குதிரைத் தறியனார்
குதிரைத் தறியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
குதிரைத் தறியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் பிறந்த ஊரின் பெயர் குதிரைத் தறி என்று ஒரு கருத்து உள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை குதிரைத் துறை என பாடாங்கொண்டு அது தென் கர்நாடகத்தின் கடலோர சிற்றூர்களில் ஒன்றாகும் என கூறுகிறார். அவ்வூரின் குதிரை வணிகம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஊரின் பெயரால் அறியப்படும் புலவராக இருக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
குதிரைத் தறியனார் பாடிய பாடல் நற்றிணையில் 296-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தோழியால் தலைவன் பொருளீட்டப் பிரிந்து செல்வதை அறிந்து தன் துயரை தலைவி தோழிக்கு உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- அரசர்களின் பட்டத்து யானையின் புள்ளிகளுடைய முகத்தில் பொன்னாலான நெற்றிப்பட்டம் செய்து அணிவிப்பர்.
- இளவேனில் காலத்தில் பாறைகளுக்கு அருகே வளர்ந்து நிற்கும் கொன்றை மரம் பூத்துக் குலுங்கி நிற்கும். அதன் காய்கள் துளையுடையனவாக இருக்கும்.
- பொருளீட்டப் பிரிந்து செல்லும் கணவரை எண்ணி இல்லமைந்த மகளிர் பிரிவினால் துயரடைவர்.
- உவமை: யானையின் நெற்றிப்பட்டம் போல காயுடைய கொன்றையின் மலர்கள் உள்ளதாக உவமிக்கப்பட்டது.
பாடல் நடை
நற்றிணை - 296
- திணை: பாலை
- கூற்று: தோழியாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.
என் ஆவதுகொல்? தோழி! மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும்,
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப, காதலர்:
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே.
உசாத்துணை
✅Finalised Page