under review

விக்ரமாதித்யன்

From Tamil Wiki
Revision as of 21:51, 27 June 2025 by Jeyamohan (talk | contribs)
விக்ரமாதித்யன்
கவிஞர் விக்கிரமாதித்யன் புகைப்படம் - விகடன் தடம் இதழ்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2021
விக்ரமாதித்யன் இளமையில்
விமர்சனநூல்
விக்ரமாதித்யன் மனைவியுடன்

அ. நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் விக்ரமாதித்யன் (செம்படம்பர் 25, 1947) நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான நவீனக் கவிஞர்களில் ஒருவர். உத்திராடன் எனும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். கவிதை, புனைவிலக்கியம் ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் செப்டம்பர் 25, 1947 அன்று அழகியசுந்தரம், லட்சுமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். . இவருக்கு ஒரு அக்கா மற்றும் இரண்டு தம்பிகள்.

விக்ரமாதித்யன் நான்காம் வகுப்பு வரை திருநெல்வேலி மாவட்டம் அரசு தொடக்கப் பள்ளியிலும், 1958-ம் ஆண்டு தனது குடும்பம் சென்னையில் குடியேறியதால் இடையில் 5 ஆண்டுகள் பள்ளிக் கல்வி இடைநின்றபிறகு மேற்கு மாம்பலத்திலிருக்கும் தொடக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரையும், சீர்காழியில் உள்ள உண்டுஉறைவிட நடுநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையும் பயின்றார். பத்து மற்றும் பதினோராம் வகுப்பை திருநெல்வேலியிலுள்ள வாசுதேவநல்லூர் உயர்நிலைப் பள்ளியிலும், PUC எனப்படும் புகுமுக வகுப்பை பாபநாசத்திலுள்ள வள்ளுர் செந்தமிழ்க் கல்லூரியிலும் பயின்றார்.

தனிவாழ்க்கை

கவிஞர் விக்ரமாதித்யன், மனைவி பகவதி அம்மாள் இணைந்து நடித்த படம்

விக்ரமாதித்யன் மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவைநிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-க்ளீனர், சர்வர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், குன்றகுடி ஆதீன அட்டெண்டர், ஜலகன்னி, தம்போலா, வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு கிளப் கேஷியர், ஊர் ஊராகப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர் என பல பணிகள் செய்திருக்கிறார் என அவருடைய இணையப்பக்கத்தில் கூறுகிறார்

மனைவி பகவதி அம்மாள். இரண்டு மகன்கள் மூத்த மகன் பிரேம்சந்த் நம்பிராஜன்.இளைய மகன் சந்தோஷ் நம்பிராஜன் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.

திரைவாழ்க்கை

2007-ம் ஆண்டு வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் கவிஞர் விக்ரமாதித்யன் முதன் முதலாக நடித்தார். மேலும் சில படங்களில் துணை நடிகராக, சிறிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.

விக்ரமாதித்யனும், மனைவி பகவதி அம்மாளும் இணையராக சேர்ந்து நடித்த இன்ஷா அல்லாஹ் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது

இதழியல்

விக்ரமாதித்யன் சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கம்பதாசன், கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் பாதிப்பில் விக்ரமாதித்யன் கவிதையை அறிமுகம் செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தி.க.சிவசங்கரன், வண்ணதாசன் வழியாக நவீன இலக்கியம் விக்ரமாதித்யனுக்கு அறிமுகமாகியது. காடாறுமாதம் நாடாறுமாதம் வாழ்பவர் என்னும் பொருளில் தனக்கு விக்ரமாதித்யன் என்று பெயர் சூட்டிக்கொண்டார்.

கவிதைகள்

தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதிவந்த விக்ரமாதித்யன் பின்னர் நவீனக்கவிதைகளை எழுதத்தொடங்கினார். 1982ல் பாரதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் கவிஞர் மீரா தனது அன்னம் பதிப்பகம் வாயிலாக நவகவிதை வரிசை என்று அதுவரை வெளிவராத பத்து கவிஞர்களின் கவிதை நூல்களை வெளியிட்டார். அவற்றில் விக்ரமாதித்யனின் 'ஆகாச நீல நிறம்' என்னும் தொகுப்பு இந்திரன் முன்னுரையுடன் வெளிவந்தது.

சிறுகதைகள்

விக்ரமாதித்யனின் சிறுகதைகள் பெரும்பாலும் தன் சொந்தவாழ்க்கையின் கதைவடிவங்கள் என அவர் குறிப்பிட்டிருக்கிறார். 1991 ல் அவர் எழுதிய திரிபு என்னும் சிறுகதை 'அம்மா ஏன் இப்படி?' என்னும் தலைப்பில் குமுதம் இதழில் வெளிவந்தது. அந்தக் கதையின் மூலவடிவம் 1993ல் திரிபு என்னும் சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றது. அவன் அவள் என்னும் சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது

இலக்கிய விமர்சனம்

விக்ரமாதித்யன் சமகாலக் கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்து சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதினார். அவை நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதி 1999-ல் வெளிவந்த கவிமூலம்

ஆவணப்படம்

கவிஞர் ஆனந்த்குமார் இயக்கத்தில் கவிஞர் விக்ரமாதித்யன் பற்றி வீடும் வீதிகளும் எனும் ஆவணப்படம் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது

