under review

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

From Tamil Wiki
Revision as of 14:06, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இருந்தையூர்க் கொற்றன் புலவன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இருந்தையூர்க் கொற்றன் புலவன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இருந்தையூர் என்பது மதுரையை அடுத்து வைகை ஆற்றின் மேல்பகுதியில் உள்ள திருவிருந்தநல்லூர்.

இலக்கிய வாழ்க்கை

இருந்தையூர்க் கொற்றன் புலவன் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 335-ஆவது பாடலாக உள்ளது. தோழி கூற்றாக அமைந்த குறிஞ்சித் திணைப்பாடல். தலைவியை இரவுக்குறியிற்கண்டு அளவளாவுதல் அரிது என்று கூறி அதற்கான காரணங்களைச் சொல்லும் பாடல்.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்
  • தலைவி, நீண்ட அம்பையும் பல இலக்குகளை ஒரு தொடையில் துளைக்கவிடும் வலியவில்லையும் உடைய வேட்டுவர்களின் தங்கை.
  • வரிசையாக வளைகள் அணிந்த முன்கையையும், நேர்ந்த அணிகலன்களையும் அணிந்த மகளிர்.
  • குறிஞ்சிநில ஊர்: கரிய மலையிலுள்ள அகன்ற பாறையில் சிவந்த தினையைப் பரப்பி மகளிர் சுனையில் பாய்கின்ற சமயத்தைப் பார்த்து மரக்கிளையினின்றும் இறங்கி பசிய கண்ணையுடைய பெண்குரங்குகள் குட்டிகளோடு அத்தினையைக் கைக்கொள்ளும்.

பாடல் நடை

  • குறுந்தொகை: 335 (திணை: குறிஞ்சி)

நிரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல்
வல்விற் கானவர் தங்கைப்
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Nov-2023, 09:06:14 IST