being created

பெருங்கதை

From Tamil Wiki
Revision as of 08:48, 14 April 2024 by Tamizhkalai (talk | contribs)

பெருங்கதை (பொ.யு. ஏழாம் நூற்றாண்டு) சமண மதம் சார்ந்த காப்பியம். குணாட்டியர் என்பவர் இயற்றிய வடமொழி நூலைத் தழுவி கொங்கு வேளிர் என்பவரால் தமிழில் இயற்றப்பட்டது.

பதிப்பு, வரலாறு

இந்த நூலின் முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11 ஆவது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், இவற்றின் கதையை, பதிப்பித்த உ.வே. சாமிநாதையர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதியுள்ளார்.

ஆசிரியர்

கொங்கு நாட்டு விசய மங்கலத்தில் பிறந்த கொங்கு வேளிர் எழுதிய நூல், பெருங்கதை . இது வடமொழி நூலைத் தழுவியது. குணாட்டியர் என்பவர் எழுதிய வடமொழி நூல் பிருகத் கதை. அந்த நூல் தமிழில் பெருங்கதையாக உருவாயிற்று. கொங்கு வேளிர் சமணர். எனவே இந்த நூலில் சமண சமயக் கருத்துகளைக் காணலாம்.

பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் என்று கூறுவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்; வேளாள வகுப்பில் பிறந்தவர். சிற்றரசர்களுள் ஒருவர். இவர் பிறந்த ஊர் கொங்கு நாட்டில் உள்ள விசயமங்கலம் என்று தெரிய வருகின்றது. இவர் தமிழ்ப் புலவர் பலரை ஒன்று சேர்த்து ஆராய்ச்சி செய்யும் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்தக் கழகத்தில் புலவர் பலர் இடைவிடாமல் பழைய நூல்களை ஆராய்ச்சி செய்து வந்தனர். கொங்குவேளிரும் அவர்களோடு கலந்து தமிழ் ஆராய்ந்து விவாதித்து வந்தார்.

அடியார்க்கு நல்லார் என்னும் சிலப்பதிகார உரையாசிரியரின் கூற்றின்படி கொங்குவேளிர் காலத்தில் இடைச்சங்க நூல்கள் வழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது. இவரும் இவரது காலத்துப் புலவர்களும் இடைச்சங்க நூல்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்ததும் தெரிய வருகின்றது.

நீதப் புகழ்உத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்

கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி

மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேள்அடிமை

மாதைக்கொடு உத்தரஞ் சொன்னது வும்கொங்கு மண்டலமே

(கொங்கு மண்டல சதகம் - 99)

கொங்குவேளிர் நூல் செய்துவரும்போது, இவருக்கு விரைவில் மரணம் நேரும் என்று சோதிடர் கூறினர். இதனை அறிந்த கொங்குவேளிர் எப்படியாவது மரணத்தைத் தள்ளிப்போட்டு நூலை முடிக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக மூன்று பிறவி எடுக்கத் திட்டமிட்டார். இதன்படி இல்லறம் ஒரு பிறவி ஆயிற்று. இல்லறத்திலிருந்து நீங்கி, வானப்பிரத்தம் (மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்தல்) மேற்கொண்டார். இது இரண்டாம் பிறவி ஆயிற்று. இதிலிருந்தும் நீங்கித் துறவறம் மேற்கொண்டார். இது மூன்றாம் பிறவி ஆனது. துறவறம் பூண்டு பெருங்கதையை நிறைவு செய்தார் என்று உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

காலம்

கங்க மன்னர்கள் சமணத்தை ஆதரித்தவர்கள். துர்விநீதன் எனும் கங்க மன்னன் பொ.யு. 550 முதல் 600 வரை ஆண்டான். அவன் ‘பிருகத் கதை' யை வடமொழியில் மொழிபெயர்த்தான் என்பர். கொங்குவேளிர் எழுதிய, ‘பெருங்கதை' துர்விநீதனின் மொழி பெயர்ப்பைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருக்கலாம் என்று ஈ.எஸ்.வரதராச அய்யர் குறிப்பிடுகிறார்.

நூல் அமைப்பு

பெருங்கதைக்கு கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற வேறு இரண்டு பெயர்களும் உள்ளன. பெருங்கதை

  • உஞ்சைக் காண்டம்
  • இலாவண காண்டம்
  • மகத காண்டம்
  • வத்தவ காண்டம்
  • நரவாண காண்டம்

என்ற ஐந்து பகுதிகளைக் கொண்டது. அகவற்பாவால் ஆன தொடர்நிலைச் செய்யுள்களால் ஆனது. முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11-ஆவது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், இவற்றின் கதையை, பதிப்பித்த ஐயர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதியுள்ளார்.

