அஷ்ட பிரபந்தம்
அஷ்ட பிரபந்தம் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு வைணவச் சிற்றிலக்கியங்களின் தொகுப்பு.
ஆசிரியர்
அஷ்ட பிரபந்தத்தை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். திருவரங்கத்தில் வாழ்ந்தவர்.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திருவரங்கத்தில் வாழ்ந்தபோது அரங்கனைப் புகழ்ந்து திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல் திருநாமம் முதலிய பிரபந்தங்களைப் பாடினார் அரங்கனைத் தவிர வேறு தலத்துப் பெருமாளைப் பாடாத இயல்பினர். வேங்கடத்தான் இவரால் பாடப்பெற வேண்டுமென எண்ணி இவர் கனவில் தோன்றி, “வேங்கடத்தான் மீது சில நூல்கள் பாடுவாயாக!’ எனக் கூற, வேங்கடமலையில் குரங்குகள் அதிகமாக இருப்பதால் ‘அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடேன்’ என இகழ்ந்துரைத்தார். பிறகு வேங்கடத்தான் அய்யங்காருக்கு கண்டமாலை என்னும் நோயை உண்டாக்க, அது வேங்கடத்தான் உண்டாக்கியது என்பதை உணர்ந்த பின்னர் அத்தெய்வத்தின்மீது திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்னும் நூல்களைப் பாடியதாகத் தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம் (ப.36) கூறுகின்றது.
நூல் அமைப்பு
அஷ்ட பிரபந்தம் பின்வரும் எட்டு பிரபந்தங்களை(சிற்றிலக்கியங்கள்) கொண்டது.
- திருவரங்கத்தந்தாதி – 105 பாடல்கள்
- திருவரங்கக் கலம்பகம் – 105
- திருவரங்கத்து மாலை- 112
- திருவேங்கட மாலை -103
- திருவேங்கடத்தந்தாதி-101
- அழகர் அந்தாதி- 101
- 108 திருப்பதி அந்தாதி-114
- ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள் -32
அஷ்டப் பிரபந்தத்தில் சரிபாதி நூல்கள் அந்தாதிகளாக அமைந்தவை. அஷ்டப் பிரபந்தத்தில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 790.
அஷ்டப் பிரபந்தங்களுள் திருமால் தொடர்பான பல தொன்மக்கதைகள் இடம் பெறுகின்றன. அவ்ற்றுள் சில
- கஜேந்திர மோட்சம்
- ஹம்சாவதரம்
- ஆலிலை பள்ளி கொண்ட கதை
- கடல் கடைந்த கதை
- துருவன் கதை
- மத்ஸ்யாவாதர வரலாறு
- கூர்மவதாரம்
- வராகவதாரம்
- நரசிங்கஅவதாரம்
- வெள்ளி நாட்டங் கெடுத்த கதை
- கார்த்த வீரீயன் இராவணனைக் கொன்ற கதை
- பரசுராமன் கார்த்த வீரியன் யுத்தம்
- அகலிகை சாப விமோசனம் கதை
- தசரதராமன் - பரசுராமன்கதை
- இராமன் கதை
- காகன் கதை
- மாரீசன் கதை
- மராமரம் எய்தகதை
- கஷக்கு முடிகவித்தகதை
- சூர்பணகை கதை
- கரனைக் கொன்றகதை
- இராமபிரான் - சடாயு கதை
- கபந்தனைக்கொன்ற கதை
- கடலைச் சுட்டகதை
- பர்வதமலை - அனுமன் கதை
- இராமபிரான் - வைகுந்தம் கதை
- பலராமன் அஸ்தினாபுரக்கதை
- பலராமன் - யமுனா நதி கதை
- கண்ணன் - பூதக்கதை
- சகடாசுரன் கதை
- ததிபாண்டன் கதை
- ஐந்துதலை நாகம் கதை
- சகடாசுரன் கதை
- மந்தரை கதை
- ஆயமகளிர் கதை
- எருது அடங்கிய கதை
- உரலில் கட்டிய கதை
- கன்றால் விலிவெறிந்தகதை
- பகாசுரன் கதை
