under review

பிரபாகரன் சண்முகநாதன்

From Tamil Wiki
Revision as of 01:03, 14 July 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors in article)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பிரபாகரன் சண்முகநாதன்

பிரபாகரன் சண்முகநாதன் (பிறப்பு: ஜூலை 16, 1999) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், சிறுகதையாசிரியர், இதழியலாளர். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிரபாகரன் சண்முகநாதன் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் செம்மனூர், கல்லலில் நா. சண்முகநாதன், வே. ஜெயந்தி இணையருக்கு ஜூலை 16, 1999-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் பாரதி, ஓவியா. சொந்த ஊர் நாட்டரசன்கோட்டை. ஆரம்பக்கல்வியை பல்லடத்திலுள்ள திருவள்ளுவர் தாய்த்தமிழ் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை ப.வடுகபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மேல்நிலைக்கல்வியை பொங்கலூரிலுள்ள பி.வி.கே.என். மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார். பட்டயக் கணக்காளர் படிப்புக்கான ஆர்டிக்கிள்ஷிப் நிறைவு செய்தார்.

இதழியல்

பிரபாகரன் சண்முகநாதன் விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக கல்லூரி காலத்தில் பணியாற்றினார். தற்போது தினமணி இணையதளத்தில் மொழிப்பெயர்ப்பு, செய்திக் கட்டுரைகள் எழுதிவருகிறார். விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பணியாற்றும்போது செய்திக் கட்டுரைகளையும் கள பிரச்னைகள் சார்ந்த கட்டுரைகளையும் இணையத்திலும் அச்சிதழிலும் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

பிரபாகரன் சண்முகநாதன் கோகுலம், சுட்டி விகடன், தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் போன்ற இதழ்களில் சிறுவயதிலிருந்தே துணுக்குகள், பொது அறிவு தகவல்கள், விடுகதைகள், குழந்தைகள் பாடல்கள் ஆகியவற்றை எழுதினார். 2019-ல் 'நடைமேடை எண் 9 ¾' என்கிற தலைப்பில் ஆரம்ப கால கவிதைகளை தொகுத்து மின்நூலாக வெளியிட்டார். பிரபாகரன் சண்முகநாதனின் முதல் சிறுகதை 'ஒளிந்திருக்கும் வானம்' அரூ இதழில் 2020-ல் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'மருள்' 2023-ல் வெளியானது.

பிரபாகரன் சண்முகநாதனின் கதைகள் யாவரும், அரூ இணைய இதழ்களிலும் விகடன் அச்சிதழிலும் பிரசுரமாகியுள்ளன. ப. சிங்காரம், புதுமைப்பித்தன், ஜெயமோகன், ஹாருகி முரகாமி ஆகியோரை தன் ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • நக்கீரன் இனிய உதயம் இதழ் நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
  • அரூ 2020, 2021 அறிவியல் புனைகதை போட்டியில் இவரின் கதைகள் இறுதிப் பட்டியலில் தேர்வாயின.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • மருள் (2023, யாவரும் பதிப்பகம்)
கவிதைத் தொகுப்பு
  • நடைமேடை எண் 9 ¾

இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2024, 19:28:29 IST