குருகுலத்தவனும், கௌசாம்பி நகரத்து அரசனுமாகிய சதானிகனின் மகன் உதயணன். உதயணனின் நண்பன் யூகி ஆவான். உதயணன் வாசவதத்தை, பதுமாவதி, மானனீகை ஆகிய பெண்களை மணந்து இறுதியில் துறவு பூணுவதாகக் கதை முடிகிறது.

தெய்வம் பேணல், ஊழ்வினையின் வன்மை, கல்வியின் பெருமை, நட்பின் திறம், காலம் இடம் ஆகியவை அறிந்து செயல்படுதல், பெண் கல்விச் சிறப்பு, செய்நன்றி அறிதல், ஆசிரியர் மாணவரது இலக்கணங்கள், மந்திரிகளின் இயல்பு, துறந்தோர் பெருமை முதலிய பல குறிப்புகள் இந்நூலில் உள்ளன. பெருங்கதைப் பாடல்கள் நயமிகுந்தவை. இந்நூலின் கதை திருமங்கை ஆழ்வாராலும், சீத்தலைச் சாத்தனாராலும் எடுத்தாளப்பட்டு உள்ளது. சிலப்பதிகார உரைப் பாயிரத்துள் அடியார்க்கு நல்லார் அக்கதையைக் குறிப்பிடுகிறார்.

கதைச் சுருக்கம்

உஞ்சைக் காண்டம்

வத்தவ நாடு அரசன் சதானிகன் சேதி நாட்டு அரசன் சேடகனின் மகள் மிருகாபதியை மணந்து கொண்டான். கருவுற்றிருந்த மிருகாபதியை ஊன் என எண்ணி சிம்புள் என்னும் பறவை தூக்கி சென்றது. ஊன் இல்லையென அறிந்து விபுலமலையில் விட்டுவிட்டது. அவளுக்கு ஆண்மகவு பிறந்தது. மிருகாவதியும் மகனும் பிரமசுந்தர முனிவரால் பாதுகாக்கப்பட்டனர்.

உதயணன் அழகிலும் அறிவிலும் கல்வியிலும், கலையிலும், போர்த்திறத்திலும் சிறந்தவன். முனிவரிடம் சினம் கொண்ட யானையை அடக்கும் மந்திரத்தை கற்று, இந்திரன் தந்த யாழையும் பெற்றான். முனிவரின் மகன் யூகி உதயணனுக்கு தோழனும் மந்திரியுமாக இருந்தான் உதயணன் தன் மாமனது அரசையும் தந்தையின் அரசையும் பகைவரிடம் இருந்து கைப்பற்றி ஆண்டு வந்தான்.

இலாவாண காண்டம்

மகத காண்டம்

இம் மகத காண்டம், '' யாத்திரை போகியது ''முதலாக''பறை விட்டது'' இறுதியாக இருபத்தேழு பிரிவுடையது. இவற்றுள்ளமைந்த அகவற்பாக்களின் அடி சுருக்கம் 55,பெருக்கம் 295 ஆகும்.

உதயணன் மகத நாட்டிற்குச் சென்று இராசகிரியம் என்ற நகரத்தின் மறைந்திருந்தான், மகத நாட்டு மன்னன் தங்கை பதுமாபதியை கண்டு காதல் கொண்டு, மகத நாட்டு மன்னன் தருசகனோடு நட்பு கொண்டு பதுமாபதியை மணந்தான். மகதநாட்டுப் படையுடன் உதயணன் தனது நாட்டிற்குச் செல்வதும் ஆருணி மன்னன் உதயணனோடு போர்புரிய வருதலும், ஆருணியைக் கொன்று வெற்றி பெற்று உதயணன் தன் தலைநகரமாகிய கோசம்பியிற் புகுந்தான்