- கேசி கதை
- பிரமன் - திருமால் கதை
- கண்ணன் - காட்டுத் தீகதை
- கோவர்த்தனகிரிகதை
- ஆயர் -பரமபதக்கதை
- கண்ணன் - பாரிஜாத தருவைக் கொணர்ந்த வரலாறு
- கண்ணன் - பிள்ளைகளை மீட்டகதை
- குருந்தமரக்கதை
- நாரதர் கதை
- யானை கொன்ற வரலாறு
- உக்கிரசேனராசன் வரலாறு
- கண்டாகர்ணன் முக்தி கதை
- வாணன் கதை
- சிசுபாலனைக் கொன்ற வரலாறு
- திரௌபதி துகில் கொடுத்த கதை
- மல்லரைக் கொன்றக் கதை
- சூரியனை மறைத்த கதை
- அசுவத்தாமன் கதை
- அறுபுரஞ் செற்ற கதை
- இறந்த அரசர்களைக் காட்டிய வரலாறு
- ஆண்டாள் கதை
- இராவணன் கதை
- சிவபிரான் திரிபுரமெரித்த கதை
- சிவபிரான் பிறை சூடிய கதை
- சிவபிரான் - காக்கை வரலாறு
- சிவன் அரவம் பூண்ட கதை
சிறப்புகள்
" பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் செய்துள்ள இப்பிரபந்தங்களெல்லாம் , ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ள நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த திவ்வியப் பிரபந்தங்களின் ஸாரார்த்தங்களும் , நாதமுனிகள் முதலிய ஆசாரியர்களுடைய அருளிச் செயல்களின் விசேஷார்த்தங்களும் பொதிந்திருத்தல் மட்டுமேயன்றி சொல் நோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும் துறையின் நோக்கோடு எந்நோக்கும் காண இலக்கியமாகியும் இருப்பன" என்று வை.மு.சடகோப ராமானுஜாச்சார், சே. கிருஷ்ணமாச்சாரியார், வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் எழுதிய மூவர் உரை குறிப்பிடுகிறது.
விவாதங்கள்
அஷ்டப்பிரபந்தம் ஒருவரால் இயற்றப்படவில்லை; மணவாளதாசர் என்னும் பெயரைக் கொண்ட வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டது என்னும் கருத்தும் நிலவுகிறது. இதற்கு வலுவான சான்றாதாரம் இல்லை என்றாலும் அக்கருத்து முழுதாகப் புறந்தள்ளப்படவில்லை. ஏனெனில் அவர் எழுதிய அஷ்டப்பிரபந்தத்தில் உள்ள எட்டு பிரபந்தங்களில் திருவரங்கக் கலம்பகம் மொழிநடையாலும் யாப்பமைதியாலும் பெரிதும் வேறுபட்ட ஒன்றாகத் திகழ்கிறது. இக்கலம்பகத்தில் அவர் மரபைத் தழுவி பா எழுதிய போதிலும் பல பதுமையான பாவகைகளையும் இயற்றியிருக்கிறார். தமிழில் உள்ள விருத்த அமைப்பு முறைகளைக் சுட்டிக்காட்டி இலக்கணத்தை முறைப்படுத்திய விருத்தப்பாவியல் என்ற நூல் கூறாத பல அமைப்பு முறைகளில் குறிப்பாக அறுசீர், எண்சீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தப்பாக்களில் மிகுதியான புதுமைகளைப் படைத்திருக்கிறார். அவர் கட்டளைக் கலித்துறையில் மிகுதியான செய்யுட்களை இயற்றியிருந்தாலும் விருத்தப்பாவில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார்.
உசாத்துணை
- அஷ்ட பிரபந்தம்-வை.மு.சடகோப ராமானுஜாச்சார், சே.கிருஷ்ணமாச்சாரியார், வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரையுடன், தமிழ் இணைய கல்விக் கழகம்
- வைணவச் சிற்றிலக்கியங்களில் தொன்மைக்கூறுகள், ஐ.பிரேமலதா
✅Finalised Page