under review

புஷ்பராணி இளங்கோவன்

From Tamil Wiki
Revision as of 11:17, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
தமிழ்ப்பிரியா

புஷ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா) (முத்தையா புஷ்பராணி) (1952 – மே 7, 2020) ஈழத்துப் பெண் எழுத்தாளர், சமூகப்பணியாளர். கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

புஷ்பராணி இளங்கோவன் யாழ்ப்பாணம் சுன்னாகம் ஏழாலையில் சி. முத்தையா, பரமேசுவரி இணையருக்கு 1952-ல் பிறந்தார். ஏழாலை சன்மார்க்க வித்தியாசாலையிலும், மல்லாகம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். யாழ்ப்பாணத்தில் தனியார் கணக்குப் பரிசோதகர் காரியாலயம் ஒன்றில் கணக்குப் பதிவாளராகவும் பணிபுரிந்தார். திருமணத்தின் பின்னர் பிரான்ஸ் நாட்டில் கணவர் இளங்கோவனுடன் தற்பொழுது வசித்து வருகிறார்.

சமூகப்பணி

புஷ்பராணி இளங்கோவன் மனிதநேயச்செயற்பாடுகள், தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபட்டார். இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடத்திலிருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கினார்.

புஷ்பராணி இளங்கோவன்

இலக்கிய வாழ்க்கை

புஷ்பராணி இளங்கோவன் 'தமிழ்ப்பிரியா' என்ற புனைபெயரில் 1970-ம் ஆண்டு முதல் சிறுகதை, நாடகம், மெல்லிசைப்பாடல், இசையும் கதையும், கவிதை ஆகியவை எழுதி வந்தார். ஈழநாடு, சிந்தாமணி, சுடர், இந்திய சஞ்சிகைகள் இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கை, தினகரன், வீரகேசரி, ஈழமுரசு நாளிதழ் மல்லிகை, சிரித்திரன், கலாவல்லி, அமிர்தகங்கை ஆகியவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து இவரது ஆக்கங்கள் வெளிநாடுகளில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றன. குங்குமம் இதழ் வெளியிட்ட அக்கரைச்சிறப்பு மலரைத் தயாரித்தார்.

மறைவு

புஷ்பராணி இளங்கோவன் மே 7, 2020-ல் காலமானார்.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • காம்பு ஒடிந்த மலர்
  • ஒரு நியாயம் விழிக்கிறது

உசாத்துணை


✅Finalised Page