வத்தவ காண்டம்

நரவாண காண்டம்

மனித வாழ்வின் குறிக்கோள்கள்

  • தெய்வ வழிபாடு சிறந்தது.
  • பெரியோரை வணங்குதல் நல்லது.
  • ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.
  • கல்வி கற்றவனைப் பகைவனும் மதிப்பான்.
  • எந்தக் காலத்திலும் கல்வியைக் கைவிடக் கூடாது.
  • நல்ல துணைவர்களைப் பெற்றவன் கவலை இன்றி வாழ்வான்.
  • ஒரு காரியத்தைச் செய்ய நினைப்பவன் அதற்குரிய துணையையும் கருவியையும் முதலில் பெற வேண்டும்.
  • நன்றி பாராட்ட வேண்டும்.
  • காலத்தைக் கண்ணாக மதிக்க வேண்டும்.
  • யாரிடத்தும் பகை கொள்ளக் கூடாது; யாரையும் இகழக் கூடாது.
  • தருமத்தை உயிராக எண்ணுதல் வேண்டும்.
  • அரண்மனை அமைப்பு - ஆட்சி முறை - அரசன் பண்பு - படை -ஆயுதங்கள் - எந்திரப் பொறிகள் - ஊர்திகள் - கோட்டைகள் - கைத்தொழில் - கோயில் - சாதி - சிற்பம் - இசை - கட்டடம் - நாணயங்கள் - பறவைகள் - விலங்கினங்கள் - மகளிர்க்குரிய விளையாட்டுகள் - கலைகள் - திருமணம் - சடங்கு முறைகள் - விழாக்கள்  முதலிய பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் இக்காப்பியத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

சிறப்புகள்

வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் என்ற பெருமை இதற்கு உண்டு. வேறு எந்தத் தமிழ்க் காப்பியத்திற்கும் இல்லாத தனிச் சிறப்புப் பெருங்கதைக்கு உண்டு என்று அறிஞர் கருதுவர். இது பலவகைக் கருவிகள், பழக்க வழக்கங்கள், கட்டட அமைப்புகள், விளையாட்டுகள் பற்றிய சமுதாயச் செய்திகளை எல்லாம் நுட்பமாகப் பேசும் ஒரு காப்பியம்.

பெருங்கதை பற்றிப் பழைய உரையாசிரியர்கள் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இக்காப்பியத்தைப் பாராட்டி உள்ளார். “கபாடபுரத்தில் இருந்த இடைச் சங்கத்தில் இயற்றப்பட்டவை கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியங்கள்; இந்த இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து செய்ததே உதயணன் கதை” என்று அவர் கூறியுள்ளார் (உதயணன் கதை - பெருங்கதை). பேராசிரியர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர். தொன்மை முதலிய இலக்கணக் கூறுகளை விளக்கும் இவர் இயைபு என்ற இலக்கணத்தை விளக்கி, அதற்குச் சான்றுகளாகச்     சீத்தலைச் சாத்தனாரால்     செய்யப்பட்ட மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட இந்தப் பெருங்கதையையும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களே அன்றி நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், வீரசோழிய உரையாசிரியர் முதலியோர் உரைகளிலும் பெருங்கதை மேற்கோளாக இடம் பெற்றுள்ளது

பாடல் நடை

வாசவதத்தையின் அழகு

யாற்றுஅறல் அன்ன கூந்தல் யாற்றுச்

சுழிஎனக் கிடந்த குழிநவில் கொப்பூழ்

வில்லெனக் கிடந்த புருவம் வில்லின்

அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்

பிறையெனச் சுடரும் சிறுநுதல் பிறையின்

நிறையெனத் தோன்றும் கறையில் வாள்முகம்

அரவென நுடங்கு மருங்குல் அரவின்

பையெனக் கிடந்த ஐதேந்து அல்குல்

கிளியென மிழற்றும் கிளவி கிளியின்

ஒளிபெறு வாயின் அன்ன ஒள்ளுகிர் ....

வேயெனத் திரண்ட மென்றோள் வேயின்

விளங்கு முத்தன்ன துளங்குஒளி முறுவல்

காந்தள் முகிழ்அன்ன மென்விரல் காந்தள்

பூந்துடுப்பு அன்ன புனைவளை முன்கை

(பெரு. வத்தவ காண்டம், 11: அடிகள் 64 - 79)

காஞ்சனமாலையின் துயரம்

நாவலந் தண்பொழில் நண்ணார் ஓட்டிய

காவலன் மகளே கனங்குழை மடவோய்

மண்விளக் காகி வரத்தின் வந்தோய்...

பொன்னே திருவே அன்னே அரிவாய்

நங்காய் நல்லாய் கொங்கார் கோதாய்

வீணைக் கிழத்தீ வித்தக உருவீ...

புதையழல் அகவயின் புக்கனையோ...

பெரு. இலாவாண காண்டம், 18 : அடிகள் 76 - 85)

உசாத்துணை

பெருங்கதை-தமிழ் இணைய கல்விக் கழகம்

பெருங்கதை, மூலமும் உரையும் (பொ.வெ. சோமசுந்தரனார்), தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.