கலைச்செல்வி (இதழ்)

From Tamil Wiki
கலைச்செல்வி
கலைச்செல்வி
கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி

கலைச்செல்வி ( 1958 -1966 ) இலங்கையில் இருந்து வெளியான இலக்கிய இதழ். இலங்கையின் முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டது. சிறுகதை, நாவல் வளர்ச்சியில் குறிப்பிடத்த பங்களிப்பாற்றியது.

வெளியீடு

கலைச்செல்வி (சிற்பி  (சிவசரவணபவன்) ஆசிரியராக 1958 ஆடி மாதம் முதல் வெளியானது. முன்னரே வெளிவந்து நின்றுவிட்ட ஈழதேவி இதழின் தொடர்ச்சியாக கலைச்செல்வி வெளிவருவதாக முதல் இதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல் இதழில் கலைச்செல்வியைத் தமிழ் இலக்கிய  மன்றம் (கந்தரோடை, சுன்னாகம்) வெளியிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பாலன் வெளியீடு (மார்கழி 1962, கார்த்திகை 1962) என்றும் அறிவிக்கப்பட்டு கலைச்செல்வி வெளியாகியுள்ளது. அக்காலகட்டத்தில் செட்டிகுளம் பகுதியிலிருந்து கலைச்செல்வி வெளியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைச்செல்வி இதழின் ஆரம்பத்தில் இணை  ஆசிரியர்களாக தமிழ்வேள், சிற்பி ஆகியோர் இருந்தனர். துணை ஆசிரியர்களாக தமிழ்ச் செல்வன், ஈழத்துச் சோமு பணியாற்றினர். பின்னர் கெளரவ ஆசிரியர்களாக தமிழ்வேள், சிற்பி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர். இறுதிக் காலத்தில் ஆசிரியராகச் சிற்பியும், துணை ஆசிரியராக மு.கனகராசனும், கெளரவ ஆசிரியராக இ.வைத்தியலிங்கமும் இருந்திருக்கிறார்கள். 

கலைச்செல்வி 1958 முதல் 1966 வரையாக 8 ஆண்டு காலத்தில் 71 இதழ்கள் வெளியாகியது.

நோக்கம்

கலைச்செல்வி முதலிதழில் ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ  வேண்டும். தமிழனின் மொழி,கலை,கலாச்சாரம் ஆகியவற்றிற்கு , அவற்றின் தொன்மை மணம் குன்றாது புதுமை மெருகேற்ற வேண்டும். இவைதான் கலைச்செல்வி;யின் நோக்கங்கள்’ என அறிவிக்கப்பட்டிருந்தது

உள்ளடக்கம்

கலைச்செல்வி இலக்கிய இதழாக வெளிவந்தது. கூடவே பொதுரசனைக்குரிய சினிமா செய்திகளையும் வெளியிட்டது. தொழிற்சாலைகள் பற்றிய செய்திகள் போன்றவையும் வெளிவந்தன

சிறுகதை

கலைச்செல்வியில் இலங்கையர்கோன், சம்பந்தன், தெளிவத்தை ஜோசப், வ.அ.இராசரத்தினம், மு.தளையசிங்கம், சொக்கன், சாந்தன்,  செ.கணேசலிங்கன், ஈழத்துச் சோமு, புதுமைப்பிரியை, உமா, யாழ்நங்கை, செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், பவானி, செ.யோகநாதன் (இனியன்), எஸ். பொன்னுத்துரை,  நாவேந்தன் , தேவன்(யாழ்ப்பாணம்) , முனியப்பதாசன், தெணியான்  , து.வைத்திலிங்கம், பானுசிம்ஹன் , இ.நாகராஜன், மு.பொன்னம்பலம் (தீவான்) , சி.வைத்தியலிங்கம், யாழ்வாணன் போன்ற பலர் சிறுகதைக்ள் எழுதினர். மு.தளையசிங்கத்தின் முக்கியமான சிறுகதைகளிலொன்றான 'புதுயுகம் பிறக்கிறது' கலைச்செல்வியின் தீபாவளி மலரில் (1962) வெளிவந்துள்ளது

கலைச்செல்வி வவுனியாவில் 1962ல் அது நடத்திய கலைவிழாவை ஒட்டி ஒரு சிறுகதைப்போட்டியை நடத்தியது. முதல் மூன்று பரிசுகளை முறையே செம்பியன் செல்வன் ( இதயக்குமுறல்), யோ.பெனடிக்ற் பாலன் (மெழுகு வர்த்தி) , எம்.எம்.மக்கீன் (ரிவொலூஷன்) ஆகியோர் பெற்றனர்

நாவல்

உதயணனின் 'இதயவானிலே', 'மனப்பாறை', சிற்பியின் 'உனக்காகக்  கண்ணே', 'அன்பின் குரல்', 'சிந்தனைக் கண்ணீர்', செம்பியனின் செல்வனின் 'கர்ப்பக்கிருகம்', அகிலனின் 'சந்திப்பு'  என நாவல்கள் கலைச்செல்வியில் தொடர்களாக வெளிவந்துள்ளன. செ.யோகநாதனின் வரலாற்றுக் குறுநாவலான 'மலர்ந்தது நெடுநிலா' வெளியிடப்பட்டது கலைச்செல்வி நடத்திய நாவல் போட்டியில் முதற்பரிசு மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு' நாவலுக்கு அளிக்கப்பட்டது

கவிதை

கலைச்செல்வியில் மஹாகாகவி , சாலை இளைந்திரையன், தில்லைச்சிவன், யாழ்வாணன், திமிலைத்துமிலன், முருகையன், நீலாவணன், அம்பி, ச.வே.பஞ்சாட்சரம், பா.சத்தியசீலன்  , கல்வயல் வே.குமாரசாமி என்று பலரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.

இலக்கியவிவாதம்

முற்போக்கு இலக்கியம் பற்றிக் கார்த்திகேசு சிவத்தம்பி   கார்த்திகை 1962, தீபாவளி மலரில் தொடங்கிய விவாதத்தில் மு.தளையசிங்கம் , நவாலியூர் சோ.நடராசன் ஆகியோர் பங்கெடுத்தனர்

மலர்கள்

தீபாவளி மலர்கள், பொங்கல் மலர்களை கலைச்செல்வி வெளியிட்டது. அத்துடன் வவுனியாக் கலைவிழா  மலர் (ஆவணி 1962), ஆண்டு மலர் (ஆகஸ்ட் 1959), மகளிர் மலர் (ஆவணி 1960)  வளரும்  எழுத்தாளர் மலர் (சித்திரை 1959)  என்று பல இலக்கிய மலர்களை வெளியிட்டுள்ளது.

இலக்கிய இடம்

’கலைச்செல்வி சஞ்சிகை இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதொரு சஞ்சிகை. இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த முக்கியமானதொரு சிற்றிதழ். இலக்கியத்தின் பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்களுக்கும் களமாக விளங்கியதோர் இதழ் கலைச்செல்வி’ என்று ஆய்வாளர் வ.ந.கிரிதரன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

'கலைச்செல்வி' சஞ்சிகையும் அதன் இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன்