under review

தேவிபாரதி

From Tamil Wiki
Revision as of 13:52, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:இலக்கிய விமர்சகர்கள் to Category:இலக்கிய விமர்சகர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தேவி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேவி (பெயர் பட்டியல்)
தேவிபாரதி
தேவிபாரதி தன்னறம் விருது

தேவிபாரதி (ந. ராஜசேகரன்) (டிசம்பர் 30, 1957) தமிழில் எழுதும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இடதுசாரிப் பார்வையில் இருந்து காந்தியப்பார்வைக்கு வந்த படைப்பாளி. உளவியல் நெருக்கடிகளை சமூகப் பின்னணியில் நிறுவி ஆராயும் படைப்புகள் என விமர்சகர்கள் குறிப்பிடும் நாவல்களை எழுதியவர்.

பிறப்பு கல்வி

தேவிபாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். ஈரோடு மாவட்டம் கஸ்பாப்பேட்டை என்னும் ஊரில் நல்லமுத்து முத்தம்மாள் இணையரின் மகனாக டிசம்பர் 30, 1957-ல் பிறந்தார். கஸ்பாபேட்டை, ஈரோடு, அறச்சலுர் சென்னிமலை, வடுகபட்டி என ஐந்து ஊர்களிலாக பதினொன்றாம் வகுப்பு [மெட்ரிகுலேஷன்] வரை படித்தார்.

தனிவாழ்க்கை

தேவிபாரதி இரு முறை மணம் புரிந்து கொண்டு மணமுறிவு பெற்றவர். பள்ளிப்படிப்பு முடித்தபின் ஆசிரியர் பயிற்சிபெற்று ஆரம்பப்பள்ளி ஆசிரியராக 2006 ஜூன் வரை பணியாற்றினார். வேலையை உதறிவிட்டு சில காலம் திரைத்துறையில் பணியாற்றினார். அதன்பின் 2008 முதல் ஏழாண்டுகள் காலச்சுவடு மாத இதழிலும் ஓராண்டுக்காலம் புதுயுகம் தொலைக்காட்சியிலும் வேலைபார்த்தார்

இலக்கியவாழ்க்கை

நாற்பதாண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் தேவிபாரதியின் இலக்கிய வாழ்க்கை இரண்டு காலகட்டங்கள் கொண்டது

முதற்காலகட்டம்

தேவிபாரதி மாணவராக இருக்கையில் இந்தியாவில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிரான செயல்பாடுகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு அவ்வழியாக ஈரோடு மாவட்டத்தின் வெவ்வேறு இடதுசாரி மார்க்ஸிய லெனினிய இயக்கங்களுடன் தொடர்புகொண்டார். இடதுசாரி இதழ்களில் அரசியல் கட்டுரைகள் எழுதினார். 1979-ல் முதல் சிறுகதை பிரசுரமாகியது. இடதுசாரி இயக்கங்களின் வீதிநாடகங்கள் போன்றவற்றில் பங்குகொண்டார். அவற்றுக்காக நாடகங்களும் எழுதியிருக்கிறார். 1992-ல் சோவியத் ருஷ்டாவின் உடைவு தேவிபாரதியின் அரசியல் நம்பிக்கைகளையும் மாற்றியமைத்தது. 1992-க்குப் பின் இடதுசாரி இயக்கங்களில் தமிழ்த்தேசியம் சார்ந்து விவாதங்கள் உருவாகி அவை உடைந்தன. ஒருசாரார் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற சாதியப்பின்னணி கொண்ட கட்சிகளுக்குச் சென்றனர். தேவிபாரதி அக்காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுடன் தன் தொடர்புகளை முறித்துக்கொண்டார்.

இரண்டாம் காலகட்டம்

இடதுசாரி இயக்கங்களில் இருந்து விலகியபின் தேவிபாரதி தீவிரமான வாசிப்புக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டார். அவருடைய மணமுறிவும் அப்போது நிகழ்ந்தது. அது உருவாக்கிய தனிமை அவ்வாசிப்புக்கு பின்புலமாக அமைந்தது. டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு அவர்மேல் தீவிரச் செல்வாக்கைச் செலுத்தியது. காந்தியின் எழுத்துக்களைக் கூர்ந்து வாசிக்கத் தொடங்கினார். 1994-ல் காலச்சுவடு இதழில் எழுதப்பட்ட பலி என்னும் சிறுகதை அவருக்கு இலக்கியக் கவனத்தைப் பெற்றுத் தந்தது. காலச்சுவடு இதழிலும் பிற இதழ்களிலும் தொடர்ந்து எழுதினார் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என அசோகமித்திரன், பூமணி, தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

