அழகர் கிள்ளை விடு தூது
அழகர் கிள்ளை விடு தூது, தமிழின் தூது நூல்களுள் ஒன்று. இதன் பாட்டுடைத் தலைவர் திருமாலிருஞ்சோலை தலத்தில் எழுந்தருளியுள்ள சௌந்தரராஜப் பெருமாள். திருமாலிருஞ்சோலை அழகர் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைச் சொல்ல கிளியைத் தூதாக அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது. இதனை இயற்றியவர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு.
பிரசுரம், வெளியீடு
அழகர் கிள்ளை விடு தூது நூலை, முதன் முதலில், 1905-ல், மு. வேணுகோபாலசாமி நாயுடு பதிப்பித்தார். அவரைத் தொடர்ந்து உ.வே. சாமிநாதையர். மிக விரிவான ஆய்வை மேற்கொண்டு, பல ஏட்டுச் சுவடிகளுடன் ஒப்பிட்டு, 1938-ல், உரையுடன் பதிப்பித்தார். அதன் பின் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், முல்லை நிலையம் உள்ளிட்ட பல பதிப்பகத்தினர், சங்குப்புலவர் உள்ளிட்ட பலரது உரைகளுடன் இந்நூலைப் பதிப்பித்துள்ளனர்.
ஆசிரியர் குறிப்பு
அழகர் கிள்ளை விடு தூது நூலை இயற்றியவர், சொக்கநாதக் கவிராயர் என்று அழைக்கப்படும் பலபட்டடை சொக்கநாதப் புலவர். பலபட்டடைக் கணக்கு எழுதும் மரபில் வந்ததால் இவருக்கு இப்பெயர். இவர், மதுரையில் வாழ்ந்தவர். இவரது காலம் பொ.யு. 17 ஆம் நூற்றாண்டு. சுப்ரதீபக் கவிராயர், உமறுப்புலவர், தாயுமானவர், திரிகூடராசப்பக் கவிராயர், வீரமாமுனிவர், கடிகை முத்துப் புலவர் போன்றோர் இவரது சமகாலத்தவர்.
இவர் இயற்றிய பிற நூல்கள்:
- பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது
- மாதை வேங்கடேசேந்திரன் பண விடு தூது
- சண்பகநல்லூர்ச் சிவபெருமான் வண்டுவிடு தூது
- தேவை உலா
- விஞ்சைக் கோவை
- மதுரை யமக அந்தாதி
- நாரசிங்கன் வளமடல்
- கரந்தைக்கோவை
- கரந்தை வருக்கக்கோவை
சொக்கநாதப் புலவர், தூது நூல்கள் மட்டுமே நான்கு இயற்றியுள்ளார். தனிப்பாடல்கள் 75 இயற்றியுள்ளார்.
நூல் அமைப்பு
திருமாலிருஞ்சோலைத் தல இறைவனாகிய அழகர் என்னும் சௌந்தரராஜப் பெருமாள், உலா வரும்போது அவரைக் கண்ட பெண் ஒருத்தி அவரது அழகில் மயங்கி அவர் மீது காதல் கொள்கிறாள். அழகரிடம் தன் காதலைத் தெரிவித்து அவருடைய மாலை ஒன்றை வாங்கிவருமாறு கிளியைத் தூதாக அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது. அகப்பொருள், புறப்பொருள் என்ற இரு தூது வகைமையுள் இந்நூல் அகப்பொருள் சார்ந்த நூல். காப்புச் செய்யுள் தவிர்த்து இந்நூல், 239 கண்ணிகளைக் கொண்டுள்ளது. கலி வெண்பாவால் பாடப்பட்டுள்ளது.
அழகர் கிள்ளை விடு தூது நூலில் அழகர் மலையின் சிறப்புகள், அங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் சிறப்புகள், தூது செல்லும் கிளியின் சிறப்புகள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் கிளியைப் பற்றிய செய்கிகள் விரித்துரைக்கப்படுகின்றன. கிளியின் பெருமை, சிறப்பு, தூதுக்குரிய பிற பொருள்களின் சிறப்பின்மை ஆகியவற்றை ஆசிரியர் விளக்கியுள்ளார். இரண்டாவது பகுதியில், பாட்டுடைத் தலைவனாகிய அழகரின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. பத்து அவதாரங்களில் அவர் செய்த அருட்செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. தூதின் சிறப்பு அங்கமாகிய மலை, நதி, நாடு, ஊர், மாலை, யானை, குதிரை, கொடி, முரசு, ஆணை எனப் பத்து உறுப்புகள் கொண்ட தசாங்கம் இடம் பெற்றுள்ளது. மூன்றாவது பகுதியில், இறைவன் கோடைத் திருவிழாவின்போது உலா வந்ததும், தலைவி அவன் மீது கொண்ட காதலும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. இறுதிப் பகுதியில் தூது செல்லும் கிளியின் தகுதியும், தூதுரைக்கும் முறையும் விளக்கப்பட்டுள்ளன. ‘மருமாலை நீவாங்கி வா' என கிளியைத் தலைவி மாலை வாங்கி வரச் சொல்வதோடு நூல் நிறைவுறுகிறது.
