first review completed

இளங்கோவடிகள்

From Tamil Wiki
Revision as of 19:49, 28 August 2023 by Tamizhkalai (talk | contribs)
இளங்கோவடிகள் சிலை காரைக்குடி
இளங்கோவடிகள் சிலை சென்னை

இளங்கோவடிகள் (இளங்கோ) தமிழ்ப்புலவர். சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இளங்கோ என்பது இயற்பெயர். சேரலாதனுக்கு மகனாகப் பிறந்தார். சேரன் செங்குட்டுவனின் தம்பி. இளவரசர் பட்டத்தை துறந்து சமண சமயத்தைத் தழுவி துறவியானார். இளங்கோ அடிகள் என்று அழைக்கப்பட்டார். சீத்தலைச் சாத்தனார் இவரின் நண்பர். கண்ணகி வழிபாட்டில் இலங்கை வேந்தன் கயவாகு கலந்து கொண்டான் என்பதை வைத்து இளங்கோவடிகளின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்பர். இளங்கோவடிகள் அரசு துறந்து குணவாயில் கோட்டத்தில் இருந்ததாக நம்பிக்கை உள்ளது. இது தற்போது கேரள மாநிலத்தில் 'திருவஞ்சைக்களம்' என்று அழைக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை இயற்றினார். சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையில் தெய்வமாகிய கண்ணகி தேவந்திமேல் வந்து தோன்றி அங்கு வந்திருந்த இளங்கோவடிகளை நோக்கி சிலப்பதிகாரத்தை இயற்றும்படி சொன்ன பாடல் உள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களிலும் இடம்பெறும் பதிகங்களில் "இளங்கோ சிலம்பு பாடச் சாத்தனார் கேட்டார்" எனவும், "சாத்தனார் மணிமேகலை பாட இளங்கோ கேட்டார்" எனவும் கூறப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

”யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை” என பாரதியார் மதிப்பிட்டார்.

இளங்கோ சிலை பூம்புகார்

இளங்கோ விழா

சென்னையில் இளங்கோ சிலை நிறுவப்பட்டது. ம.பொ. சிவஞானம் ஏப்ரல் 24, 1956-இல் சென்னை செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் தமிழரசுக்கழகத்தாரின் உதவியுடன் இளங்கோ விழாவைத் துவக்கினார். சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூரெடுத்த காதையில் சித்திரைத் திங்களின் முழு நிலவு நாளைக் கணக்கில் கொண்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

நினைவிடம்

  • காரைக்குடியில் இளங்கோவடிகளின் சிலை உள்ளது
  • பூம்புகாரில் இளங்கோவடிகளின் சிலை உள்ளது

நூல் பட்டியல்

இளங்கோ பற்றிய நூல்கள்
  • இளங்கோவடிகள் யார்? - தொ.மு.சி. ரகுநாதன்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.