under review

சுந்தர முதலியார்

From Tamil Wiki
Revision as of 13:45, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:இசைக்கலைஞர்கள் to Category:இசைக்கலைஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுந்தரம் (பெயர் பட்டியல்)

To read the article in English: Sundara Mudaliar. ‎


சுந்தர முதலியார் ( பொ.யு. இருபதாம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சைவ சமயப் பற்றாளர், கர்னாடக இசைப்பாடல்கள் இயற்றியவர். சிவராம சங்கீர்த்தனம் முக்கியமான படைப்பு

வாழ்க்கை குறிப்பு

இவரது தந்தை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்பாசாமி முதலியார். தந்தை அப்பாசாமி முதலியார், மயிலை சித்திரச் சரித்திரம் (ஓவிய அறச்சாலை) கட்டிய வியாசர்பாடி விநாயக முதலியாரின் உடன் பிறந்தவர். இலக்கண இலக்கியங்கள் மற்றும் இசையில் பயிற்சி பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சுந்தர முதலியார், சிவராம சங்கீர்த்தனம் என்னும் முக்கியமான கீர்த்தனைநூலை இயற்றியவர். இதுதவிர மயிலை வழிநடைக்கும்மி என்ற 180 கண்ணிகள் கொண்ட ஒரு நூலையும் இயற்றியிருக்கிறார்.

இவரது புலமை குறித்து அக்காலத்தில் சைவசாஸ்திர நிபுணராகவும், புலவராகவும் அறியப்பட்ட பூவை கலியாணசுந்தர முதலியார் ’பதுமபந்தம்’ என்றொரு சாற்றுக்கவி இயற்றியிருக்கிறார்.

சிவராம சங்கீர்த்தனம்

சிவராம சங்கீர்த்தனத்தின் முதல் பதிப்பு 1876-க்கு முன்னர் அச்சாகி இருக்கிறது. மூன்றாவது பதிப்பு 1904-ல் அச்சானது.மீனாட்சிசுந்தரம் பிள்ளை,உ.வே. சாமிநாதையர்,காஞ்சிபுரம் சபாபதி முதலியார்,தொழுவூர் வேலாயுத முதலியார்,திருமயிலை சண்முகம்பிள்ளை முதலான பல தமிழ்புலவர்கள் இந்நூலுக்கு சிறப்புப்பாயிரம் எழுதியிருக்கிறார்கள்.

திருவொற்றியூர் வடிவாம்பிகை மீது தோத்திரப்பதிகம், 'சுந்தராம்பிகைப்பதிகம்', 'திருச்செந்தூர் சிவசுப்ரமணியர் பதிகம்', 'கொழும்பு கதிரேசன் பஞ்சரத்தினம்', 'திருவள்ளுவநாயனார் வருகைப் பஞ்சகம்', 'திருவள்ளுவ தேவர் தியானாட்டகம்', 'ஆண்டார் குப்பம் முருகக் கடவுள் ஆனந்தக் களிப்பு', 'சென்னைக் கந்தர் திருவிழாக் கொம்மி' முதலிய நூல்களைப் பாடியிருக்கிறார்.

சுந்தர முதலியார் திருவள்ளுவரை ஆன்ம சத்குருவாகக் கொண்டவர். அவர் மீது தனிப்பாடல்களும் இயற்றியிருக்கிறார். சிவராம சங்கீர்த்தனத்தில் திருவள்ளுவர் மீது வருணப் பஞ்சமம், நாமாவளி எனப் பிரபந்தங்களும் பாடியிருக்கிறார். விநாயகர், சரஸ்வதி, சற்குரு, சைவசமயம், சைவசமயாசாரியார், சிவதீர்த்தம் எனத்தொடங்கி இந்நூலில் தலக்கீர்த்தனங்களும் எழுதியிருக்கிறார். பஞ்சபூதத்தலங்கள் தொடங்கி கயிலை, காசி முதல் திருக்கோகர்ணம் வரை 61 தலங்கள் மீது இசைப்பாடல்கள். பின் அம்பிகைத்தலங்கள் 12,, முருகனின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட 13 தலங்கள் மீதும் பாடல்கள் பாடியிருக்கிறார்.

சிவராம சங்கீர்த்தனத்தில் கட்டியம், நாமாவளி, ஊசல், எச்சரிக்கை, லாலி, வாழ்த்து, கும்மி, ஆனந்தக்களிப்பு எனப் பல வடிவங்களில் பல தெய்வங்கள் மீதும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

கீர்த்தனைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சரணங்கள் எழுதியிருக்கிறார். பல கீர்த்தனைகளின் இறுதியில் நாமாவளி என இரண்டடிகள் எழுதியிருக்கிறார்.

எடுத்துக்காட்டு

தில்லை மீது இவர் பாடிய தலப்பாடல் கீர்த்தனை:

ராகம்: கௌளி பந்து, தாளம்: ஆதி
பல்லவி:
நமக்கினி நமன் பயம் ஏது - தில்லை நடராஜனிருக்கும்போது
அனுபல்லவி:
அமரர் முனிவர்தொழப் பொன்னம் பலத்தினில்
ஆனந்தக் கூத்தாடும் அற்புதன் இருக்க (நமக்கினி)

சாற்றுக் கவி

அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் பதுமபந்த வெண்பாவால் சுந்தரமுதலியார் இசைப்பாடல்களுக்கு இயற்றிய சாற்றுக்கவி.

சோதிபதி பூதிச்தி சோதிமதி நீதிவிதி
சோதியிலை யென்னி லென்னத் தோன்றியுறை -நீதில்
மயிலைகற் சர்தர மாகலிஞன் செய்யுள்
வியன்முப் பழச்சலைக்கு மேல்.

நூல் பட்டியல்

  • சிவநாம சங்கீர்த்தனம்
  • தோத்திரப்பதிகம்
  • சுந்தராம்பிகைப்பதிகம்
  • சிவசுப்ரமணியர் பதிகம்
  • கொழும்பு கதிரேசன் பஞ்சாத்தினம்
  • திருவள்ளுவநாயனார் வருகைப் பஞ்சகம்
  • திருவள்ளுவ தேவர் தியானாட்டகம்
  • ஆண்டார் குப்பம் முருகக் கடவுள் ஆனந்தக் களிப்பு
  • சென்னைக் கந்தர் திருவிழாக் கொம்மி

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Mar-2023, 06:19:50 IST