under review

பாஸ்கரதாஸ்

From Tamil Wiki
Revision as of 13:48, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாஸ்கரதாஸ்

பாஸ்கரதாஸ் (மதுரை பாஸ்கரதாஸ்) (ஜூன் 6, 1892 - டிசம்பர் 20, 1952) இசைவாணர், சுதந்திரப்போராட்ட வீரர், நாடக ஆசிரியர். தமிழ்த்திரையுலகின் முதல் திரைப்பாடலாசிரியர்.

பிறப்பு, கல்வி

பாஸ்கரதாஸின் இயற்பெயர் வெள்ளைச்சாமி. தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில்(விளாத்திகுளம்) முத்துச்சாமித்தேவருக்கு மகனாக ஜூன் 6, 1892-ல் பிறந்தார். மதுரையில் தன் பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்கு நாடகக் கலையில் ஈடுபட்டார். ராமனாதபுரம் சேதுபதி மன்னர் இவரைத் தனது அரசவையில் பாடவைத்து 'முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்' என்ற பெயரிட்டார்.

தனிவாழ்க்கை

பாஸ்கரதாஸின் முதல் மனைவி அமிர்தம், இரண்டாவது மனைவி ஒண்டியம்மாள். முதல் மனைவிக்கு ஆறு பிள்ளைகள், இரண்டாம் மனைவிக்குப் பன்னிரண்டு பிள்ளைகள். மகன்கள் வேல்சாமி, சேது, மருதுபாண்டி, தினகரன், மனோகரன். மகள்கள் சரஸ்வதி, இந்துராணி, ஜானகி, முத்துலட்சுமி, காந்திமதி, கமலா. மகள்(சரஸ்வதி) வழிப் பேரன்களான ச.தமிழ்ச்செல்வன், இளங்கோவன் (எ) கோணங்கி இருவரும் தமிழ் எழுத்தாளர்கள். ச. முருகபூபதி மணல்மகுடி நாடகக்குழுவின் நிறுவனர், இயக்குனர்.

அரசியல் வாழ்க்கை

பாஸ்கரதாஸ்

பாஸ்கரதாஸ் காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். கதராடை அணிந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து பாடல்கள் பாடியதால் 29 முறை கைது செய்யப்பட்டார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் காவலர்களால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டர். 1921-ல் காந்தி மதுரை வந்த பொழுது தான் எழுதிய ’காந்தியோ பரம ஏழை சந்நியாசி’ என்ற பாடலைப் பாடினார். காந்தி அப்பாடலைக் கேட்டார்.

பாஸ்கரதாஸ் தீண்டாமையை எதிர்த்தார். கலப்புத்திருமணங்கள் செய்து வைத்தார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி, கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். காந்தி, நாமக்கல் கவிஞர், ஈ.வே.ரா, இ.மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எம்.எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் போன்றோருடன் தொடர்பில் இருந்தார்.

நாடக வாழ்க்கை

பாஸ்கரதாஸ் தமிழகம், கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் அரங்காற்றுகை செய்தார். கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி. ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக இவரது ஏராளமான நாடகங்களில் நடித்தார். மதுரையில் சித்ரகலா ஸ்டுடியோவை நிறுவினார். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்தார். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், நினைவாற்றல், குரல் வலிமை, உடை, ஞானம் ஆகியன பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்தினார்.

பாஸ்கரதாஸ் தேசபக்தி நாடகங்களை எழுதி, அரங்காற்றுகை செய்தார். மக்களின் பேச்சு மொழியில் நாடக வசனங்களை அமைத்தது அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு. 'பாணபுரத்து வீரன்' என்ற நாடகப்பிரதியை எழுதினார். பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள், தேவதாஸ் திரைப்படத்தின் இயக்குநர் பி.வி.ராவ், மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம், பி.டி.ராஜன் போன்றவர்களோடு நட்பு கொண்டிருந்தார்.

இசை வாழ்க்கை

பாஸ்கரதாஸ் தன்னுடைய 16-வது வயதில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைக்கவிஞராக இருந்தார். இவரது முதல் பாடல் தொகுதி 1915-ல் ’பக்தி ரச கீர்த்தனை’ என்ற பெயரில் வெளிவந்தது. 1925-ல் 'இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம்' என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக் கூடியவையாயிருந்ததன. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும், தனிப் பாடல்களும் 'பிராட்காஸ்ட்' என்ற நிறுவனத்தின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ போன்ற பாட்டுக்கள் புகழ்பெற்றவை. எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், டி.கே.ஷண்முகம், சுப்பையா பாகவதர்‌, அரியக்குடி ராமானுஜய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாதய்யர்‌ போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடினர். பாஸ்கரதாஸ் கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்தார். புதிய இசையுருக்களை அமைத்தார். இவருடைய பாடல்கள் 'மதுரகவி பாஸ்கரதாஸ் கீர்த்தனைகள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.