முக்கியமான படைப்புகள்

நாவல்கள்

தேவிபாரதியின் நிழலின் தனிமை என்னும் நாவல் அவருடைய தலைசிறந்த ஆக்கமாக கொள்ளப்படுகிறது. இந்நாவலில் இளமையிலேயே ஒரு பழி வாங்கும் வஞ்சத்தை கொண்டிருக்கும் கதைநாயகனை அந்த வஞ்சமே மெல்லமெல்ல வன்முறையில் இருந்து விடுவித்து மீட்பென ஆகும் சித்திரம் வலுவாகவும் சுருக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தேவிபாரதியின் இரண்டாவது நாவல் நட்ராஜ் மகராஜ். ஒரு சாமானியன் திடீரென்று மாபெரும் பாரம்பரியம் ஒன்றின் அடையாளமாக தன்னை அறிகிறான். அந்த அடையாளம் அவன் சமநிலையை அழித்து அவனைச் சிதைப்பதைச் சுட்டும் நாவல் அது.

நீர்வழிப்படூஉம் தேவிபாரதியின் மூன்றாவது நாவல். குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப்பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைச் சித்தரிக்கிறது இந்நாவல்.

நொய்யல் தேவிபாரதியின் நாவல்களில் இறுதியாக வெளிவந்தது. நொய்யல் ஆற்றை மையமாகக் கொண்டு கொங்குவட்டாரத்தின் பண்பாட்டு மாற்றங்களைச் சித்தரிக்கும் படைப்பு

சிறுகதைகள்

தேவிபாரதியின் சிறுகதைகளில் காந்தியை பற்றிய பிறகொரு இரவு போன்றவை கவனிக்கப்பட்ட படைப்புகள்.

பிற

தேவிபாரதி அரசியல் கட்டுரைகளும், நெடுக்கடி நிலை மற்றும் இடதுசாரி இயக்கங்களில் செயல்பட்டதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் எழுதியிருக்கிறார்.

விருதுகள்

  • நிழலின் தனிமை, ஜெயந்தன் விருது,
  • அறிஞர் போற்றுதும் விருது, திருச்சி
  • தன்னறம் விருது 2022
  • கேந்திர சாகித்ய அக்காதமி விருது 2023

இலக்கிய இடம்

தேவிபாரதியின் இலக்கிய இடம் முதன்மையாக அவருடைய நாவல்களால் உருவாவது. அவருடைய நாவல்கள் நவீனத்துவ நாவல்களின் வடிவ ஒருமையும் அடர்த்தியான மொழியும் சுருக்கமான விவரணையும் கொண்டவை. கதாபாத்திரங்களை விரிவாக சித்தரிப்பதோ, நாடகீயமான தருணங்களை உருவாக்குவதோ இல்லை. நாவல்களில் விவாதத்தன்மையும் இல்லை. வாழ்க்கையின் ஒரு கீற்று தீவிரமாக முன்வைக்கப்பட்டு அதன் வழியாக வாசகனிடம் சில ஆழ்ந்த வினாக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு படைப்பாளியாக தேவிபாரதியின் இடம் என்பது சென்றகாலத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்களில் மீட்பில்லாது அழிபவர்களின் துயரத்தைச் சொன்னார் என்பதுதான். அதன் வழியாக வரலாற்றில் எளியமனிதர்களின் இடமென்ன என்னும் ஆழமான வினாவை எழுப்புகிறார்.

ஆவணப்படம்

தேவிபாரதியின் வாழ்க்கை பற்றி தன்னறம் இலக்கிய அமைப்பு எடுத்த ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது (பாரதி கோபால், வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், அங்கமுத்து, கோகுல், விமல்)

நூல்பட்டியல்

சிறுகதை தொகுதிகள்
  • பலி
  • கண் விழுத்த மறுநாள்
  • மூன்றாவது விலா எலும்பும் விழுதுகற்ற ஆல மரமும்.
  • பிறகொரு இரவு
  • வீடென்ப... (2013)
  • தேவபாரதி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (தன்னறம் வெளியீடு - 2022)
கட்டுரைகள்
  • புழுதிக்குள் சில சித்திரங்கள் (அரசியல் கட்டுரைகள், 2007)
  • அற்ற குளத்து அற்புத மீன்கள் (2012)
  • சினிமா பாரடைஸோ (திரைப்படக்கட்டுரைகள்)
நாவல்கள்
தொகுப்பாசிரியர்
  • சொல்லில் அடங்காத வாழ்க்கை [காலச்சுவடு கதைகள்]

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:31 IST