நானாற்பது (பாட்டியல்)
நானாற்பது (நாற்பது) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். காலம், இடம் பொருள் போன்றவை கருப்பொருளாக வர நாற்பது வெண்பாக்களால் அமைவது நானாற்பது என்று இலக்கண விளக்கப் பாட்டியல் சூத்திரம் கூறுகிறது. வீரசோழிய உரைகாரர் நாநாற்பது நூல்களைப் ‘பின் மொழி எண் தொகை’ என்று குறிப்பிடுகிறார்.
காலம் இடம்பொருள் கருதி நாற்பான்
சால உரைத்தல் நானாற் பதுவே
நாற்பது என்னும் எண்தொகையால் குறிக்கப்பெறும் நான்கு நூல்கள் கீழ்க்கணக்கில் உள்ளன. அவற்றுள் கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் என்னும் பொருள் பற்றிப் பாடப்பெற்றவை. கார்காலத்தைக் கருப்பொருளாகக் கொண்ட கார் நாற்பது காலம் சார்ந்த நானாற்பது. போர்க்களம் பற்றிக் கூறும் களவழி நாற்பது இடம் சார்ந்தது. எஞ்சிய இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ் இரண்டும் முறையே துன்பம் தரும்(கூடாத) செயல்களும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலுங்கூட, ‘இன்னா’, ‘இனிதே’என்னும் சொற்கள் அமைந்துள்ளன.
பாடல் நடை
இன்னா நாற்பது
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3
கார் நாற்பது
கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!-
'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து. 2
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- நாநாற்பது-மூலமும் உரையும்
இதர இணைப்புகள்
✅Finalised Page