பாடல்கள்
கிளியின் பெருமையைக் கூறும்போது, பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், கீழ்காணும் பாடலில் கிளி, திருமாலின் திருநாமமாகிய அரி என்னும் பெயரையும், அவர் படுத்துறங்கும் பாய் ஆகிய ஆலிலையின் நிறத்தையும் கொண்டு, மன்மதனுக்கு வாகனமாக விளங்குவதை.
கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
நீர்கொண்ட பாயல் நிறங்கொண்டு-சீர்கொண்ட
வையம் படைக்கு மதனையுமேற் கொண்டின்பம்
செய்யுங் கிளியரசே...
-என்று குறிப்பிட்டுள்ளார்.
கிளியின் சிறப்பை,
எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை ஆயினும்உன்
ஐவண்ணத் துள்ளே அடங்குமே - மெய்வண்ணம்
பார்க்கும் பொழுதில்உனைப் பார்ப்பதிஎன்பார் என்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்...
- என்ற வரிகளில் குறிப்பிட்டுள்ளார்.
தலைவனாகிய திருமாலின் அழகைக் கண்ட தலைவி கூறும் பாடல்:
பின்னழகு முன்னழகாம் பேரழகைக் காணுமுன்னே
முன்னழகைக் கண்டேனான் மோகித்தேன்-பின்னழகு
தானேகண் டாலுந் தனக்குத் துயர்வருமென்
றேனோரை நோக்கி யெழுந்தருள-ஆனோன்
விமலத் திருமுகமு மென்மார்பின் மேவும்
கமலத் திருமுகமுங் கண்டேன்-
மாலை வாங்கி வரக் கிளியை வேண்டுதல்:
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மின்என்பாய்-நீதி
அடுப்பவர் யாவர்க்கும் ஆடித் தியாகம்
கொடுப்பவன் இல்லையென்று கூறான்-தடுக்கும்
அருமாலை நீக்கும் அழகன் புயத்து
மருமாலை நீவாங்கி வா
- என்ற வரிகளுடன் நூல் நிறைவடைகிறது.
மதிப்பீடு
சொற்சுவை, பொருட்சுவை , அணி நயம், சிலேடை, இரட்டுற மொழிதல், உவமைச் சிறப்பு எனப் பல்வேறு இலக்கிய நயங்களுடன் அழகர் கிள்ளை விடு தூது நூல் அமைந்துள்ளது. பல்வேறு புராண, இதிகாசச் செய்திகள், மக்கள் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அழகர் கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தூது இலக்கிய நூல்களுள், தூதுப் பொருளின் பெருமையை, சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் தொன்மையான நூலாக அழகர் கிள்ளை விடு தூது நூல் மதிப்பிடப்படுகிறது.
இந்நூல் பற்றி, இதனைப் பதிப்பித்திருக்கும் உ.வே. சாமிநாதையர், “கிளியினைத் தூதுவிடுவதாக மேற்கொண்ட பிறகு, எந்த எந்த வகையாக வெல்லாம் அதைப் பாராட்ட முடியுமோ அந்த அந்த வகையாகப் பாராட்டியிருக்கின்றார். கல்வி, கேள்வி, அனுபவங்களிலே கிளியைப் பற்றி அறிந்தவற்றையெல்லாம் எப்படியோ தொடுத்துக் கோத்திருக்கின்றார். கிளியைப் போலத் தூது செல்லுவதற்குரிய பொருள் வேறில்லையென்று சொல்லுவதற்காக நிகண்டிலே கிளியின் பெயர்களாக உள்ள பதங்களும், புராண இதிகாசங்களும், சிலேடையணி முதலிய கருவிகளும், இவருக்குத் துணையாக நிற்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
உசாத்துணை
- அழகர் கிள்ளை விடு தூது: தமிழ் இணைய மின்னூலகம்
- அழகர் கிள்ளை விடு தூது: சென்னை நூலகம்
- அழகர் கிள்ளைவிடு தூது: ப்ராஜெக்ட் மதுரைத் திட்டம்
- அழகர் கிள்ளை விடு தூது: நூலகம் தளம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.