அவர்‌ பாடல்களில்‌ 'காந்தியோ பரம ஏழை சந்நியாசி' பாடல்‌ கே.பி. சுந்தராம்பாள்‌ பாடி புகழ் பெற்றது. ராட்டினம்‌, மதுவிலக்கு, கதர்‌, தீண்டாமை ஒழிப்பு முதலியவை பற்றியும்‌ பல பாடல்கள்‌ பாடினார்‌. ’வரவேணும்‌ மயில்வாகனா’, ’பருவதராஜ குமாரி’, ’கார்த்திகேய காங்கேய’ ஆகிய பக்திப்‌ பாடல்களை இயற்றிப் பாடினார்.

பாஸ்கரதாஸ்

எழுத்து

பாஸ்கரதாஸ் 1917 முதல் 1951 வரை எழுதிய நாட்குறிப்புகள் பாஸ்கரதாசின் மகள் வயிற்றுப் பேரன் ச. முருகபூபதியால் தொகுக்கப்பட்டு ’மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்பு’ எனும் நூலாக பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது. 1925-ல் 'இந்து தேசபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பக்திரசக் கீர்த்தனைகள்' என்ற நூலை வெளியிட்டார். இதன் இரண்டாம் பாகத்தினை 1925- ல் வெளியிட்டார்.

திரை வாழ்க்கை

1930-களில் நாடகக்கலை திரைப்படக்கலை நோக்கி சென்ற போது பாஸ்கரதாஸ் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதுபவராக விரும்பப்பட்டார். நாடக நடிகராகவும், நடிப்புப் பயிற்சியாளராகவும் தொடர்ந்து செயல்பட்டார். நடிகர்களின் அமைப்பிற்கு முன்னோடியாக அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926-ல் தோற்றுவித்தார்.

பாடலாசிரியர்

1931-ல் தமிழ் திரையுலகின் முதல் பேசும் படமான காளிதாஸில் அனைத்துப் பாடல்களையும் எழுதித் தமிழ் திரையுலகின் முதல் திரைப்பாடலாசிரியரானார். இத்திரைப்படத்திற்குப் பாஸ்கரதாஸ் தன்னுடைய நாடகத்திற்கு எழுதிய பாடல்களும் பயன்படுத்தப்பட்டன.

எழுதிய திரைப்பாடல்கள்

பாஸ்கரதாஸ் பத்து திரைப்படங்களுக்கு திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.

  • காளிதாஸ் (1931)
  • வள்ளி திருமணம் (1933)
  • போஜராஜன் (1935)
  • சந்திரஹாசன் (1936)
  • ராஜா தேசிங்கு (1936)
  • உஷா கல்யாணம் (1936)
  • தேவதாஸ் (1937)
  • சதி அகல்யா (1936)
  • ராஜசேகரன் (1937)
  • கோதையின் காதல் (1941)
  • நவீன தெனாலிராமன் (1941)

விருது

1922-ல்‌ சிதம்பரத்தில்‌ நாதஸ்வர வித்துவான்‌ வைத்தியநாத பிள்ளை இவருக்குப்‌ பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்தார்‌. ஆனால்‌ பாஸ்கரதாஸ் அதை நிராகரித்து விட்டார்‌.

மறைவு

பாஸ்கரதாஸ் டிசம்பர் 20, 1952-ல் நாகலாபுரத்தில் காலமானார்.

நினைவு

  • மதுரையில் பாஸ்கரதாஸ் வாழ்ந்த பகுதிக்கு 'மதுரகவி பாஸ்கரதாஸ் சாலை' எனப் பெயரிடப்பட்டது.
  • பாஸ்கர தாஸின் சமாதி நாகலாபுரத்தில் உள்ளது.

நூல்கள்

இவரைப் பற்றிய நூல்கள்
  • மதுரகவி பாஸ்கரதாஸ் - வாழ்வும் பணியும்
  • மதுரகவி பாஸ்கரதாஸ் - இந்திய இலக்கியச் சிற்பிகள் (சாகித்ய அகாடமி)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Oct-2023, 07:03:13 IST