விமர்சனநூல்

விக்ரமாதித்யனின் கவிதைபற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நாடோடியின் கால்த்தடம் என்ற பெயரில் விஷ்ணுபுரம் பதிப்பதகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • கவிஞர் வைரமுத்து வழங்கும் கவிஞர்தின விருது
  • வைகறை இலக்கிய வாசகர் விருது
  • கவிஞர் தேவமகள் இலக்கிய வாசகர் விருது
  • தமிழ் ஊடகவியலாளர் வழங்கும் மகாகவி விருது
  • கலை இலக்கிய பெருமன்ற விருது
  • 2008-ம் ஆண்டிற்கான விளக்கு விருது
  • 2014-ம் ஆண்டிற்கான சாரல் விருது
  • கவிஞர் வாலி விருது
  • 2021-ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருத

இலக்கிய இடம்

விக்ரமாதித்யன் தமிழ் நவீனக் கவிதையின் இரண்டாவது காலகட்டத்தைச் சேர்ந்தவர். ந. பிச்சமூர்த்தி முதல் பிரமிள் வரையிலானவர்கள் உருவாக்கிய நவீனக்கவிதையை முன்னெடுத்தவர்களில் ஒருவர். அவருடைய கவிதைகளின் தனித்தன்மைகள் இவை.

  • விக்ரமாதித்யன் தமிழ் நவீனக்கவிதையில் இருந்த படிமச்செறிவு, இறுக்கமான மொழி ஆகியவற்றை தவிர்த்து நேரடியான கவிக்கூற்று போல அமையும் கவிதைகளை சரளமான மொழியில் எழுதினார். அன்றாடவாழ்க்கையின் சித்திரங்களையும், அகவயமான எண்ணங்களையும் நேரடியாக வெளிப்படுத்தினார்.அரசியல் மற்றும் சமூகவியல் நிகழ்வுகளுக்கு கவிஞராக எதிர்வினையாற்றினார்.
  • தமிழ் நவீனக்கவிதையில் குறைவாக இருந்த மரபான தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகள் இடம்பெற்ற கவிதைகள் விக்ரமாதித்யனுடையவை. மரபிலக்கியம், சைவசமயம் சார்ந்த உட்குறிப்புகள் கொண்டவை அவை.
  • தமிழ்க் கவிதைகளில் படிமங்களும் உருவகங்களும் இல்லாத கூற்றுகவிதை (Plain poetry) என்னும் வகைமையின் முன்னோடியாக விக்ரமாதித்யனை மதிப்பிடலாம்,

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  1. ஆகாசம் நீலநிறம் (1982)
  2. ஊரும் காலம் (1984)
  3. உள்வாங்கும் உலகம் (1987)
  4. எழுத்து சொல் பொருள் (1988)
  5. திருஉத்தரகோசமங்கை (1991)
  6. கிரகயுத்தம் (1993)
  7. ஆதி (1997)
  8. கல் தூங்கும் நேரம் (2001)
  9. நூறு எண்ணுவதற்குள் (2001)
  10. வீடுதிரும்புதல் (2001)
  11. விக்ரமாதித்யன் கவிதைகள் (2001)
  12. பாதி இருட்டு பாதி வெளிச்சம் (2002)
  13. சுடலைமாடன் வரை (2003)
  14. தேவதைகள்-பெருந்தேவி-மோகினிப்பிசாசு (2004)
  15. சேகர் சைக்கிள் ஷாப் (2007)
  16. விக்ரமாதித்யன் கவிதைகள் - II
  17. தீயின் விளைவாக சொல் பிறக்கிறது
  18. ஊழ்
  19. மஹாகவிகள் ரதோற்சவம்
  20. இடரினும் தளரினும்
  21. சொல்லிடில் எல்லை இல்லை
  22. ஆழித்தேர்
  23. சும்மா இருக்கவிடாத காற்று
  24. அவன் எப்போது தாத்தாவானான்
  25. சாயல் எனப்படுவது யாதெனின்
  26. கவிதையும் கத்திரிக்காயும்
  27. வியாழக்கிழமையைத் தொலைத்தவன்
  28. நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோம்
  29. இழை இழையாய்
சிறுகதைத் தொகுப்புகள்
  1. திரிபு (1993)
  2. அவன்-அவள் (2003)
கட்டுரைத் தொகுப்புகள்
  1. கவிமூலம் (1999)
  2. கவிதைரசனை (2001)
  3. இருவேறு உலகம் (2001)
  4. தமிழ்கவிதை- மரபும் நவீனமும் (2004)
  5. தன்மை-முன்னிலை-படர்க்கை (2005)
  6. எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு (2007)
  7. எல்லாச் சொல்லும் (2008)
  8. நின்ற சொல்
  9. தற்காலச் சிறந்த கவிதைகள்
  10. காடு திருத்தி கழனியாக்கி
  11. பின்னை புதுமை
  12. இந்திர தனுசு (நவீன கவிதை விமர்சனம்)
  13. கங்கோத்ரி - கவிதை உருவான கதை
கடிதத் தொகுப்பு
  1. நகுலன் விக்ரமாதித்யனுக்கு எழுதிய கடிதங்கள்
சுயசரிதைகள்
  1. விக்ரமாதித்யன் கதை
  2. காடாறு மாதம் நாடாறு மாதம்
நேர்காணல் தொகுப்பு
  1. இருட்டின் நிறமும் பகலின் ஒளியும் - விக்ரமாதித்யன் நேர்காணல்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 08:31:43 IST