதை 'பொதுப் புத்தி' உயிரோசை இணைய இதழில் வெளிவந்தது. 2017-ம் ஆண்டு முதல் சிறுகதை தொகுப்பான 'டொரினா' வெளிவந்தது. இவருடைய நாவலான 'நட்சத்திரவாசிகள்' மென்பொருள் துறையில் உள்ள சிக்கல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. நமக்கு பொதுவாக தென்படும் ஒளிமிகுந்த பக்கத்திற்கு அப்பால் உள்ள அதன் இருண்ட பக்கங்களை நம்பகமான பாத்திர சித்தரிப்புகள் கொண்டு பேசியதால் வாசகர் கவனத்தைப் பெற்றது. 'இரு கோப்பைகள்' 'லிண்டா தாமஸ்' போன்ற அயல் நாட்டு கதைக்களங்களை கொண்ட கதைகள் கவனம் பெற்றன. இடைவெளி, பேபல் போன்ற சிற்றிதழ்களில் ஆசிரியர் குழுவில் இருந்தார்.

விருதுகள்/ பரிசுகள்

  • டொரினா - க.சீ.சிவக்குமார் நினைவு சிறுகதை விருது
  • நட்சத்திரவாசிகள் - வாசகசாலை சிறந்த நாவல் விருது - 2020
  • க.நா.சு சிறுகதை பரிசு 2021
  • கேந்த்ரிய சாகித்ய அகாதெமி வழங்கும் யுவபுரஸ்கார் விருது நட்சத்திர வாசிகள் நாவலுக்காக-2021

இலக்கிய இடம்

பதாகை நேர்காணலில் [1]கார்த்திக் பாலசுப்ரமணியன் 'அசோகமித்திரனின் எழுத்துக்கள் நகர்ப்புற மத்திய வர்க்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுகின்றன. வாழ்வின் மீதான ஏமாற்றத்தையும், அதன் பொருட்டெழும் இயலாமையையும், சலிப்பையும் ஏற்று ஜீரணித்துக் கடந்து போகும் அவர்களின் வாழ்வே அசோகமித்திரனின் கதைகளில் திரும்பத் திரும்ப பதிவாயிருக்கிறது. அவரும்கூட தனது எழுத்தை சாமானியர்களுக்கே அர்ப்பணிக்கிறார். அவர்களைப் பற்றியே அவர் தொடர்ந்து எழுதினார். அன்றாடங்களின் வழியேகூட அற்புதமான இலக்கியம் படைக்கவியலும் என்னும் நம்பிக்கையை அவரிடமே நான் பெற்றேன்.' என தன் படைப்புலகம் பற்றி குறிப்பிடுகிறார்.

டோரினா சிறுகதை குறித்து கல்குதிரை இதழில் சுனில் கிருஷ்ணன் இவ்வாறு எழுதுகிறார். "இயல்பான அங்கதமும், ஜோடனை அற்ற மொழியும், நுண்ணிய சித்தரிப்பும், வலிந்து உருவாக்காத பூடகத்தன்மையும் கைவந்துள்ளன. அதிகம் எழுதப்படாத களத்தை தன் கதைக்களமாக தேர்வு செய்திருக்கிறார். பெரிதும் எதிர்மறை சித்தரிப்புகள் ஏதுமின்றி, மனிதர்களின் மீது இயல்பான கரிசனத்துடன், அன்றாடத்தின் சிறிய அசைவுகளை, போக்குகளை கூர்மையாக அவதானிக்கிறார். அதன் வழியாக அறக் கேள்விகளுக்கு சென்று சேர்கிறார்."

நூல்பட்டியல்

நாவல்
  • நட்சத்திரவாசிகள் (2019, காலச்சுவடு)
  • தரூக் (2024, காலச்சுவடு)
சிறுகதைத்தொகுப்பு
  • டொரினா (2017, யாவரும்)
  • ஒளிரும் பச்சைக் கண்கள் (2021, காலச்சுவடு)

உசாத்துணை

வெளி இணைப்பு

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:05 IST